Tuesday 26 June 2012

மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!



மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள “மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா” முடக்கிப் போடப் போகின்றது.

தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்து, ஆழ்கடலில் நெடுந்தொலைவு சென்று நம் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களால்தான், இந்தியாவின் புரதத் தேவையில் பாதியளவு நிறைவு செய்யப்படுகிறது. இம்மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள “மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா” முடக்கிப் போடப் போகின்றது.

மீன் பிடித் தொழிலில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தை வகிக்கும் தமிழ்நாட்டிலுள்ள 2.5 லட்சம் மீனவர்கள், 6200 மீன்விசைப் படகுகள், 50 ஆயிரத்து 360 பாரம்பரியக் கலன்களைக் கொண்டு அண்மைக்கடல், தூரக்கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நம் நாட்டின் மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்கென ’70-களில் நீலப்புரட்சித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தின்படி, விசைப்படகுகள் வாங்கக் கடனுதவி, டீசலுக்கு மானியம் போன்றவை கடந்த 35 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா, விசைப்படகுகள் மற்றும் பாரம்பரியப் படகு வகைகளுக்கிடையே உள்ள பாரதூரமான வேறுபாடுகளையோ, அவற்றின் மீன்பிடித் திறன்களையோ கருத்தில் கொள்ளாமல் அனைத்தையும் “மீன்பிடிக் கலன்” என ஒரே வார்த்தையில் வரையறுத்து, அனைவரையும் மீனவர்கள் என்று பொதுவில் வகைப்படுத்தி விதிமுறைகளையும் தண்டனைகளையும் வகுத்துள்ளது.

இச்சட்டப்படி, எல்லா வகைப் படகுகளும் மத்திய அரசிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறும்போதே பிடிக்கப்போகும் மீன் இனங்கள், எந்த இடத்தில் எத்தனை மாதங்கள் மீன்பிடிக்கப்படும், எந்த முறையில் மீன்பிடிப்பு நடக்கும் முதலான அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்; என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்; இதற்கான அனுமதிகளையும் மீனவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். பிழைப்புக்கா, வணிகத்துக்கா, ஆய்வுக்கா என்றெல்லாம் துருவிக் கொண்டிருக்கப் போகிறது அரசு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வரும் கடலை மீனவர்களிடம் இருந்து பிரித்து, அவர்களை நாட்டினுள் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளைப் போல கேள்வி மேல் கேள்வி கேட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பறித்தெடுக்கத் துடிக்கிறது, அரசு.

நாட்டின் பாதுகாப்புக் காரணத்தையோ அல்லது அரசு தீட்டும் கடல் அல்லது மீன்வளம் சார்ந்த திட்டத்தைக் காட்டியோ மீனவர்களுக்குத் தரப்படும் அனுமதிகளையும் சலுகைகளையும் ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. திடீரென சில குறிப்பிட்ட வகை மீனினங்களைப் பிடிக்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரப்படவுள்ள தண்டனைகளையும் இச்சட்டம் பட்டியலிட்டுள்ளது. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால், படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணையாகக் கட்ட வேண்டும். அப்படகில் இருந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சோதிக்க விடாமல் தடுப்பவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம்; பன்னிரண்டு கடல்மைல் தாண்டினால் ஒன்பது லட்சம் அபராதம்; படகின் சொந்தக்காரருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் உண்டு. மீன்களும் பறிமுதல் செய்யப்படும். படகின் நீளம் 12 மீட்டருக்கு மேல் இருந்தாலும் தண்டனை உண்டு.

கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்துவருவதால், 12 கடல்மைல்களைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் இன்றைய நிலைமையாக உள்ளது. விசைப்படகேறி, கடலில் நெடுந்தொலைவு பயணித்து, பல நாட்கள் தங்கியிருந்து, மீன் பிடிக்க ஒரு முறை போய்வரும் செலவு மட்டுமே ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இந்நிலையில், இவ்வாறான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவருமாயின் மீனவர்கள் இனி கடல் இருக்கும் திசைப்பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாது.

விதிமுறைகளை மீறும் மீனவரைக் கைது செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறித்தல் போன்றவற்றிற்கு இழப்பீடும் கோரமுடியாது. சந்தேகத்தின்பேரில் தவறான நபர்களைப் பிடித்தாலும், அவற்றிற்காக கடலோரக் காவல்படையைக் குற்றம் சாட்ட முடியாதபடிக்கு இச்சட்டம் கடலோரக்காவல் படைக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் கொடுக்கிறது.

ஏற்கெனவே மீனவர்களின் வாழிடங்கள் உல்லாச விடுதிகள் கட்டுவதற்கென கரையோரங்களிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தீவிரமாகியிருக்கும் உலகமயத்தினால் அதிகரிக்கும் கப்பல் போக்குவரத்து, கடலோர நகரங்களிலிருந்து தினமும் கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகள், சாக்கடைகள், அனல் மின்நிலைய சாம்பல்கள் போன்றவையும், ஏற்கெனவே இருந்த மீன்வளத்தை அழித்துக் கொண்டு வரும் சூழ்நிலையில், மீனவர்களின் மேல் இன்னுமோர் பேரிடியாக ஏன் இந்தக் கெடுபிடிச் சட்டம்?

இதற்கு இந்திய அரசு, “ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிற நாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும் மீன் பொருள்களையும் ஏற்றுமதி செய்வதென்றால், இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்க வேண்டுமென்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கிணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை” எனக் கூறுகிறது.

வேளாண்மைத் துறை அமைச்சகமோ, கடல்வழியாக பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதல்கள் போல இனி நடைபெறாமல் தடுக்க, நமக்கு உரிமையுள்ள கடல் பரப்பை நிர்ணயிப்பதும், அதில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் அவசியம் என்பதால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகச் சொல்கிறது. ஆனால் உண்மையோ வேறு.

1990-களில் நரசிம்மராவ் அரசால் அறிவிக்கப்பட்ட மீன்வளக் கொள்கை, ‘கூட்டு முயற்சி’ எனும் பெயரில் பன்னாட்டு ஆலைக் கப்பல்கள் இந்தியக் கடல்களில் மீன்பிடிக்க உரிமம் வழங்கியது. இம்முடிவுதான், மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் படிப்படியான தாக்குதலைத் தொடுத்திட வழிகோலியது. இந்தியக் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிறுவனங்களின் கப்பல்கள், நவீன கருவிகளைக் கொண்டு முட்டை, குஞ்சு வேறுபாடின்றி அப்படியே மீன் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து, மீன்களை இரகம் வாரியாகப் பிரித்தெடுத்து இன்னொரு கப்பலுக்குக் கைமாற்றி விடுகின்றன. எஞ்சிய மீன்குஞ்சுகளையும், முட்டைகளையும், சில சமயங்களில் துடுப்பு வெட்டப்பட்ட சுறாவின் உடல்களையும் கழிவாகக் கடலில் கொட்டிவிடுகின்றன. மீன்வளத்தின் ஆதாரமான முட்டைகளைத் துப்புரவாகத் துடைத்தொழித்து வரும் இவற்றின் அகோரப் பசிக்கு இடையூறாக இருக்கும் இந்திய மீனவர்களை முற்றிலுமாக கடலிலிருந்து துரத்துவதுதான் ஏகாதிபத்தியத்தின் அடுத்த இலக்கு.

அந்த நோக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சட்டம், அதற்காகக் கடுமையான நிபந்தனைகளையும், தண்டனைகளையும் வரையறுத்துள்ளது. அதே நேரத்தில் மீனவர்களை அத்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் மாற்றுத் தொழில் கற்றுத் தரும் நூற்றுக்கணக்கான தன்னார்வக் குழுக்கள், சுனாமி பேரழிவுக்குப் பிறகு இந்தியக் கடற்கரை நெடுக வலை விரித்துள்ளன. ரொட்டி தயாரிப்பு, உள்ளீடற்ற செங்கல் தயாரிப்பு போன்ற சிறுதொழில்களுக்கு மீனவர்களை மாற்றும் சதித்திட்டத்தில் நாகை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் கரையோரங்களில் இவை இயங்கி வருகின்றன. ஒரே நேரத்தில் அடக்குமுறை சட்டம் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மீனவர்கள் மீது ஏகாதிபத்தியமும் இந்திய அரசும் போரைத் தொடுத்துள்ளன.

இச்சட்டத்திற்கு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ள பரவலான எதிர்ப்புக்கூட ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின் சதிகளுக்கெதிராகப் போராடாமல், இலக்கற்ற போராட்டங்களாகவே உள்ளன. அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து, நமது கடல்வளத்தைக் கொள்ளைகொண்டு போகவரும் ஏகாதிபத்தியங்களை விரட்டியடிக்கும் திசையில் மீனவர்களின் போராட்டம் முன்னேறாவிடில், நமது கடல் இனி நம்முடையதாக இருக்காது.

புதிய ஜனநாயகம், April 1, 2010

Monday 11 June 2012

ஒரு நிஜக் கதாநாயகன்..... [சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன்]




சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.

தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழுகிறான்.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.
அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு, மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை.

கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொறுத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…

Saturday 2 June 2012

பரதவர்களின் நாட்டார் மருத்துவம்


ஆ. சிவசுப்பிரமணியன்

பரதவர்களிடம் வழங்கும் மருத்துவத்தினையும் நாம் (1) இயற்கை சார்ந்த நாட்டார் மருத்துவம் ,(2) மந்திர-சமய மருத்துவம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பரதவர்களின் இயற்கை சார்ந்த நாட்டார் மருத்துவம் என்பது கடல் விலங்குகள், தாவரங்கள், கரையிலுள்ள விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

அவர்களின் மந்திர-சமய மருத்துவம் என்பது அவர்கள் பின்புற்றும் கத்தோலிக்க சமயத்தின் புனிதர்கள், தேவாலயங்கள், துறவிகளின் கல்லறைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

பரதவர்களின் இயற்கை சார்ந்த நாட்டார் மருத்துவம்:
பரதவர்களின் இயற்கை சார்ந்த நாட்டார் மருத்துவத்தினை 1) உட்கொள்ளும் மருந்து, 2) மேற்பூச்சி மருந்து என இரண்டாகப் பகுக்கலாம். அவர்கள் பயன்படுத்தும் உட்கொள்ளும் மருந்துகளில் சில வருமாறு.
உடல் பலத்திற்கு: காரல் மீன் அவித்து சாறு எடுத்துக் குடித்தல் (காரல் மீன் – வளர்ச்சியுறத சிறு மீன்)
குறுக்கு நோவு: ஆமைக்கறி உண்டல்
இரத்தமூலம்: ஆமை ரத்தம், ஆமை வார் சூப் குடித்தல்
தாய்ப்பால் பெருக: பிள்ளைச்சுறா அவித்து உண்ணல்.
சோகைக்கு: காக்கையைச் சுட்டு உண்ணுதல்
நிர் பிரியாமல் இருந்தால்: வெள்ளெலியை உரலில் இட்டு இடித்துப் பின்னர் அதனை அவித்து உண்ணுதல்
இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவர், சிறுமியருக்கு: இரைமீன் உண்டல்(மற்றொரு மீனால் விழுங்கப்பட்டு ஒரளவு செறித்தமீன் இரைமீனாகும்).

வெளிப்புச்சு மருந்து
குழந்தைகளுக்கு வரும் கரப்பானுக்கு: வெள்ளாட்டிற்கு வேப்பங்குழையை மட்டும்போட்டு சில நாட்கள் வளர்த்து, பின்னர் அதனை வெட்டி அதன் இரப்பையின் உள்ளே உள்ளதை எடுத்து கரப்பான் மேல் வைத்துக் கட்டுதல்.
பரு உடைய: 1) ஓணானைக் கொன்று அதன் இரப்பையை அப்படியே வைத்துக் கட்டுதல். 2) பன்றிக் கொழுப்பை வைத்துக் கட்டுதல்.
விட்டில் கொசுத் தொல்லையை நீக்க: கடற்பாசியை நெருப்பிலிட்டு புகை போடுதல்.


பரதவர்களின் நாட்டார் ம்ருத்துவத்தில் இடம் பெற்றுள்ள சில மந்திர மருத்துவ முறைகளைக் காண்போம்.


புனித நீர் – புனித எண்ணெய் மருத்துவம்
தண்ணீர், எண்ணெய் ஆகியனவற்றைத் தெய்வங்கள் மற்றும் புனிதர்களின் உருவங்களுடனும் இறந்த குருக்களின் கல்லறைகளுடனும் தொடர்புபடுத்துவதன் மூலம் அவற்றிற்கு மந்திர ஆற்றல் (Magic Power) எற்படுவதாக இவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு மந்திர ஆற்றல் பெற்ற தண்ணீர் , எண்ணெய் ஆகியனவற்றை நோய் தீர்க்கும் ம்ருந்தாகப் ப்யன்படுத்தும் வழக்கம் பரதவர்களிடம் உள்ளது.

கத்தோலிக்கத் தேவாலயங்களில் சில ஆலயங்கள் புண்ணியத்தலங்களாக( பசலிகா – Basilica) எற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தலங்களில் உள்ள மேரியன்னை அல்லது புனிதரின் உருவத்தின் பாதங்களில் சிறிதளவு நீரை ஊற்றிக்கழுவி அதனைப்ப்டித்து வைத்து நோய்யாளிகளுக்குக் கொடுத்தால் நோய் தீரும் என்பது இவர்களிடையே நிலவும் ஒரு பரவலான நம்பிக்கையாகும்.

ஈஸ்டர் இரவில் ( புனித வெள்ளியை அடுத்து வரும் சனிக்கிழமை முடிந்து புனித ஞாயிறு பிறக்கும் நள்ளிரவில்) தூத்துக்குடியிலுள்ள பனியமாதா தேவாலயத்தில் மெழுகுதிரிகள் எற்றிவைக்கப்படும். தேவாலயத்திற்கு வரும் பக்தர்களும் வீட்டிலிருந்து மெழுகுதிரிகளையேற்றிக் கொண்டு வருவார்கள். பூசையின் ஒரு கட்டத்தில் எல்லா மெழுகுதிரிகளும் நீர் நிரம்பிய ஓர் அண்டாவில் தோய்த்து அணைக்கப்படும். இந்த அண்டாவிலுள்ள நீரானது புனித நீராகக் கருதப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் மாற்றி ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் வாழும் வீட்டில் ஏதோ ஒரு குறைப்பாடு இருப்பதாக நம்புகிறார்கள். இதனைப் போக்கமேற்கூறிய புனித நீரையெடுத்து வந்து வீட்டின் உட்பகுதியில் தெளிக்கிறார்கள். சிலர் பாதிரியாரை (Parish Priest) அழைத்து வந்து சமய மந்திரங்களைக் கூறி அதனைத் தெளிக்கச் செய்கிறார்கள். இதன் முலம் குடும்பத்தினர் நோய்வாய்ப்படாமல் இருப்பார்கள் என்பது இவர்கள் நம்பிக்கையாகும்.

சிலர் தேவாலயத்தின் ஆல்டர் பகுதியில் எரியும் எண்ணெயினை எடுத்து வந்து பாட்டில்களில் பத்திரபடுத்திக் கொள்கிறார்கள். தலைவலி மற்றும் உடலில் எற்படும் வலிகளுக்கு இந்த எண்ணெயினைத் தடவினால் வலி போய்விடும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். மேல் பூச்சாகமட்டுமின்றி ஒன்றிரண்டு சொட்டுக்களை உள்மருந்தாகவும் சில நேரங்களில் பயன்படுத்துவதுமுண்டு.

கி.பி 1885ல் காலமான ரொண்டோ என்ற போர்ச்சுக்கீசிய கத்தோலிக்கத் துறவியின் கல்லறை தூத்துக்குடி நகரிலுள்ள ஒர்னாலிஸ் மேல்னிலைப் பள்ளியின் எல்லைக்குள் உள்ளது. இவர் இப்பகுதியிலுள்ள பனிமயமாதா தேவாலயத்தில் பங்குக்குருவாக இருந்து இப்பகுதி மக்களிடையே மிகுந்த செல்வாக்குடையவராக விளங்கியுள்ளார். இவருடைய கல்லறைக் கல்வெட்டு கல்லறையின் மேற்புறத்தில் அமைந்துள்ளது.

கருவுற்று குறைப்பிரசவமான பெண்கள் மீண்டும் குறைப்பிரசவம் ஆகிவிடக் கூடாது ஏன்பதற்காக இக்கல்லறைக்கு வந்து கல்லறைக் கல்வெட்டுக் கல்லின்மீது நல்லெண்ணையை ஊற்றிப் பின்னர் அதனை வழித்தெடுத்து மீண்டும் பாட்டிலில் அல்லது பாத்திரத்தில் ஊற்றிக் கொள்கிறார்கள். இந்த எண்ணெயைத் தினமும் வயிற்றின் மீது தடவி வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். சுகப்பிரசவம் வேண்டுமென்ற விருப்பத்தினடிப்படையில் குறைப்பிறசவத்திற்காளாகாத கருவுற்ற பெண்ளும் இதுபோல் செய்வதுமுண்டு.

புன்னைக்காயல் என்னும் கடற்கரைக் கிராம்த்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கற்சிலுவையொன்று சிறு மண்டபத்தினுள் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இதனைத் திருமணச்சிலுவை என்று பரதவர்கள் அழைக்கிறார்கள். இச்சிலுவையின் உச்சியில் பால் ஊற்றி கீழெ வழியும் பாலை மீண்டும் பாத்திரத்தில் சேகரித்துக்கொள்கிறார்கள். இதனை நோய்ள்ளவர்களுக்குப் பருகுக் கொடுத்தால் நோய் குணமாகும் என்பது இவரிகளிடையே நிலவும் நம்பிக்கையாகும். பாலுக்குப் பதிலாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயினைப் பயன்படித்துவதுமுண்டு. இந்த எண்ணெயினை உடலில் தோன்றும் கட்டிகள், காயங்களின் மீதும், வலிதோன்றும் பகுதியிலும் பூசினால் குணமேற்படும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள்.

இதே ஊரில் 1889ல் பிறந்த ஜான்சிங்கராயர்லோபோ என்பவர் தூத்துக்குடிக் கத்தோலிக்க மறை மாவட்டத்திலுள்ள பல தேவாலயங்களில் பங்கு குருவாகப் பனி புரிந்து 13-4-1972ல் காலமானார். இவரது உடல் புன்னைக்காயலில் உள்ள புனித சவேரியார் தேவாலயத்தின் பிரதான நுழைவு வாயிலின் முற்றத்தில் தென்புறமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது கல்லறை எதுவும் கட்டப்படாமல் கோவில் முற்றத்தின் தளத்தின் மீதே, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறைக் கல்வெட்டு அமைந்துள்ளது.

பெரும்பாலும் செவ்வாய்க்கிழமையன்று நல்லெண்ணெய், தேங்காயொண்ணேய், பால் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினை இக்கல்லறைக் கல்வெட்டின் மீது ஊற்றி அதனைத் துணியால் பிழிந்தெடுத்துச் சேகரித்து நோய்தீர்க்கும் உள் மருந்தகவும் வெளி மருந்தகவும் பயன்படுத்துகிறார்கள். இது எழுபதுகளில் புதிதாகத் தோன்றிய நோய் தீர்க்கும் கல்லறையாகும்.

பதினாறாம் நூற்றாண்டில் பரதவர்களிடயே சமயப்பணி புரிந்து வந்த ஹென்றிகு ஹென்றிக்ஸ் எனும் சபைத் துறவி கி.பி 1600 பிப்ரவரியில் புன்னைக்காயலில் காலமானார், அவரது உடல் தூத்துக்குடி பனிமயமாதாக் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. ”அவரது கல்லறைக்குக் கூட்டம் கூட்டமாக வந்து புனித அந்தோணியார் மற்றும் புனிதர்களிடம் உதவி வேண்டுதல் போல வெண்டுதல் செய்தனர். அவரது கல்லறையைச் சுற்றிலும் மெழுகுதிரிகளையேற்றினார்” என்று 1601 ஆம் ஆண்டு சேசுசபைக் கடிதம் குறிப்பிடுகிறது. [ ச இராசமாணிக்கம் 1967 :]. எனவே 17ஆம் நூற்றாண்டின் கல்லறைகளில் சென்று வேண்டுதல் செய்யும் பழக்கம் பரதவர்களிடம் தோன்றிவிட்டது எனலாம்.

புனிதர்கள் மற்றும் சமயக் குருக்கள் மூலம் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்வதாகவே இச்செயல்கள் அமைகின்றன மற்றபடி, கல்லறைகளை வழிப்படுவதாகக் கருதக்கூடாது என்று கத்தோலிக்க சமயக் குருக்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நடைமுறையில் இக்கல்லறைகள் வழிப்பாட்டுக்குரியனவாகவும், மந்திர ஆற்றல் உடையனவாகவும் பெரும்பாலான பரதவர்களால் கருதப்ப்டுகின்றன.



தொற்று வியாதிகளுக்கான சிகிச்சை
காலரா, அம்மை போன்ற கொடிய தொற்று நோய்கள் பரதவர்கள் வாழும் பகுதிகளில் பரவினால் செபஸ்தியார் என்னும் புனிதரின் உருவத்தை வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். (இந்துக்களிடம் மாரியம்மன் வசிக்கும் இடத்தைப் பரதவர்களிடம் புனித செபஸ்தியார் வகிக்கிறார்.) இவ்வாறு ஊர்வலமாகச் சப்பரத்தில் எடுத்து வரும்பொழுது உப்பையும், மிளகையும் கலந்து வீதிகளில் தூவுவதுமுண்டு.

டைஃபாய்டு, அம்மை, காலரா, மஞ்சட்காமாலை போன்ற தொற்று நோய்களுக்கு சிறுவர் சிறுமியர் ஆளாகினால் புனித அந்தோணியார், புனித ராயப்பர்(பீட்டர்) ஆகிய புனிதர்களில் ஒருவரை நினைத்து நோய் குணமானால் தலையை மொட்டையடிப்பதாகவும் காதில் வாளி அணிவதாகவும் வேண்டிக் கொள்ளுகிறார்கள். (தொற்று நொயின்றி வேறுபல உடற்பிணிகளுக்கும் சிலர் இவ்வாறு வேண்டிக் கொள்வதுமுண்டு.)

இவ்வேண்டுதலின்படி மொட்டையடிப்பதனை “பட்டம் வைத்தல்” என்றழைக்கிறார்கள். இது இந்துக்கள் மொட்டை அடித்துக் கொள்ளும் முறையிலிருந்து மாறுபட்டதாகும். நெற்றிப்பகுதிக்குச் சற்று மேலே ஒரு கயிற்றினைத் தலையைச் சுற்றி வட்ட வடிவில் கட்டியதைப் போல முடியானது ஒரே சீராகக் கத்தரித்து விடப்பட்டு எஞ்சிய தலைப்பகுதி முழுவதும் மொட்டையடிக்கப்பட்டிருக்கும். அந்தோணியாரை வேண்டிக் கொண்டவர்களால் இம்முறை பின்பற்றப்படும். இது “அந்தோணியார் பட்டம்” என்றழைக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள கடற்கரைச் சிற்றூர்களில் வாழும் பரதவர்கள் நாகர்கோவிலில் கோட்டாறு என்னும் பகுதியிலுள்ள புனித சவேரியார் தேவாலயத்திற்குச் சென்று பட்டம் வைத்துக் கொள்வதும் உண்டு.

அந்தோணியார் பட்டத்தை விடச் சற்று அகலமாக வட்ட வடிவில் கத்தரிக்கப் பட்ட பகுதி காட்சி தரும். இப்பட்டத்தைச் “சவேரியார் பட்டம்” என்றழைக்கிறார்கள்.

இராயப்பரை வேண்டிக் கொண்டவர்கள் தலையின் பின்பகுதியில் வட்டமாக மொட்டையடித்துக் கொல்கிறார்கள். இது “குருபட்டம்” என்றழைக்கப்படும்.

எனவே சிறுவர் சிறுமியரின் தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கும் முறையிலிருந்தே அவர்கள் எந்த புனிதரை வேண்டி முடி காணிக்கை அளித்துள்ளார்கள் என்பதனை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
முடி காணிக்கையுடன் காதில் வாளி அணிந்து கொள்வது “வாளிபூரூதல்” எனப்படுகிறது. வாளிபூரூவதில் முடிகாணிக்கையில் காணப்படும் வேறுபாடு கிடையாது. “இராயப்பர் வாளி” என்றெ வாளி அழைக்கப்படுகிறது, வேண்டிக் கொண்ட காலத்திற்கேற்ப இது சிறுவர் சிறுமியரின் காதில் பல ஆண்டுகள் கிடக்கும்.


*ஒத்த மந்திர சிகிச்சை ( Homeopathie Magic Cure) *

கை கால் போன்ற உறுப்புக்களில் காயம் அல்லது முறிவு எற்பட்டாலோ கண், மூக்கு, காது போன்ற உறுப்புக்களில் நோய் எதுவும் எற்ப்பட்டாலோ வெள்ளி அல்லது பித்தளையால் கண் – கால் – கை போன்ற உறுப்புக்களைச் செய்து காணிக்கையாகத் தருவதாக நேர்ந்து கொள்கிறார்கள். நோய் குணமானால் வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோவிலிலோ, புளியம்பட்டி, உவரி ஆகிய ஊர்களில் உள்ள புனித அந்தோணியார் கோவிலிலோ இவைகளைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

பிள்ளை வரம் வேண்டுபவர்களும் தங்களுக்குப் பிள்ளைப்பேறு வாய்க்கப் பெற்றால் வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்பட்ட சிறு தொட்டில்களைக் காணிக்கையாகத் தருவதாக நேர்ந்து கொள்கிறார்கள். பிள்ளைப்பேறு வாய்க்கப் பெற்றால் மேற்கூறிய கோவில்களில் தங்கள் காணிக்கையைச் செலுத்துகிறார்கள்.


தொத்து மந்திர சிகிச்சை ( Contagious Magic Cure)

பிறருடைய தீயபார்வையினால் உடல் நலக்குறைவு ஏற்ப்ட்டதாகக் கருதினால் அதற்குப் பின்வரும் முறையில் பரதவர்களிடம் பரிகாரம் நிகழும்.

உப்பு , மிளகாய் வற்றல் ஆகியவைகளை ஒரு துணியில் சிறு பொட்டலமாகக் கட்டிக் கொள்கிறாகள். விசுவாச மந்திரத்தைக் கூறிய வாறே அப்பொட்டலமாகக் கட்டிக் கொள்கிறார்கள். விசுவாச மந்திரத்தை கூறியவாறே அப்பொட்டலத்தால் நோயுற்றவரின் தலையிலிருந்து கால்வரை மூன்றுமுறை தடவுகிறார்கள். பின்னர் அப்பொட்டலத்தால் நோயுற்றவரின் தலையை மும்முறை சுற்றி அதனை எரியும் நெருப்பில் போடுகிறார்கள். தீய கண்பார்வயுடையவர்கள் என்று சந்தேக துக்காளானவர்கள் காலடி மண்ணில் சிறிதளவுயெடித்து வந்து உப்பு-மிளகாய் வற்றலுடன் சேர்த்து பொட்டலத்தில் கட்டுவதுமுண்டு.

இச்செயல் தீமையை மாற்றுவித்தல் (Transference of Evil) என்று பிரேசர் குறிப்பிடும் முறையைச் சார்ந்ததாகும்.

மத்திய செலபிஸிலுள்ள தேர்ரடியாஸ் என்ற மலைஜாதியினர் யாருக்காவது தோல் வீக்கம் வந்து விட்டால், ஓர் உறுதியான கம்பை எடுத்து, உடம்பில் பாதிக்கப்பட்ட இடத்தின் மீதுவைத்து அழுத்திக் கொண்டு “இதற்குள் செல்” என்று சொல்வான். இவ்வாறு செய்யும் போது அந்த வீக்கம் அவனது உடலிருந்து நீங்கி கம்புக்கு மாறிவிடுவதாக அவன் நம்புகிறான்.

இதுபோலவே நோய்ற்றவரின் உடலில் உப்பு மிளகாய் வற்றல் ஆகியவைகளைக் கொண்ட துணிப்பொட்டலத்தை உடலில் தேய்ப்பது நோய்க்குக் காரணமான தீய பார்வையினை அதில் மாற்றுவதாக அமைகிறது. துணிப் பொட்டலத்திலுள்ள உப்பின் கரிப்புத் தன்மையும் மிளகாய் வற்றலின் காரமும் அதனை வருந்துகின்றன. துணிப் பொட்டலத்தை நெருப்பில் போடுவது தீய பார்வையின் விளைவை அடியோடு எரித்து அழிப்பதாக அமைகிறது. மேலும் உப்பும் மிளகாயும் நெருப்பில் ஓசையுடன் வெடித்து அழிவதன் அடையாளமாக நம்பப்படுகிறது.

பரதவர்களும் காலடி மண்ணையெடித்து நெருப்பில் போடுவதன் மூலம் அதற்குரியவணைத் தண்டிக்கிறார்கள். இத்தகைய பழக்கம் இனக்குழு வாழ்வைக் ( Tribal life) கடந்து பல நூற்றாண்டுகள் ஆன பின்பும் பரதவைகளிடமும் தமிழகத்தில் வாழும் பல சாதியினரிடமும் இன்றும் வழக்கிலுள்ளது.




மீனவர் சமையல்

Fried fish
Ingredients (for 5 pieces of fish)Red chilli powder2 tspCumin powder1/4tsp Turmeric powder1/4tspSaltas reqd.Oil for frying

Method:
1.Mix the powder with one tea spoon of water to make a paste.
2.Apply the paste evenly on the fish fillet. Leave it to marinate for 5 to 10 mnts.
3.Fry fish in oil till it is golden brown. Serving suggestion:Garnish with fried or fresh curry leaves, onion and lemon juice.
Submitted by: Shobana Cyril, Chennai 

Sambal with dried fish and fresh vegitables
Big OnionOneTomato OneGreen Chillies2Black Pepper powder1/4tsp Curry leaves as reqd.Corriander leavesas reqd.Oil2 Tsp

Method:
1.Chop onions, green chillies and tomato.
2.Fry the dried fish in oil. Remove the flesh from the bone. And shred the flesh into smaller peices. Add rest of the ingredients and mix together. Serving suggestion:Garnish with fried Curry leaves and fresh corriander leaves.
Submitted by: Shobana Cyril, Chennai 

வாழைப்பழ இனிப்பு 
தேவையான பொருட்கள்-வாழைப்பழம் 50 சீனி 1.5 - 2 கிலோ
 உபகரணங்கைள் - விறகு அடுப்பு-கரண்டிபெரியதுசட்டிபெரியது

செயல் முறை:
1.வாழைப்பழத்தை நன்கு பிசையவும்.
2.வாழைப்பழ விதைகளை எடுத்து விடவும்.
3.வாழைப்பழச் சதையினையும் சீனியையும் நன்கு கலந்து பாத்திரதில் போட்டு, அடுப்பில் வைத்து விடாமல் கிண்டவும்.
4.அடி பிடிக்காமல் இருக்க வெண்டுமளவு பட்டர் பொடவும்.
5.பந்து போல் உருண்டையாக வரும் வேளையில் ஒரு தட்டில் பட்டர் தடவி, அதில் ஊற்றி தட்டவேண்டும்.
6.பிறகு கத்தியால் தேவையான அளவு துண்டு போடவும், உண்ணவும்.
Submitted by: Jessi Ravel, Chennai 





உருளைக்கிழங்கு அல்வா 
தேவையான பொருட்கள்-உருளைக்கிழங்கு1/2 கிலோ சினி 1/2 கிலோபால் 1/2 லிட்டர்சாக்லெட் பவுடர்-

செயல் முறை:
1.சீனியில் ½ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமாகக் கொதிக்க வைக்கவும்.
2.ஒரு டீ ஸ்புன் பால் இதன் மிது ஊற்றவும்.
3.அமுக்கி போல் வரும் – அதை கரண்டி வைத்து எடுத்து விடவும்
4.உருளைகிழங்கை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
5.பால் , உருளைகிழங்கு இரண்டையும் நன்றாக கலங்து கட்டி இல்லாமல் நன்றாக கரைக்கவும்.
6.இத்துடன் சீனியைச் சேர்த்து கட்டை அடுப்பை பற்ற வைத்து பெரிய கரண்டியால் விடாமல் கிண்டவும்.
7.நன்கு திரண்டு வந்த்வுடன் கொஞ்சம் பட்டர் போட்டு அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
8.பந்துபோல் வந்த பின்னர் ஒரு தட்டில் பட்டர் தடவி, அத்தட்டின் மிது ஊற்றவும்.
9.சூடு இருக்கும் போதே நன்றாகத் தட்டிவிட்டு கத்தியால் வேண்டும் அளவிற்கு துண்டு கீறிவிடவும்.
10.ஆறிய பின் இத்துண்டுகளை பாத்திரத்தில் போட்டு மூடிவைக்கலாம்.
11.இரண்டு மாதங்கட்கு கெட்டு போகாமல் இருக்கும்.
Submitted by: Jessi Ravel, Chennai 



இறைச்சி பால் குழம்பு
 தேவையான பொருட்கள்-இறைச்சி1/2 கிலோ தேங்காய் 1/2 மூடிஎலுமிச்சை பழம்தேவைக்கு ஏற்பபட்டை, கிராம்பு தேவைக்கு ஏற்ப கடல்பாசி, தேவைக்கு ஏற்ப தக்காளி சிறியது,பச்சை மிளகாய் 3, வெங்காயம்2,கருவேப்பிலை, தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள்,தேவைக்கு ஏற்ப சோம்பு, சீரகம்,தேவைக்கு ஏற்பஇங்சி, பூண்டு தேவைக்கு ஏற்ப.

செயல் முறை:
1.தேங்காய் பால் தயார் செய்யவும்.
2.கட்டிப்பாலை தனியாக எடுத்து வைக்கவும்.
3.தண்ணீர் பாலைத் தனியாக எடுக்கவும்.
4.இறைச்சியை நன்கு கழுவி தண்ணீர் பாலில் வேகவைக்கவும்.
5.வேகவைத்துள்ள இறைச்சியுடன் பட்டை, கிராம்பு, கடல்பாசி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்
6.சோம்பு, சீரகம், இங்சி, பூண்டு ஆகியவற்றை நன்கு அரைக்கவும்.
7.இறைச்சி நண்கு வெந்தபின்னர் அரைத்து வைத்த கலவையை அதணுடன் கலந்து , கொதி வரும் போது கூட்டி தேங்காய் பால் ஊற்றி தீயை குறைத்து வைக்கவும்.
8.பிறகு எலுமிச்சை பழம் சாறு ஊற்றி இற்க்க வேண்டும்.
Submitted by: Jessi Ravel, Chennai 


திராட்சை வைன் 
தேவையான பொருட்கள்-திராட்சை5 கிலோ சுடுதண்ணீர் 6 1/2 கிலோசீனி6 1/2 கிலோஈஸ்ட்தேவைக்கு ஏற்பமுளை கட்டிய கோதுமைதேவைக்கு ஏற்ப

செயல் முறை:
1.6 1/2 லிட்டர் தண்ணீரை சுடாக்க வேண்டும்.
2.திராட்சைப் பழத்தினை நன்கு கழுவி சுத்தமான மெல்லிய துணியில் , ஈரம் நீக்கி துடைக்கவும்.
3.ஒரு ஜாடியை சுத்தப்படுத்தி நன்கு உலர்ந்த திராட்சை பழத்தை அதனுள் போட்டு மத்து வைத்து நன்கு நசுக்கி விடவேண்டும்.
4.அதில் ஆற வைத்த தண்ணீறையும், சினியையும் ஒரு துணியில பட்டை கிரம்பு சிறு பொட்டலமாக கட்டி போடவும்.
5.நான்கு நாள் கழித்து ஈஸ்ட் சேர்க்கவும்.
6.முளை கட்டிய கோதுமை சிறிதளவு சேர்க்கவும்.
7.திரும்பவும் மத்து போட்டு கிளறவும்.
8.30 நாட்கள் கழித்து மிண்டும் கிளறவும்.
9.45 நாட்கள் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றவும்.
Submitted by: Jessi Ravel, Chennai 



புளி மீன்
 தேவையான பொருட்கள்-எண்ணெய்1 கப் வினிகர்1 கப்புளிஎலுமிச்சை பழம் அளவுகடுகு1 டிஸ்புன்உப்புதேவைக்கு ஏற்பகாய்ந்த மிளகாய்20 துண்டு கருவாடு15மஞ்சள்சிறு துண்டுஇஞ்சி , பூண்டுதேவைக்கு ஏற்ப

செயல் முறை:
1.அம்மியை நன்கு கழுவவும்.
2.அம்மியை வினிகர் இட்டு மீண்டும் கழுவவும்.
3.கடுகு, மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைத் தெவையான உப்பு வைத்து அரைக்கவும்.
4.கருவாட்டுத் துண்டுகளை வினிகரில் கழுவவும்.
5.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி, மிதமான சூடு வரும்பொழுது அரைத்து வைத்துள்ள கலவைதனை போட்டு கிளறவும்.
6.பின் கருவாட்டு துண்டுகளை இதணுள் போட்டு புளி ஊற்றவும்.
7.லேசான கொதி வந்தவும் அடுப்பிலிருந்து இற்க்கவும்.
8.ஆறிய பின் பாட்டில்களில் ஊற்றி வைக்கவும்.
9.தேவைப்படும் பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி பாட்டிலில் உள்ள கருவாட்டு துண்டஇங்களை எடுத்து போறித்து உண்டு மகிழலாம்.
Submitted by: Jessi Ravel, Chennai 


மாங்காய் அச்சார்
 தேவையான பொருட்கள்-தயார் செய்யப்பட்ட வினிகர், பனைமரத்து பதனீரில் மிளகாய், தேவைக்கு ஏற்ப கடுகுதேவைக்கு ஏற்ப முருங்கைப் பட்டைதேவைக்கு ஏற்ப உப்பு தேவைக்கு ஏற்ப காய்ந்த மிளகாய் தேவைக்கு ஏற்ப இஞ்சி , பூண்டு தேவைக்கு ஏற்ப

செயல் முறை:
1.மாங்காயை 10 நாட்களுக்கு ஊற வைக்கவும்.
2.அம்மியை வினிகரில் கழுவவும்.
3.மிளகாய், வத்தல், முருங்கைப் பட்டையின் உள் பகுதி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்து உப்பில் ஊறப் போட்ட மாங்காயுடன் இக்கலவைதனை கலந்து, ஜாடியில் போட்டு வைக்கவும். கெட்டு போகாது.
Submitted by: Jessi Ravel, Chennai 


மீன் சொதி
தேவையான பொருட்கள்-மீன் காரல்(பெரியது) தக்காளி2 சின்ன வெங்காயம்10 பச்சை மிளகாய்5 முழு மிளகு1 தேக்கரண்டிதேங்காய்1/2 மூடி மஞ்சள் தூள் தேவைக்கு ஏற்ப உப்புதேவைக்கு ஏற்ப கருவேப்பிலைதேவைக்கு ஏற்ப

செயல் முறை:
1.தேங்காய்த் துருவி இரண்டு முறை பால் எடுக்கவும்.
2.மீனை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், மிளகாய்(இரண்டாகக் கீறி), பாதி அளவு உப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி நிதானமான நெருப்பில் வேக வைக்க வேண்டும்.
3.சுமார் 15 நிமிடம் கொதித்து வெந்த பின்னர் தேங்காய் பாலை சேர்த்து, மேதம் உள்ள உப்பைச் சேர்த்து இறக்கவும்.இறக்கிய பின் முழு அல்லது பாதி எலுமிச்சம்பழம் ருசிக்கு ஏற்ப பிழியவும்.

குறிப்பு:1.தேங்காய் பால் இரண்டு தடைவ மட்டும் எடுக்கவும்.2.தேங்காய் பால் ஊற்றிய பின் சொதியை கொதிக்க விடக்கூடாது.3.சீலா, விளை மீன், பாறை மீன், கலவா மீன் ஆகியவற்றின் தலையையும் உபயோகிக்கலாம்.4.இந்த சொதி 5 பேருக்கு போதுமானதாக இருக்கும்.5.தக்காளி சேர்ப்பது இப்பொழுது வழக்கமாகி விட்டது.ஆனால் பாரம்பரிய பரவர் சொதியில் தக்காளி சேர்ப்பது இல்லை.
Submitted by: Jessi Ravel, Chennai 



மீன் குழம்பு1 
தேவையான பொருட்கள்-மீன் - வத்தல்10சின்ன வெங்காயம்5பச்சை மிளகாய்2மிளகு5மல்லி1 தேக்கரண்டிசீரகம்1 தேக்கரண்டிதேங்காய்1/4 மூடிமஞ்சள்தேவைக்கு ஏற்பஉப்புதேவைக்கு ஏற்பகருவேப்பிலைதேவைக்கு ஏற்பவெள்ளை பூண்டுதேவைக்கு ஏற்ப

செயல் முறை:
1.முதலில் மஞ்சளை நல்ல மையாக அரைத்து கொள்ளவும்.
2.பின்னர் வத்தல், மல்லி, சீரகம்,மிளகு சேர்த்து ஒன்றாக அரைத்து அம்மியில் இருந்து வழித்துக் கொள்ளவும்.
3.தேங்காய் தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
4.பெரிய எலுமிச்சம்பழம் அளவு புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
5.மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
6.சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,கருவேப்பிலை, புண்டு ஆகியவற்டுடன் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து மன் சட்டியில் கரைத்து குழம்பாக்கிக் கோள்ள வெண்டும் .
7.இந்தக் குழம்பில் சுத்தம் செய்த மீனைச் சேர்த்து கோதிக்க வைத்து வேக விடவும். வெந்த பின் இறக்க வெண்டும்.

குறிப்பு:1.பெரிய மீனாக இருந்தால் தாளிக்கக் கூடாது.2.சாளை போன்ற சிறிய மீனாக இருந்தால் மண் சட்டியை காய வைத்து எண்ணெய் ஊற்றாமல், சிறிதளவு கடுகு, வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு வெடித்த உடன் கொதித்த குழம்பை ஊற்றி மற்றொரு மண் சட்டியைக் கவிழ்த்து மூடவும்.3.தக்காளி சேர்ப்பது பாரம்பரிய பரவர் சமையலில் வழக்கம் இல்லை.
Submitted by: Jessi Ravel, Chennai 


மீன் குழம்பு -2 

செயல் முறை:
1.மஞ்சள் – 1 துண்டு, மிளகு – 1 ½ தேக்கரண்டி, சீரகம் -1/4 தேக்கரண்டி ,மல்லி - 1 தேக்கரண்டி இவற்றை மையாக அரைத்துக் கொள்ளவும்
2.தேங்காய் பெரிய துண்டு 1 இதைத் தனியாக மையாக அரைத்துக் கொள்ளவும்.
3.நாட்டுப்பூண்டு -2 உரித்துக் கொள்ளவும்.
4.சின்ன வெங்காயம் – 10 உரித்து இரண்டாக குறுக்கே வெட்டிக் கொள்ளவும்.
5.பச்சை மிளகாய் – 2 கீறி ஆனால் முழுவதாக வைத்துக் கொள்ளவும்.
6.புளி ½ எலுமிச்சம்பழம் அளவு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
7.மீனைச் சுத்தம் செய்து இந்த அனைத்து மசாலாக்களையும், புளிக்கரைசல், உரித்துப் பூண்டு நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க வைத்து வேக விடவும்..
8.மீன் வெந்து, குழம்பில் மசாலா வாடை நீங்கிய பின் இறக்கவும்.

குறிப்பு:1.இந்தக்குழம்பு குழந்தை பெற்ற பாலூட்டும் தாய்மாருக்குக் கொடுப்பது.2.தக்காளி சேர்க்கக்கூடாது.3.பெரிய, அகலமான காரல் மீன் பயன்படித்துவது வழக்கம்.
Submitted by: Jessi Ravel, Chennai 


மீன் புட்டு 

செயல் முறை:
1.வாள மீன் – 1 , மீன் தலையை நீக்கிவிட்டு சுத்தம் செய்யவும்.
2.நடுத்தரத் துண்டுகளாக வெட்டி, சிறிது மஞ்சள், உப்பு, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
3.வெந்த மீன் ஆறிய பின் மீனை சுத்தமாக, முள் நீக்கி உதிர்த்துக் கொள்ளவும்
4.பச்சை மிளகாய் 2 , பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
5.தேங்காய் – ½ மூடி துருவிக் கொள்ளவும்.
6.வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் கருவேப்பிலை, வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், வெங்காயம் கண்ணாடி போல வதங்கியதும், உதிர்த்த மீனையும், தேங்காய் துருவலையும் சேர்த்து சட்டியில் கொட்டி கிளரவும்.
7.எல்லாம் ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.

குறிப்பு:1.தேங்காய் அதிகம் சேர்த்தால் மீன் சுவை குன்றிவிடும்.2.சுறா மீனிலும் இந்தப்புட்டு செய்யலாம்.3.சில ஊர்களில் சீலா மீனிலும் செய்கிறார்கள்
.Submitted by: Jessi Ravel, Chennai


நன்றி: globalparavar.org

மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-8 ]


"கீழ்த்திசை நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரிலும் இம்முத்துக்குளித்துறையைச் சேர்ந்த மக்களே  மிகவும் சிறந்தவர்கள்" -பல்தார்-டி-கோஸ்தா.


போர்ச்சுக்கீசியர்கள் மூர்களிடமிருந்து  தூத்துக்குடியை கைப்பற்றியதிலிருந்து  அவர்களின் முக்கிய குடியேற்றப் பகுதியாக இருந்தது புன்னைக்காயல் (1) தான் .அங்கு அவர்கள் ஒரு மண்கோட்டையை அமைத்துக் கொண்டனர். 1582  - வரை புன்னைக்காயலுக்கு இருந்த முக்கியத்துவம் தூத்துக்குடிக்கு இல்லை.

இந்தியாவுக்கு வந்த போர்ச்சுக்கீசியர் சுமார் ஐம்பது ஆண்டுகள்  புன்னைகாயலையே தங்களின் முக்கிய குடியேற்றப் பகுதியாக வைத்திருந்தனர்.  புன்னைக்காயல் முக்கிய குடியேற்றப் பகுதியாக இருந்த போதிலும் அது தூத்துக்குடியைப் போல சிறந்த பாதுகாப்பான இயற்கைத் துறைமுகமாக இருக்கவில்லை.  சோழ மண்டலக் கரைகளிலேயே சிறந்த துறைமுகமான தூத்துக்குடி துறைமுகம் துரதிருஷ்டவசமாக ஆழம் குறைவானதாகவும் சுமார் 60 எடை கொண்ட கொண்ட கப்பல்களை மட்டுமே தாங்குவதாகவும் இருந்தது.  தவிறவும்   தூத்துக்குடி   தண்ணீர்  இல்லாத தூர்ந்து போன இடமாகவும்,  உப்புக் கற்களால் ஆன வாழ்வதற்கு உகந்த இடமாக இல்லாமல் இருந்ததாலும்  போர்ச்சுக்கீசியர்கள்  துவக்கத்தில் புன்னைக்காயலையே தேர்ந்தெடுத்தனர்.   1580  - ல் தூத்துக்குடியை தலைநகரகாக எடுத்துக் கொண்டனர்.

போர்ச்சுக்கீசியர்கள் மூர்களை வென்ற போது காயலில் வாசித்த மூர்கள் காயல்பட்டினத்தில் குடியேறினார்கள். பரவர்கள் புன்னைக்காயலில் குடியேறினார்கள். தூத்துக்குடி தலைநகராக மாறிய பின்னர் புன்னைக்காயல் அதன் போக்கில் முக்கியத்துவத்தை இழந்தது.  சுமார் 125 ஆண்டுகள் அந்தக் கடலோரத்தை ஆட்சி செய்து பின்னர் தூத்துக்குடியை டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்து வெளியேறிய போர்ச்சுக்கீசியர்கள்தான் தென் தமிழக மீனவ மக்களை ஒரு புதிய கலாச்சாரத்திற்கு பழக்கியவர்கள். தங்களின்  முன்னோர்களின்  வழிபாட்டு மரபுகளை விட்டொழித்து புதிய வழிபாடுகளை அவர்களுக்கு பழக்கப்படுத்தியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்தான். அந்த வகையில் இன்று வரை போர்ச்சுக்கீசியரின் வரவும் அதையொட்டி தென் தமிழக கடலோரத்தில்  ரோமன்  கத்தோலிக்க சமூகத்தின் உருவாக்கமும் பல்வேறு சாதக பாதங்களை மீனவ மக்களிடையே உருவாக்கியிருக்கிறது.

தென் தமிழகத்தில் கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ள எல்லா கடலோர மீனவ மக்கள் வசிக்கும்  கிராமங்களிலுமே இன்று பிரமாண்ட தேவாலையங்கள் உள்ளன. ஒவ்வொரு தேவாலயமும் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டவை. பொதுவாக தேவாலயங்கள் திருச்சபையின் பணத்தில் கட்டப்படுவதாக ஒரு பொதுப்புத்தி தமிழக மக்களிடம் உண்டு. பணத்திற்காகவும் கோதுமைக்காகவும் மதம் மாறியவர்கள் என்ற பொதுப்புத்தியைப் போனதுதான் இதுவும். மீனவ மக்களைப் பொறுத்தவரையில் இந்த எண்ணங்களும் முன் முடிவுகளும் உண்மையல்ல.  உள்ளூர்களில் கிறிஸ்தவர்காளாக மாறிய ஏனைய சமூகத்தவர்கள் கட்டும் கோவில்களில் திருச்சபையின்  பங்கு உண்டு. ஏனைய சமூகங்கள் திருச்சபையை ஏற்றுக் கொண்டு வழிபாடுகளில் தவறாமல்  பங்கேற்றாலும் அவர்கள் கோவிலுக்கென்று கொடுப்பதை,  மீனவ மக்கள் தேவாலயங்களுக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிடும்  போது  ஒன்றுமே இல்லை. நிலவுடமைச் சாதிகள்  தேவாலயங்களுக்கு கிள்ளிக் கொடுக்கிறார்கள். நிலமற்ற கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களோ தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை தேவாலயங்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள்.  இப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கரையோர மக்கள் நீண்ட காலமாக பெண் தெய்வ வழிபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள்  முத்து மாரியம்மன் , ஆவிகள் , பேய் வழிபாடுகளைச் செய்து வந்தவர்கள் . தொழில் உரிமையைப் பாதுகாக்க போர்ச்சுக்கீசியரால் மதமாற்றம் செய்யப்பட்ட போது முதன் முதலாக  தூத்துக்குடியில்  உருவான இராயப்பர் ஆலயம் கூட பரதவ மக்களிடம் செல்வாக்கைப் பெற வில்லை. பின்னர் உருவாக்கப்பட்டதுதான்  மரியன்னையின் ஆலயம்  தமிழகத்தில் உள்ள  கத்தோலிக்க தேவாலயங்களில்  புகழ் பெற்ற தேவாலயங்களாக விளங்குவது, பூண்டி  மாதா ஆலயமும், வேளாங்கண்ணி மாதா ஆலயமும்தான். ஆனால் இந்த இரண்டையும் விட காலத்தாலும் வரலாற்றாலும் மூத்த பேராலயமாக இருந்தது தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம்தான். அதை 16-ஆம் நூற்றாண்டிலேயே இயேசு சபையினர் பேராலயம் என்றும் அகலமான பெரிய கோவில் என்றும்  அழைத்துள்ளனர். அது  தென்னிந்தியாவின் முதல் ஆலயம் மட்டுமல்ல இலங்கை கரையோரங்களில் கத்தோலிக்க மதத்தைத் தழுவிய மக்களுக்கும் தலைமை ஆலயமாக இருந்துள்ளது.


இரக்கத்தின் மாதா
...........................

இன்று தூத்துக்குடியில் தெருவுக்கு தெரு கோவில் உள்ளது. எல்லா கோவில்களிலும் ஆடம்பரத் திருப்பலிகள் நடக்கின்றன. ஆனால் தூத்துக்குடி மக்கள் தாய் கோவில் என்று அழைப்பது பனிமய மாதா ஆலயத்தைத்தான். 1582-ல் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தைத்தான்  இன்று பனிமயமாதா என்று அனைத்து மக்களும் அழைக்கிறார்கள். முத்துக்குளித்துறை மக்கள் இதை பரதர் மாதா என்றும் முத்துக்குளித்துறைக்கெல்லாம் பாதுகாவலி என்றும், படகின் மாதா என்றும் அழைக்க போர்ச்சுக்கீசியர்கள் தஸ்நேவிஸ் மாதா  (Signora das Nevis)  என்று  அழைத்தனர். உரோமையில் கிபி 352 -ல் எஸ்கலின் குன்றில் உருவான மாதா அலயமே இத்தாலி மொழியில்  ‘’மரியா மஜோரே”  இதுதான் உலகில் உருவான முதல் மரியன்னை ஆலயம். அதனுடைய அடியொற்றியே தூத்துக்குடியில்  பனிமயமாதா ஆலயத்தை அமைத்தார்கள் இயேசு சபையினர்.

இந்த கடலோர சமூகம் எப்படி ஒரு வலுவான கத்தோலிக்கச் சமூகமாக உருவானது என்பதையும் நாம் காண வேண்டும். இடைவிடாத படையெடுப்புகள், தாக்குதல்கள், கொள்ளைகள், சூறையாடல்களால் கடலோரச் சமூகம் தொடர்ச்சியான இடப்பெயர்ச்சிகளைச் சந்தித்தது. இது இயேசு சபையினரும் நெருக்கடியாக இருந்தது. மிகவும் துன்பம் சூழ்ந்த அந்தக் காலத்தில்  கன்னியாகுமரி தொடங்கி சுமார் முப்பது ஊர்களில் வாழ்ந்த மீனவ  மக்களை ஒரு பகுதியில் குடியேற்ற வேண்டிய தேவை இயேசு சபையினருக்கு இருந்தது . உண்மையில்  1542-ல் பிரான்சிஸ் சவேரியார்  இக்கரைக்கு வந்த நாளிலேயே அப்படியான குடியேற்ற முயற்சி நடந்தது. அந்த முயற்சியின்  ஒரு விளைவுதான் யாழ்பாணத்தில் ஒரு குடியேற்றத்தை செய்ய விரும்பியது அது யாழ்பாண மன்னனால் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில்தான் முப்பது கிராமங்களில் நீளமாக  வங்கக் கடலோரத்தில் வாழ்ந்த பரவர்களை   வைப்பாறு, வேம்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், விரபாண்டியன் பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய  ஏழு ஊர்களில்  குடியேற்றினார்கள் இயேசு சபையினர். ஆனாலும் இந்த ஒற்றுமை நிலைக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து நாய்க்க மன்னர்கள்,  கயத்தாறு மன்னன், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்களின்  தாக்குதலால் மேற்குக் கரையோரத்திலும், கிழக்குக் கரையோரத்திற்கும் சிதறியோடியதெல்லாம் தனிக் கதை. முப்பது கிராமங்களில் இருந்த மக்களை ஏழு கிராமங்களில் குடியேற்றி ஒட்டு மொத்தமாக ஏழு கடற்றுரைக்கும் ஒரு சாதித் தலைவன் (பட்டங்கட்டியை )உருவாக்கி, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பட்டங்கட்டியை (சாதித் தலைவன் ) உருவாக்கி ஊருக்கு ஊர் கணக்குப் பிள்ளையையும் உருவாக்கி ஒரு குடியேற்றத்தை உருவாக்கினார்கள். இந்த ஏழு கடற்றுறை மக்களுக்குமான ஏக பாதுகாவலியாக உருவாக்கப்பட்டதுதான் பனிமயமாதா ஆலயம்.

1582-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் நாள் கடலோர மக்களுக்கு ஆடம்பரத் திருவிழா மூலமாக அர்ப்பணிக்கப்பட்ட மாதா கோவில் திறப்பு  விழா பற்றி இயேசு சபை அதிபர் தி தாக்குஸ் தி குண உரோமையிலுள்ள இயேசு சபைத் தலைவர் ஆக்குவா லீவா அடிகளாருக்கு  எழுதிய மடலில் ”இது மற்ற ஆலயங்களைப் போல கொச்சி ஆயரின் அதிகாரத்திற்கு உட்படாமல் இயேசு சபையினருக்கே சொந்தமானதாக இருக்கும்.  முத்துக்குளித்துறையிலுள்ள பிற ஆலயங்களை விட இவ்வாலயம் மிக அழகியதும் சிறந்ததும் ஆகும். இவ்வாலயத்திற்காக இதுவரை நாங்கள் 800 குருசாதோ செலவிட்டிருக்கிறோம். இவ்வளவு பணமும் மக்களின் நன்கொடையே ஆகும். எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் பெருந்திரளாக தூத்துக்குடிக்கு வந்து ஆலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள். இதுவரை காணாத ஆடர்ம்பரச் சிறப்போடும் கோலாகலத்தோடும் விழா நடந்தேறியது. அன்று சுமார்  670 பேர் நற்கருணை உட் கொண்டனர். கிறிஸ்தவ மக்கள் அனைவரும் இவ்வாலயத்தின் மீது தனிப்பற்று வைத்துள்ளனர் “ (8)

இயேசு சபையினர் வந்த சில வருடங்களிலேயே பிரான்சிஸ்கு சபையினரும் வந்து விட்டனர். கோவா மறைமாநிலத்திற்கு கட்டுப்பட்டதாக இருந்த பனிமய மாதா ஆலயத்தை கொச்சி மறைமாநிலத்தோடு இணைப்பதை இயேசு சபையினர் விரும்பவில்லை. பெரும் செல்வம் கொழிக்கும்  தேவலயத்திற்காக கொட்டிக் கொடுக்கும் இந்த சன சமுத்திரத்தை இயேசு சபையினர்  இன்னொரு சபைக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. மேற்கண்ட கடிதத்திலும் இந்த தொனி தெரிகிறது.  பனிமய மாதா  ஆலயத் திறப்பு விழா பற்றி இயேசு சபை பார்வையாளர் நூனஸ் ரொட்ரீக்ஸ் என்பவர் இயேசு சபைத் தலைவருக்கு 1582- டிசம்பர் 30-ஆம் நாள் கொச்சியிலிருந்து எழுதிய மடலில் ‘’  இந்தக் தேவாலயமானது இந்த மக்களின் நன்கொடையிலிருந்து உருவானது.அதனைக் கட்டியெழுப்ப 700 குருசாதோ அளவுக்குச் செலவாகியது. அது மட்டுமன்றி விலையுயர்ந்த ஆபரணங்களும் திருவுடைகளும் இங்கு ஏராளமாக இருக்கின்றன. திருநாள் அன்று பரத மக்கள்  மருத்துவமனைக்கென்று 200 குருசாதோக்களைக் கொடுத்தார்கள். இப்புதிய ஆலயம் சுண்ணாம்பாலும்செங்கற்களாலும் கட்டப்பட்டது. ஆலயத்தின் பீடப்பகுதி கனரா ஓடுகளால் ஆனது என்றும்,  ஆலயத்தில் உள்ள சக்றீஸ்தியில் (திருப்பலி ஒப்புக் கொடுக்கிற பலிபீடம்) திருவழிப்பாட்டிற்கு தேவையான அழகிய ஆபரணங்களும் புனிதரின் திருப்பண்டங்களும் ஏராளமிருந்தன” (9)

திருவிழாக்களில் முத்தும் பவளமும் கொட்டிக் கொடுக்கப்பட்டன. ஆடம்பரமான திருவிழா நடத்துகிற கலாச்சாரம்  ஒரு போட்டியாகவே வளர்க்கப்பட்டது. மணப்பாட்டில் நடத்தப்பட்டது போன்ற வாணவேடிக்கையை தூத்துக்குடியில் நடத்த வேண்டும். என்ற போட்டி ஒரு ருசுவாக உருவாக்கப்பட்டது ஏழு கற்றுறைகளிலும் தனித் தனி தேவாலயங்கள் உருவாக்கப்பட்டு இந்த ஆடம்பர விழாக்கள் இயேசு சபையினரால் ஒரு பொதுப்பண்பாடாக உருவாக்கப்பட்டது. ஏனைய ஊர்களின் திருவிழாவை விட தூத்துக்குடி  பனிமய மாதா கோவில் ஒட்டு மொத்த பரவர்களுக்கும் தலமைக் கோவிலாக உருவாக்கப்பட்டது. 1600-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவை முத்துக்குளித்துறை முழுமைக்குமான திருவிழாவாக நடத்தினார்கள். இந்த விழாவுக்கு கோவா இயேசு சபையின் மாநிலத் தலைவர் அருட்தந்தை நிகோலாஸ் பிமெந்தா அழைக்கப்பட்டிருந்தார். பெரும் ஆடம்பர விழாவாக நடத்தப்பட்ட அந்த விழாவில் நடத்தப்பட்ட வாணவேடிக்கையில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்ததாக  இயேசு சபை குறிப்புகள் பெருமையோடு குறிப்பிடுகிறது. பட்டங்கட்டிகள் எனப்படும் பரவ சாதித் தலைவர்களுக்கு இயேசு சபையினர் விருந்து வைத்தனர் அந்த விருந்தில் பட்டங்கட்டிகள் மாநில இயேசு சபைத் தலைவரோடு அமர்ந்து உணவு உண்டார்கள். ஏராளமான பரிசுகளை பட்டங்கட்டிகளும் பரவச் சாதி பிரமுகர்களும் இயேசு சபையினருக்கு வழங்கினார்கள் தேவாலயமும் இயேசு சபையும் செல்வம் கொழிக்கும் இடமாக மாறிப் போனது தேவாலயங்களில் வெளிப்பட்ட ஆடம்பரமும், பகட்டும், இயேசு சபையினர் சர்வ செல்வாக்கோடு வலம் வந்ததும் பிற சபையினருக்கும் இயேசு சபையினருக்குமான முரண்பாட்டை வளர்த்து விட்டது.ஒரு கட்டத்தில் போர்ச்சுக்கீசிய அரசு நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இயேசு சபையினரின் சில நடவடிக்கைகள் அமைய இதை கொச்சி மறைமாநிலமோ, போர்ச்சுக்கீசிய தளபதிகளோ விரும்பவில்லை. கடந்த அத்தியாயத்தில் போர்ச்சுக்கீசிய தளபதிகளே பரவர்களைத் தாக்கிய கயத்தாறு மன்னனுக்கு குதிரை விற்று லாபம் பெற்றதைப் படித்தோம். இப்படியான முரண்பாடுகள் வளர இயேசு சபையினரும் ஒரு காரணமாக அமைந்தனர்.

1603- ல் மீண்டும்  நாயக்கப்படைகள்  தூத்துக்குடியைத் தாக்கி  மக்களிடம்  அநியாய வரிகேட்டனர். அவர்கள் கிறிஸ்தவ மீனவர்களைத் துன்புறுத்தி அவர்களின் வதிவிடங்களை தீயிட்டுக் கொளுத்தி தேவாலயத்தை கொள்ளையடித்தனர். சுமார் 18 நாட்கள் நடந்த இத்தாக்குதலின் பின்னர் அவர்கள் இயேசு சபை தலமை இல்லத்தின் பொருளாளராக இருந்த  அருட்தந்தை கஸ்பார் தாப்ரோவைக் கைது செய்து அவரைப் பிணைக்கைதியாக மதுரைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இத்தாக்குதலில் வெறும் கிறிஸ்தவ பரவர்கள் மட்டுமன்றி தூத்துக்குடியில் வாழ்ந்த பிற இன மக்களும் பாதிக்கப்பட்டதாக வெனன்ஜியூஸ் எழுதியுள்ளார்.  பின்னர்  ஏழு கடற்றுறை பட்டங்கட்டிகளும் கூடி  சிவந்தி நாதப்பிள்ளை என்னும் அதிகாரியை தூது அனுப்பியும் கயத்தாறு மன்னன்  பிடிவாதம் செய்ய மீண்டும் அவர்கள் தூத்துக்குடியையும் ஏழு ஊர்களையும் விட்டு முயல் தீவுக்கு குடியேறினார்கள்.  (10)

தூத்துக்குடி, வேம்பாறு, வைப்பாறு, புன்னைக்காயல் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த சகல  இன மக்களுமாக சுமார் பத்தாயிரம் பேர்  ராஜதீவு எனப்படும் முயல் தீவில் குடியேறினார்கள். குடியேறிய மக்களுக்காக அங்கு நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன. இயேசு சபையினர் பதினாறு அறைகளைக் கொண்ட  புதிய தலைமை இல்லத்தை முயல்தீவில் கட்டிக்கொண்டனர்.  தீவைச் சுற்றி ஒரு மதிற்சுவரையும் எழுப்பிக் கொண்டனர். எதிரிகளின் தாக்குதலில் இருந்து தங்களைக்காத்துக் கொள்ள இயேசு சபை இல்லத்தைச் சுற்றி மூன்று பாதுகாப்பு அரண்களையும் அமைத்துக் கொண்டனர். தப்பியோடி  குடியேறிய இடத்தில்  ஒரு  தேவாலயத்தையும்  கட்டி ஆடம்பர திருவிழாவையும் நடத்தினார்கள் .(11) .

ரோமன் கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்டதோடு போர்ச்சுக்கீசிய குடிமக்களாகவும்  அறிவிக்கப்பட்ட இம்மக்களை பங்கிட்டுக் கொள்வதில் போட்டி நடந்ததே தவிற பாதுகாப்பதற்கு எவரும் இல்லை.  என்பதையே 16,17 ஆம் நூற்றாண்டின் தொடர் நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.  இவர்களை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக போர்ச்சுக்கீசிய சபைகளுக்கிடையேயும் மோதல் இருந்து வந்ததை நாம் ஏற்கனவே படித்தோம்.  இந்த முரண் பாடுகள்  இரண்டு  விதமாக உருவாகியிருந்தது. ஒன்று போர்ச்சுக்கீசிய அரசு அதிகாரிகளுக்கும் இயேசு சபை பாதிரிகளுக்குமான முரண்,  இயேசு சபையினருக்கும் பிரான்சிஸ்கு உள்ளிட்ட ஏனைய  சபையினருக்குமான முரண் என்பதாக இருந்தது.  தங்களின் பாதுகாப்புக்காக போர்ச்சுக்கீசியர்கள் ஒரு கோட்டையை  தூத்துக்குடியில் அமைக்க விரும்பினார்கள் ஆனால் அதை  இயேசு சபையினர்  விரும்பவில்லை.  இந்த முரண்பாடுகளுக்கிடையில்தான் நாயக்க மன்னரின் படைகள் பரவர்களைத் தாக்கினார்கள்.  இப்படியான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்த போதெல்லாம் போர்ச்சுக்கீசியர்களும் இயேசு சபையினரில் பெரும்பாலானோரும் பரவர்களை விட்டு தப்பியோடினார்கள்.

முயல் தீவில் மக்கள் குடியேறியதால்  முத்துக்குளிக்கும் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டதாலும்  கிறிஸ்தவ மறைப்பரப்பலில் பெரும் பாதங்களை இந்த இடப்பெயர்ச்சி தோற்று விக்கும் என்றும் கருதிய பிரான்சிஸ்கு சபையின் கொச்சி ஆயரான   ஆந்திரேயாஸ் மக்களை  தூத்துக்குடிக்கு திரும்ப வருமாறு அழைத்தார்.  அவர்  மனுவேல் தி எல்விஸ் என்ற தலைமைக்குருவை முயல் தீவுக்கு அனுப்பினார் அனால் இயேசு சபையினரும் மக்களும் தூத்துக்குடி திரும்ப மறுத்தனர். ஆயர் அந்திரேயாஸ் கயத்தாறு மன்னனோடும், மதுரை நாயக்கரோடும் சமாதான உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டு கோவா, கொச்சியிலிருந்து நான்கு பெரிய கப்பல்களில் ஆயுதம் தாங்கிய தோணிகளோடு  வந்து முயல் தீவை முற்றுகையிட்டார். இந்தப் போர் சுமார் 22 நாட்கள் நீடித்ததாக  கோவாவுக்கு எழுதப்பட்ட இயேசு சபை கடிதங்கள் தெரிவிக்கின்றன.  பிரான்சிஸ்கு சபை திரட்டிய படைக்கு ஸ்கோ தி மெனசஸ் என்கிற தளபதி தலைமை தாங்க , பரவர்களின் படைக்கு இயேசு சபை இயேசு சபைத் துறவியான ஜான் போர்கஸ் தலமை தாங்கி இந்தப் போர் நடந்தது. ஒரு பழங்குடிச் சமூகத்தோடு நவீன ரக ஆயுதங்களைக் கொண்ட போர்ச்சுக்கல் படையினர் மோதினார்கள். முயல் தீவை சுற்றி எழுப்பப்பட்டிருந்த கோட்டை மதிற்சுவர்கள்  பீரங்கிகளால் பிளந்து அகழப்பட்டன. . இந்த போர் துவங்குவதற்கு பல நாட்கள் முன்பே முயல் தீவுக்கு குடி நீர், உணவு பொருட்கள் செல்வது யாவும் தடுக்கப்பட்டது. பல நாள் உணவில்லாமல் மக்கள் சோர்ந்து போன பின்னர் போர்ச்சுக்கீசியர் தாக்குதலைத் தொடுத்தனர். இயேசு சபையினரின் கட்டிடங்கள், தேவ மாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டன. பல நூறு பேர் இந்தப் பொரில் கொல்லபப்ட்டார்கள். துரதிருஷ்டவசமாக இயேசு சபைக் குருக்கள் கரையோரம் வழியே இலங்கையின் மன்னார் உள்ளிட்ட தீவுகளுக்குத் தப்பிச் சென்றார்கள். கைவிடப்பட்ட மக்களோ தூத்துக்குடிக்கு திரும்பி வந்தார்கள் இயெசு சபையினரின் சகல இல்லங்களும் பிரான்சிஸ்கு சபையினரால் கைப்பற்றப்பட்டது. பழைய இராயப்பர் ஆலையத்தை அங்கு தலைமை குருவாக அனுப்பப்பட்ட மனுவேல் தி எல்விஸ் எடுத்துக் கொண்டர் .

இதில் இன்னொரு வேடிக்கையும் உண்டு  தொடர்ந்து நாயக்க மன்னர்களால் பரவர்கள் தாக்கப்பட்ட போது வலிவற்றிருந்த போர்ச்சுக்கீசியர்கள் மக்களை அப்படியே விட்டு விட்டு மன்னார், யாழ்பாணத் தீவுகளுக்கு தப்பியோடினார்கள். அங்கிருந்த படி திருநெல்வேலி, இராமநாதபுரம் பகுதிகளுக்கு கப்பல்களை அனுப்பி நாயக்கர்களின் வருமானம் வீழ்ச்சியடைகிற அளவுக்கு அவர்களை ஒழித்துக் கட்டுகிற அளவுக்கு இயல்பமைதியைக் குலைத்தனர். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட மதுரை நாயக்கன் போர்ச்சுக்கீசியர்களை வருந்தி மீண்டும் வருமாறு அழைத்ததாக தனது முத்துக்குளித்தல் வரலாறு  நூலில் குறிப்பிடுகிறார்  எஸ். அருணாச்சலம்.

கொச்சி ஆயரின் தாக்குதலில் மனமுடைந்து போன இயேசு சபையினர் அதிகார பூர்வமாக தூத்துக்குடியை கொச்சி ஆயரிடம்  1609  -ல் ஒப்படைத்து தூத்துக்குடியை விட்டு  வெளியேறினார்கள்.இலத்தீன் வழிபாட்டு முறைகள் நீக்கப்பட்டு சிரியன் வழிபாட்டு முறைகளை பிரான்சிஸ்கு சபையினர் அறிமுகம் செய்தனர். ஆனால் அவைகள் பரவர்களிடம் எடுபடவில்லை. சிரியன் கிறிஸ்தவ வழிபாடு கொச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக செல்வாக்கோடு திகழ்ந்தது, இலத்தீன் வழிபாடு தென் தமிழக கடலோரங்களில் நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்தது இப்போதும் ஆலைய வழிபாடுகளிலும், கல்லறை நிகழ்வுகளிலும்  அதனுடைய  எச்சங்களைக் காணலாம்.    தூத்துக்குடி பரவர்களுக்கும் பிரான்சிஸ்கு சபையினருக்கும் இணக்கமான உறவு இல்லை. இயேசு சபையினருடன் அவர்கள் அந்நியோன்யமாக பழகியதைப் போன்ற நிலை இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் மன்னன் மூன்றாம் பிலிப்பு மீண்டும் தூத்துக்குடியை இயேசு சபையினரிடம் ஒப்படைகும் படி கோவா  ஆளுநருக்கும் கொச்சி ஆயருக்கும் உத்தரவிட 1621-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்  மீண்டும் இயேசு சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  சுமார் 12 ஆண்டுகளுக்குப்  பின்னர் இயேசு சபையினர் மீண்டும்  தூத்துக்குடி திரும்பியதும் கொண்டாட்டங்களும் வாண  வேடிக்கைகளும் மீண்டும் களை கட்டியது.

முரண்பாடுகள் கூர்மையடைந்து சென்ற நிலையில் முத்துக்குளித்தல் பெரும் இழப்புகளைச் சந்தித்தது. கிபி-1604-ல் தொடங்கி 1612-வரை முத்துக்குளிப்பே நடைபெற வில்லை. முத்துக்குளிப்போரை கிட்டத்தட்ட அடிமைத் தொழிலாளிகளைப் போல கண்காணிக்கக் கோரும் போர்ச்சுக்கீசிய அரசு, அவர்களை கிறிஸ்தவக் குடிகளாகக் கருதக் கோரிய இயேசு சபைகுருக்களுக்கிடையேயான  மோதல் முத்துக்குளித்துறையின் ஆன்மாவாகிய முத்துக்குளித்தலை கெடுத்து நாசமாக்கியதோடு அந்த மக்களை வறுமையிலும் தள்ளியது. பிரச்சனைகள் தற்காலிகமாக  முடிந்து 1621-ல் இயேசு சபையினர்  மீண்டும் தூத்துக்குடிக்கு வந்த போது தூத்துக்குடி ஹென்றி தா குரூஸ் என்ற பெரும் செல்வந்தர் இயேசு சபையினரை வரவேற்று அவர்களுக்கு 1500 குருசாதோக்களை அன்பளிப்பாகக் கொடுத்தார்.  இயேசு சபையினர் பணக்காரரான  ஹென்றி தா குரூஸை பரதவர் சாதித் தலைவனாக நியமிக்க விரும்பினார்கள்.  அது பெரும் கலவரத்தில் முடிந்ததை எல்லாம் பட்டங்கட்டிகள் என்னும் சேப்டரில் காணலாம்.பணமும் செல்வாக்கும் படைத்த பெரிய மனிதர்களை இயேசு சபையினர்  எப்படி செல்வாக்கோடு நடத்தியிருக்கிறார்கள் என்பதை அதில்  காணலாம்.

இந்தத் தாக்குதல் இத்தோடு முடிந்து விட வில்லை. இயேசு சபையினருக்கும் போர்ச்சுக்கீசிய அரசு நிர்வாகத்தினருக்கும் பிரான்சிஸ்கு சபையினருக்குமான முரண்பாடு விரிந்து சென்ற நிலையில் இயேசு சபையினரின் பிடியில் தூத்துக்குடி மீண்டும் வந்தாலும்  பவரவர்களுக்கிடையில் அதிகாரங்களைக் கைப்பற்றும் போட்டியாக மாறியது.  இது  பரவர்களுக்கிடையிலான மோதலாக வெடித்தது அந்த மோதலில் பல கொலைகள் நடந்தது. 1629 -ல் கோவாவுக்கு புதிய ஆளுநராக கோம்தே தீ லீனாரஸ் வந்தவுடன் அவரும் இயேசு சபையினரை விரும்பவில்லை. பரவர்களில்  ஒரு பிரிவினர் தூத்துக்குடிக்கு புதிய தளபதியாக கோவா ஆளுநரால் நியமிக்கப்பட்ட சுவராஸ் தி பிரிட்டோ என்பவருடன் இணைந்து கோண்டனர். மதம் ரோமன் கத்தோலிக்க மதமென்றாலும்  சபைகள் வேறு  என்னும் அடிப்படையில் இந்த மோதம் பல ஆண்டுகாலம் நீடித்தது.

சபையினருக்கிடையிலான  மோதல் பரவ மக்களுக்குள் மோதலை உண்டாக்கியது.  1635, 1638  என இது பெரும் கலவரமாக தூத்துக்குடியை தின்றது. இதனால் பெருமளவு பரவர்கள் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்தனர். முத்துக்குளித்துறையில் முத்திலிருந்து கிடைகும்  வருமானத்தை பங்கிட்டு இயேசு சபையினர் பெரும் செல்வத்திலும் ஆடம்பரத்திலும் கொழிப்பதாக எண்ணிக் கொண்டு அதில் பங்குகோருவதில் ஏற்பட்ட தகறாறுதான்  இத்தனைக்கும் காரணம். இயேசு சபையினருகும் போர்ச்சுக்கீசிய அரசு நிர்வாகத்தினருக்குமிடையே உருவான மோதலில் பல முறை பரவர்களை போர்ச்சுக்கீசியர்கள் தாக்கினார்கள். பெண்களைக் கவர்ந்து சென்றார்கள், சில நேரங்களில் படகுகளுக்கு தீயிட்டார்கள். இவர்களுக்குள் நிலவிய இந்த முரண்பாடும்  டச்சுக்காரர்கள்  மிக எளிதாக தூத்துக்குடியை ஆக்ரமிக்க  பிரதான காரணமாக இருந்தது.
போர்ச்சுக்கீசிய அரசு நிர்வாகிகளான துறைத் தலைவர்களிடம் பரவர்களை ஆளும் அதிகாரம் செல்வதை இயேசு சபையினர் விரும்பாததையும் அதற்காக அவர்கள் மக்களை குஷிப்படுத்தி போர்ச்சுக்கீசிய  அரசு  நிர்வாகத்திற்கு எதிராக தூண்டி விட்டதையும் புரிந்து கொள்ள  இந்திய, இலங்கையின் டச்சு ஆளுநராக இருந்த வான்கோயனுக்கு டச்சு அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையிலிருந்து பின் வரும் தகவலை அறிந்து  கொள்வது குறிப்பிடத்தக்கது.

‘’ முத்துக்குளித்தலினால் கிடைக்கும் பெரும் பயன்களை அறிந்து இந்திய அரசாங்கம் அதை மேற்பார்வையிடுவதற்கு போர்ச்சுக்கல் மன்னரின் சார்பாக இராணுவ உயரதிகார்களையும் துறைத் தலைவர்களையும் நியமித்தது. தேவாலயங்களையும் அவற்றில் மேலாண் அதிகாரத்தையும் பாதிரியார்களிடமே விட்டு விட்டது. அந்த துறைத் தலைவர்கள் முத்துக்குளித்தலில் இருந்து முறை ஒன்றுக்கு 6,000 டாலர்களை வசூலித்துக் கொண்டு மீதி வருமானத்தை பரவர்களுக்கு விட்டுக் கொடுத்தனர். செல்வந்தர்களாகி ஏராளமான செலவில் மதுபானம் அருந்தி ஆடம்பரமாக வாழ்ந்தனர்  தங்களுக்கு பாதுகாப்பளித்த பாதிரியார்களின் துணையுடன் துறைத் தலைவர்களை மிரட்டினர். அதனால் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்தன. இவற்றை எல்லாம் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாத காரணத்தால் எல்லா சிற்றூர்களுக்கும் தலமை இட்மாக விளங்கிய அரசருக்கு அரண்மனை ஒன்றை கட்டுவதில் துறைத் தலைவர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் இதனால் தங்களுக்குக் கிடைத்து வரும் ஆதாயங்களையும் வருமானத்தையும் இழக்க நேரிடுமோ என்று அஞ்சிய பாதிரியார்கள் ‘ இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பெரிய இடர்பாடு நேரிடும்’ என்று கூறி எல்லாவகையான குழப்பங்களையும் நிகழ்த்தும் படி மக்களிடம் வலியுறுத்தினர். கோட்டை கட்டி முடிக்கப்படாவிட்டாலும் தூத்துக்குடி புன்னைக்காயலின் இடத்தைப்  பிடித்துக் கொண்டது”   (12)

மன்னார் முத்துக்குளியில் போர்ச்சுக்கீசியர் செல்வம் ஈட்டிய போதிலும் தூத்துக்குடி முத்துக்குளித்தலில் அங்கு நிலவும்  குழப்பங்களால்  போர்ச்சுக்கீசியர்கள் அதிக லாபம் ஈட்ட முடியவில்லை. முத்துக்குளிப்பவர்களுக்கு வரி விதித்து குத்தகை முறையை அறிமுகம் செய்தனர்.இதனால் பெரும் பணக்காரர்களின் கைகளுக்கு   முத்துக்குளிக்கும் தொழில் சென்றது. முத்துக்குளித்தலின் கௌரவும் மரபும் வெறும்  பின்னுக்குப் போய் அவர்கள் விலை கொடுத்து வாங்கப்பட்ட கூலிகளாக மாறினார்கள். ஆனால் திருவிழா நிலைகளில் மாற்றம் இல்லை. நிலமைகள் சீரடையாத   1648- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் நாள் திருவிழா பனிமய மாதா ஆலயத் திருவிழா தொடங்கியது ‘’ அவ்வாண்டு எழுதப்பட்ட இயேசு சபை அறிக்கையில் அருட் தந்தை பல்தசார் டி கோஸ்தா  இவ்வாறு எழுதுகிறார் ‘’  முத்துக்குளித்துறையெங்கும் வாழும் மக்கள் அனைவருமே  ஒன்று சேர்ந்து மிகுந்த பக்தி சிறப்போடு அன்னையின் விழாவினைக் கொண்டாடுகின்றனர். மேலும் தேவ அன்னையின் வாழ்க்கை வரலாறு அவளது புதுமைகள் ஆகியவற்றை விளக்கித் தினந்தோறும் சுதேச (தமிழில்) மொழியில் நாடகங்கள் நடைபெற்றன. பரத கிறிஸ்தவர்கள் இந்நாடகங்களை தங்களுக்குரிய கலைத் திறமைகளோடும் கருத்தைக் கவரும் பாடல்களோடும் மிக அருமையாக நடித்துக் காண்பித்தனர். இத்தகைய பக்தி நாடகங்களில் நடிப்பதில் இவர்கள் நல்ல திறமைசாலிகள்’’

‘’இங்கு புதிதாக ஒரு மாதா சபை ஏற்படுத்தியுள்ளோம். இச்சபையில் மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இச்சபை வேகமாக வளர்ந்து பலனளிக்கும் என்பது உறுதி. தூத்துக்குடியைச்  சார்ந்த பட்டங்கட்டிகள்தான் இதில் முதல் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். பட்டங்கட்டி ஒருவர் 100 குருசாதோ தொகையில் அன்னைக்கு ஒரு வெள்ளிச் லுவையை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். மற்றவர்களும் தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கியுள்ளனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்குள்ளாகவே அன்னையின்  ஆலையம் பொன் வெள்ளி ஆபரணங்களால் நிறைந்து செல்வப்பெருகோடு திகழ்கிறது.  முத்துக்குளித்துறையில் சிதறிக்கிடக்கும் மற்ற ஆலயங்களும் 10  நன் கொடைகளைக் கொண்டு ஆபரணங்கள் நிறைந்து  மிக அழகுடன் உள்ளன. இங்குள்ள கிறிஸ்தவ மக்கள் நம் திருமறையில் நன்கு  பயிற்சி பெற்றுள்ளனர். கீழ்த்திசை நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரிலும் இம்முத்துக்குளித்துறையைச் சேர்ந்த மக்களே  மிகவும் சிறந்தவர்கள்”என்கிறார் தனது அறிக்கையில் .  (13)

போர்ச்சுக்கீசியர்களை தங்களின் மீட்பர்களாக நம்பும் படி அந்த மக்களுக்கு  போதிக்கப்பட்டது. தங்களை வைத்து சபையினரும், அரசு நிர்வாகமும் ஒரு மாபெரும் சூதாட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆடம்பரத்திலும் பகட்டிலும் திளைத்திருந்த அந்த சமூகத்தை சுமார் 125 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் போர்ச்சுக்கீசியர்கள். திருமலை நாயக்கருக்குக் கூட பரவர்களை நேரடியாக தன் கட்டுப்பாட்டினுள் எடுத்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தது அதற்கான ஒரு சந்தர்ப்பத்திற்காக அவரும் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் கழுகு வந்து கொத்திச் செல்வதைப் போல டச்சுக்காரர்கள் அவர்களை கொத்திச் சென்றார்கள்.

முதல் கோவிலும், முதல் மருத்துவமனையும் [மீனவ மக்கள் சொல்லப்படாத கதை பாகம்-7 ]


முதல் கோவிலும்  மீனவர்களின் பங்களிப்புகளும்.
..........................................................................................................

1532 -ம் ஆண்டிலிருந்தே  காயல் பரவர்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவத் துவங்கினார்கள். ஈடுபாடின்றி  மதப்பற்றில் உறுதியற்ற நிலை  நிலவியதால்  இவர்களை  கத்தோலிக்க நெறியில் உறுதிப்படுத்துவதற்காகவும், மேலும் கத்தோலிக்க மதத்தை மீனவ மக்களிடம் பரப்பவும் தூத்துக்குடிக்கு அனுப்பட்டவர்தான்  பிரான்சிஸ் சவேரியார் அவர் 1542 -ம் ஆண்டு  வருவதற்கு முன்பே தூத்துக்குடியில் முதல் கோவில் உருவாகி விட்டது.

’’   பரவ மக்களுக்கு திருமுழுக்கு அளித்த கொச்சி பங்குக் குரு பேதுரு கொன்சால்வஸ் அவர்களே தூத்துக்குடியில் முதல் கோவிலைக் கட்டினார். அதனை அவர் தன் பெயரைக் கொண்ட ‘’பேதுரு” என்ற பெயரைக் கொண்ட புனித இராயப்பருக்கே அர்ப்பணித்தார். இவரை மக்கள் (கொன்சால்வஸை) கட்டச்சாமி என்று அன்போடு அழைத்து வந்தனர். 1582-ல் ‘இரக்கத்தின் மாதா”  என்ற ஆலையம் உருவான பின்னரும் புனித இராயப்பர் கோவில்தான்   தூத்துக்குடி  மக்கள் வழிபடும் கோவிலாக  இருந்தது. சவேரியார் முத்துக்குளித்துறையில் தங்கியிருந்த போது கூட இந்த இராயப்பர் கோவிலில்தான் வழிபாடுகளை நடத்தி வந்தார் ‘’ (2)

முதலில் கொச்சி மறை மாநிலமும்,  தூத்துக்குடி திருச்சபையும்  கோவாவில்  உள்ள  போர்ச்சுக்கீசிய இயேசு சபையினரின்  கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. 1557-ல் கோவா மறை மாநிலத்திலிருந்து பிரிந்து கொச்சி தனி மறைமாநிலமாக ஆன பிறகு கொச்சி மறை மாநிலத்தில் கீழ் தூத்துக்குடி கொண்டுவரப்பட்டது  இக்காலக்கட்டத்தில் இயேசு சபைக்குருக்கள் பலரும் இங்கு வந்து பணி செய்தார்கள். அப்படி சவேரியாருக்குப் பின்னர் மூன்றாவது இயேசு சபைத் துறவியாக  தூத்துக்குடிக்கு வந்தவர்தான்  தமிழுக்கு பெரும் தொண்டு செய்த அன்றிக் அடிகளார். சேவை மனப்பான்மை கொண்ட ஆன்றிக் அடிகளாரின் பங்களிப்பு அக்காலத்திலேயே அளப்பரியதாக இருந்தது. போர்ச்சுக்கிசியர்கள் கோட்டை அமைத்திருந்த புன்னைக்காயலிலேயே  தங்களின் முதல் நிர்வாகத் தலைமையகத்தை அமைத்துக் கொண்டனர்.  அங்கே அன்றிக் அடிகளாரின் முயற்சியில் முதல் மருத்துவமனையும், அச்சுக்கூடமும் , இறையியல் கல்லூரியும்   உருவானது. ஆனால் புன்னைக்காயல் அடிக்கடி கயத்தாறு மன்னனாலும், மதுரை நாயக்கனாலும் தாக்கப்பட்டு வந்ததால்   புன்னைக்காயலில் இருந்து தங்களின் தலைமையகத்தை  தூத்துக்குடிக்கு மாற்றினார்கள் இயேசு சபையினர்.  1579-ம் ஆண்டு இயேசு சபையினர் தூத்துக்குடியை தங்கள் தலைமை இடமாக   தேர்ந்தெடுத்தனர்.  1580 ம் ஆண்டில்தான் போர்ச்சுக்கீசிய அரசு  நிர்வாக ரீதியாக  தூத்துக்குடியை தலைமையிடமாக  தேர்ந்தெடுத்தனர். பரவர்கள் புன்னைக்காயலில் இருந்து தூத்துக்குடிக்கு மாறிய போர்ச்சுக்கீசியருக்கும், இயேசு சபையினருக்கும் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர்.

தூத்துக்குடியில்  இயேசு சபையினர்  அமைத்த இல்லத்திற்கு பரவர்கள் ஆண்டு  தோறும் 2,000 குருசாதோக்களை (3) வழங்கி வந்தனர். முத்துக்குளித்துறையின் வருமானத்தைக் கொண்டே இயேசு சபை நடத்தப்பட்டது .கிறிஸ்தவ மத  துறவிகளை உருவாக்கும் கல்விச்சாலை ஒன்று இதனுள் அமைக்கப்பட்டது அதை  ‘சம்பவுல் கல்லூரி’ என்று வழங்கினார்கள். 1588 -ல் இந்த குருமடத்தைக் கட்டுவதற்கான முழு செலவுகளையும் பரவர்கள் ஏற்றுக் கொண்டனர்.சுமார் 30 உள்ளூர் மாணவர்கள் அப்போது குருத்துவக் கல்வியின் ஆரம்பக் கல்வி பயின்றனர்.  இவர்கள் மேற்படிப்பிற்காக கோவா செல்வார்கள்.  என  இடியின் ரகசியம் நூலில் குறிப்பிடுகிறார் அருட் தந்தை வெ.வெனான்ஜியூஸ்.


போர்ச்சுக்கீசியர் வரும்  போது கத்தோலிக்க மரபில்  இயேசு சபையினர் மட்டுமல்லாது பிரான்சிஸ்கு சபையினரும், தொமினிக் சபையினரும் கூட மதப்பரப்பலுக்காக வந்தனர். ஆனால் தென் தமிழக கடலோரமான தூத்துக்குடியில் மதம் மாறிய கிறிஸ்தவ பரவர்களை கண்காணிக்கும் பொறுப்பை இயேசு சபையினரிடமே போர்ச்சுக்கல் மன்னார்  ஒப்படைத்தார். இயேசு சபையினர்  தங்களை  நிலை நிறுத்திக் கொண்ட பின்னர்  பிரான்சிஸ்கு சபையினரும் தூத்துக்குடிக்கு வந்தனர். அங்கு 1595 -ல் கட்டப்பட்டிருந்த ‘தேவ அன்னை மடம்”  அவர்களுக்கு  தானமாக வழங்கப்பட அவர்கள் அங்கிருந்த படி மறைபரப்பில் ஈடுபட்டனர் . அவர்களும் தங்கள் பங்கிற்கு  பெரியதோர் ஆலயத்தையும் மடத்தையும் அமைத்தனர். தூத்துக்குடி பரவர்களின்  வருமானத்திலிருந்தே இந்த  தொகைகள் வழங்கப்பட்டன.

முதல் மருத்துவமனை
...............................................

போர்ச்சுக்கீசியர்கள் முதன் முதலாக குடியேறிய புன்னைக்காயலில் முதல் குருத்துவ தமிழ் கல்லூரியை கிபி 1578- லும், முதல் அச்சுக் கூடத்தை 1578-லும், முதல் வேதியர் பயிற்சி நிலையத்தை 1550 -லும் புன்னைக்காயலில் துவங்கினார்கள். தமிழின் அச்சுத் தந்தை என அனைவராலும் புகழப்படும் அன்றிக் அடிகளார் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த ஊர் புன்னைக்காயல்தான். அவர்தான் 1550 -ல் புன்னைக்காயலில் பரவரின் நிதியில் முதல் மருத்துவமனையை நிறுவினார். இது தொடர்பாக உரோமையிலுள்ள இயேசு சபை தலைமை இல்லத்திற்கு 1551- ஜனவரி 12-ஆம் தேதி எழுதிய மடலில் , ‘’முத்துக்குளித்துறையிலும் உள்நாட்டுப் பகுதியிலும் பிணியுற்ற ஏழை மக்களின் நலனுக்காக அண்மையில் புன்னைக்காயலில் புதிதாக ஒரு மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம் இம்மருத்துவமனையானது இந்நாட்டிலேயே மிகவும் வியக்கத்தக்க புதுமையான ஒரு நிறுவனமாகும் இப்படிப் பட்ட ஒன்றை இப்பகுதியில் வாழும்  மக்கள் இதுவரை அனுபவித்ததே இல்லை இம்மருத்துவமனையானது நமது  (இயேசு சபை) இல்லத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.’’ (4)

‘’இம்மருத்துவமனையில் சாதி மத வேறுபாடின்றி எல்லா பிணியுற்ற மக்களும் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.இங்கு விளங்கிய கிறிஸ்தவ பிறரன்பு பிற மத மக்களை மிகவும் கவர்ந்தது இத்தகைய அன்பு அவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம் அதனால் கிறிஸ்தவ திருமறையை தங்களின் தாய் எனக் கருதினர் . பலர் தங்களின் மரணப்படுக்கையில் திரு நீராட்டுப் பெற்று இறந்தனர் (5) .16-அம் நூற்றாண்டில் புன்னைக்காயலில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை இந்தப் பகுதியின் அனைத்து சமூக மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக  விளங்கியது.  அங்கு பிணியுற்ற நோயாளிகளுக்கு இலவச உணவும், உடு துணிகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவமனை முழுக்க முழுக்க முத்துக்குளி பரவர்களின் நிதியிலேயே கட்டப்பட்டதோடு அது செயல்பட்டதும் மக்களின் நிதியில்தான். வாரந்தோறும் மக்களுக்கு சிறப்பு வரிகளை விதித்து மருத்துவமனைக்கு நிதி சேர்த்தார் அன்றிக்ஸ் அடிகளார். 1560-ஆம் ஆண்டு நடைபெற்ற முத்துக்குளிப்பின் பின்னர் 2000 ரூபாய் நிதியை  மருத்துவமனைக்கு மக்கள் வழங்கினார்கள். கடற்றுறையில் குற்றங்கள் செய்கிறவர்களுக்கு விதிக்கப்படும் தண்டத் தொகையும் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. துவக்கத்தில் போர்ச்சுக்கீசிய படைவீரர்களும் இம்மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் போர்ச்சுக்கல் மன்னரின் நிதியில் வீரர்களுக்கான தனி மருத்துவமனை  1551- ல் புன்னைக்காயலில் உருவானது .பொது மக்களின் சேவைக்காகவும் . போர்ச்சுக்கீசிய படையினரின் சிகிச்சைக்காகவும் உருவாக்கப்பட்ட இரு மருத்துவமனைகளும், இயேசு சபை இல்லமும் 1553-ல் வடுகப்படைகளால் தாக்கியழிக்கப்பட்டன. அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், மீள உருவாக்கப்பட்ட மருத்துவமனைகள் 1590 கள் வரை  புன்னைக்காயலில் இயங்கிவந்நததாக குறிப்புகள் சொல்கின்றன.  (6) ஆனாலும் 1579, 80 -களில் புன்னைக்காயலில் இருப்பது பாதுகாப்பானதல்ல என்பதை உணர்ந்த இயேசு சபையினர் தங்களின் தலைமையகத்தை தூத்துக்குடிக்கு மாற்ற புன்னைக்காயல் பொலிவிழந்து போனாது. ஆனாலும் அங்கு மருத்துவமனை இயங்கிக் கொண்டுதான் இருந்தது. வரலாற்றில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்த அருட்தந்தை அன்றிக் அடிகளார் 1600-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் நாள் புன்னைக்காயலில்  மறைந்த போது  ஒட்டு மொத்த முத்துக்குளித்துறை பரவர்களும் கூடி  அவரது உடலை ஏழு கடற்துறையைச் சார்ந்த பட்டங்கட்டிகளும் அலங்கரிக்கப்பட்ட ஏழு தோணிகளில் ராஜமரியாதையோடு எடுத்து வந்து தூத்துக்குடியில் புதைத்தனர்.

புன்னைக்காயலில் கட்டப்பட்ட முதல் மருத்துவமனையும், இயேசு சபை இல்லமும்  கயத்தாறு மன்னானாலும், நாயக்க மன்னர்களாலும் சூறையாடி தீக்கிரையாக்கப்பட அவர்கள் இரண்டாவதாக 1567 -ல்  மீண்டும்  தூத்துக்குடியில் முதல் மருத்துவமனையை  உருவாக்கினார்கள்.  முழுக்க முழுக்க இலவச மருத்துவமனையாக  செயல்பட்ட இந்த மருத்துவமனை சாதி மதம் பார்க்காது சகல மக்களுக்கும் சேவை செய்து வந்தது. இந்த மருத்துவமனையும் முத்துக்குளித்துறை வருமானத்தைக் கொண்டே மக்கள்  பணத்திலேயே கட்டப்பட்டது.ஏழைகளுக்கு உணவும் உடையும் வழங்கப்பட்டது.  பின்னர் 1582 -ல் இரக்கத்தின்மாதா ஆலயத்திறப்பு விழாவின் போது பரதவ மக்கள் 200 குருசாதோக்களை  இம்மருத்துவமனைக்கு வழங்கியதாக இயேசுசபைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மதம் மாறிய சுமார் ஐம்பது வருடங்களுக்குள் ஒட்டு மொத்த பரவ மக்களும் ரோமன் கத்தோலிக்க மதத்தினுள் ஐய்க்கியமாகிப் போயினர். முத்துக்குளித்தலில் கிடைக்கும் பெருமளவு வருமானம் போர்ச்சுக்கல் அரசுக்கும் , போர்ச்சுக்கல் ராணியின் காலணிக்கும்,  நாயக்க மன்னர்களுக்கும், கயத்தாறு மன்னனுக்கும், மூர்களுக்கும், பரவ சாதித் தலைவர்களுக்கும்,  வரியாகப் போக மீதியை அவர்கள் மறைப்பரப்பலில் ஈடுபட்ட சபைகளுக்கும், கோவிலுக்கும் கொட்டிக் கொடுத்தார்கள். போர்ச்சுக்கீசியர்கள் இந்த பரவர்களைச் சுரண்டும் உரிமைக்காக மதுரை நாயக்கர்களுக்கு இலவச முத்துக்களை அளித்தது போக   இராமநாதபுரம் சேதுபதிக்கும் ஒவ்வொரு முத்துக்குளித்தலின் போதும் திறையாக சுமார் 60  இலவசக் கற்களை வழங்கி வந்தனர் (7)   ஏனென்றால் நாயக்கர்கள் கட்டுப்பாட்டில்தான் எல்லா பகுதிகளும் இருந்தன. மதுரை நாயக்கர்கள் விஜயநகர மன்னர்களுக்கு திறை செலுத்துவோராகவும், மதுரை நாயக்கர்களுக்கு கயத்தாறு பாளையக்காரர்கள்  திறை செலுத்துவோராகவும் இருந்தனர், இவர்களின் ஆதரவின்றி முத்துக்குளித்தல் தொழிலை செய்ய முடியாது என்பதால் முத்துக்களை திறையாக செலுத்தினார்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

1570 -ல்  கடலோரத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது . இக்காலத்தில் கூட இயேசு சபையினரும் போர்ச்சுக்கீசியர்களும் மக்களிடம் இருந்து வரிகளைப் பெற்றுக் கொள்வதில் உறுதியாக நடது கொண்டனர். போர்ச்சுக்கீசியர்களின் அனுமதியின்றி முத்துக்குளிப்பவர்களையோ பரவர்களையோ சுதந்திரமாக எவரும் சந்திக்க இயலவில்லை என்பதை கால்டுவெல்லின் குறிப்பு ஒன்று நமக்கு உணர்த்துகிறது இவ்வாறு ‘’ 1563 - 1563 க்குப் பிறகு சீசர் பிரடெரிக் என்பவர் கடற்கரைக்கு வந்த போது முத்துக்குளிப்பவர்களைக்காண போர்ச்சுக்கீசிய அதிகாரிகளின் அனுமதியைப் பெறுகிறார்” என்கிறார் கால்டுவெல்.  சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குள் போர்ச்சுக்கீசியர்களும் இயேசு சபையினரும் கரையோர மீனவர்களிடம் எந்த விதமான ஆதிக்கம் கொண்டிருந்தனர் என்பதை புரிந்து கொள்ள இது உதவுகிறது.

வடுகர்களின் தாக்குதலும், சிதறி ஓடிய கடற்கரைச் சமூகமும் [மீனவ மக்கள் சொல்லப்படாத கதை பாகம்-6]



மதம் மாறிய மக்களின் நிலை.
..............................................................................

‘’ எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மனம் திருப்பப்பட்ட மக்களை கொண்ட கிறிஸ்தவ கிராமங்கள் வழி சென்றோம். நிலம் மிக குறைந்த பயன் தருவதாலும் வெகு மோசமாக இருப்பதாலும் இந்த கிராமங்களில் போர்த்துக்கீசியர் யாரும் வசிப்பதில்லை,இந்த கிராமங்களில் கிறிஸ்தவர்களுக்கு மறைக்கலவி அளிக்க யாரும் இல்லாததால் அவர்களுக்கும் கிறிஸ்தவர்கள் என்று சொல்வதைத் தவிற வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்ற யாரும் இல்லை. விசுவாச அறிக்கை ஏசு கறிபித்த ஜெபம். அருள் நிறைந்த மரியே ஜெபம், பத்து கட்டளைகள்.ஆகியவற்றை கற்பிக்க யாரும் இல்லை. இந்த கிராமங்களுக்கு நான் வந்த போது இதுவரை திருமுழுக்கு பெறாத எல்லா குழந்தைகளுக்கும் திருமுழுக்கு அளித்தேன் “

மூர்களுடனான யுத்தம் தொடர்பாக சவேரியார் எழுதிய கடிதத்தில்.

’’இப்பகுதிகளில் அண்மையில் மனந்திருத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் மீது ஆளுநர் பேரன்பு கொண்டிருக்கிறார். மூர்களால் துன்புறுத்தப்பட்டு தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவர் அவர்களுக்கு பேருதவி செய்தார். இந்த அனைத்து கிறிஸ்தவர்களும் கடலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். அதன் சொத்தை வைத்து மட்டுமே வாழ்கின்றனர்.அவர்கள் மீனவர்கள் அவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான படகுகளை மூர்கள் பிடித்தனர். ஆளுநர் இதைக் கேள்விப்பட்டு தாமே ஒரு படையுடன் சென்று மடக்கிப் பிடித்து பலரையும் கொன்று அவர்கள் எல்லோரையும் ஓட வைத்தார்.ஒன்று கூட இல்லாமல் எல்லா படகுகளையும் இந்நாட்டு கிறிஸ்தவர்களிடமிருந்து கைப்பற்றியவற்றையும் சேர்த்து பிடித்தார். கிறிஸ்தவர்களின் படகுகளை அவர்களுக்கே திரும்பக் கொடுத்தார். மூர்களிடமிருந்து கைப்பற்றியவற்றை படகு இல்லாத மற்றும் வாங்கவியலாத ஏழைகளுக்குக் கொடுத்தார். இவ்வாறு மறக்க முடியாத பெரும் வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஆண்டவர் அவருக்கு உதவியது போல அதற்கு நன்றிக்கடனாக கிறிஸ்தவர்களுடன் தாராளமாக நடந்து கொண்டார். இப்போது மூர்கள் என்ற பேச்சே இல்லை. அவர்கள் யாரும் தலைதூக்கத் துணிய மாட்டார்கள். அவர்களின் எல்லா தலைவர்களையும் முக்கியமானவ்ர்களையும் ஆண்டவர் கொன்றார் இப்பொழுது  கிறிஸ்தவர்கள் ஆளுநரை தங்கள் தந்தையாகவும் அவர் இவர்களை கிறிஸ்துவின் குழந்தைகளாகவும் நினைத்து வாழ்கின்றனர். இந்த புதிய செடிகளை என்னிடம் எவ்வளவு பக்குவமாக ஆண்டவராகிய கடவுள் கொடுத்துள்ளார் என்பது அவருக்குத் தெரியும் “

என்னவிதமான உரிமையை சவேரியார் மீன்பிடி பரதவர் மக்கள் மீது கொண்டிருந்தார் என்பதற்கு கடிதங்களிலுருந்த இந்த பாகங்களை எடுத்துக் கொள்ளலாம்.  ‘’ ஒரு நல்ல தந்தை தம் தீய மைந்தர்களிடம் நடந்து  கொள்வது  போல இந்த மக்களுடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். என்று மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் மத்தியில் நிலவும் பல தீமைகளைக் கண்டு மனம் தளர்ந்து விட வேண்டாம் ஏனெனில் கடவுளும் இந்த மக்களால் பல நிபந்தனைகளுக்கு ஆளாகிறார். அதற்காக இவர்களை அழித்தொழிக்கும் ஆற்றல் அவரிடமிருந்தாலும் அப்படி அவர் செய்யவில்லை அவர்களது வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் அவர்களுக்கு வழங்காது மறுக்கக்கூடிய வல்லமை அவருக்கு இருந்தாலும் அவர்களைப் பாதுகாத்து பராமறிப்பதை அவர் ஒரு போதும் நிறுத்தவில்லை “

’’நான் வரும்வரை அங்கு பணி புரிய ஒரு பணியாளரை அனுப்பி வைக்கிறேன். கள் குடிக்கும் பெண்களைப் பிடிக்கும் இப்பணியாளருக்கு வெகுமதியாக ஒரு பெண்ணுக்கு ஒரு பணம் வீதம் கொடுக்கிறேன். அவர்கள் மூன்று நாட்களுக்கு தனிமையில் அடைக்கப்பட வேண்டும். புன்னைக்காயலில் கள் குடிப்பது தொடர்கிறது என்று கேள்விப்பட்டால் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் இதை ஊரார் அனைவருக்கும் சிறப்பாக பட்டங்கட்டிகளுக்கும்  (சாதித் தலைவர்களுக்கும் அறிவித்து விடுங்கள்.

ஆறு நாள் இடைவெளியில் எழுதப்பட்ட இரண்டாவது கடிதத்தில்

” மக்களோடு மிகவும் நல்ல முறையில் பழக வேண்டும் அவர்களால் சிறப்பாக அன்பு செய்யப்படுவதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகப்பெரிய பணியாகும் அவர்கள் செய்யும் கூற்றங்களை மிகவும் பொறுமையாக பொறுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் இதுவரை நல்லவர்களாக இல்லாவிட்டாலும், உரிய காலத்தில் நல்லவர்களாக இருப்பார்கள்.

சவேரியார் கடற்கரைக்கு வந்த இரண்டாவது ஆண்டிலிருந்தே வடுகர்கள் பரவர்களை தாக்கத் தொடங்கினார்கள், அது பல்வேறு காலக்கட்டங்களில் தொடர்கிறது. என்பதற்கான சான்றுகள் அவருடைய கடிதங்களில் உள்ளன. அப்படி என்றால் பரவர்கள் மதம் மாறியிருந்த இந்த பத்தாண்டுகளில் அவர்கள் எவராலும் தாக்கப்படவில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் 16-ஆம் நூற்றாண்டில்  திருவிதாங்கூரைத் தவிற ஒட்டு மொத்த தென்னிந்தியாவையும் கைப்பற்றியிருந்த விஜயநகரப் பேரரசு கடற்கரையைப் பகுதிகளில் கவனம் செலுத்த வில்லை. அவர்கள் பெருமளவு மூர்களிடமிருந்து வரும் திறைகளைப் பெற்றுக் கொண்டு முத்துக்குளிக்கும் உரிமையில் நேரடியாக தலையிடாமல் இருந்து வந்தனர். போத்துக்கீசியர் வந்து மூர்களை விலக்கி முழுமையாக முத்துக்குளித்துறையை கைப்பற்றும் போதே விஜயநகர மன்னர்களுக்கு திறை வசூலித்துக் கொடுக்கும் குறுநில மன்னரான வெட்டும் பெருமாள் பரவர்களைத் தாக்கத் தொடங்குகிறார்.

புதிய எதிரிகள். -உன்னி கேரள வர்மன், வெட்டும் பெருமாள்.
....................................................................................................................................................

திருவிதாங்கூர் மன்னனின் நண்பனான உன்னி கேரளவர்மனுக்கும். வெட்டும் பெருமாளுக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்தது. உன்னி கேரளவர்மனுக்கு போர்த்துக்கீசியரின் உதவி தேவைப்பட அவர்கள் பிரான்சிஸ் சேவியரை நாடினார்கள். போர்த்துக்கிசியரின் உதவியைப் பெற்றுக் கொடுத்தால் சேவியரின் மதப்பரப்பலுக்கு உதவுவதாக உன்னி சொன்னார். அதனால் கொச்சியில் இருந்த போர்த்துக்கீசிய ஆளுநரைச் சந்திக்க சேவியர் 1544-ல் மார்ச் மாதம் வாக்கில் பயணம் மேற்கொண்டார். உன்னி கேரள் வர்மனின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் கரையோரப் பகுதிகளாக இருந்த காயல்பட்டினம், கொம்புதுறை, வீரபாண்டியன்பட்டிணம், திருச்செந்தூர், ஆலந்தலை, குலசேகரப்பட்டினம், மணப்பாடு, பெரியதாளை, உவரி, கூத்தங்குளி, இடிந்தகரை, பெருமணல், குமரி முட்டம், கன்னியாகுமரி என பெரும்பலான பரவர்கள் வாழ்ந்த பெருந்தொகையான கிராமங்கள் இருந்தன. கிறிஸ்தவ மதத்திற்கான பரப்பலுக்கு உன்னி கேரளவர்மனின் உதவியும் திருவிதாங்கூர் மன்னனின் உதவியும்  சவேரியாருக்கு புவியியல் ரீதியாகவே தேவையாக இருந்ததால் அவர் உன்னி கேரள வர்மனுக்கு உதவினார். அந்த மன்னனுக்காக போர்த்துக்கீசிய தளபதியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். சவேரியாரின் சிபாரிசில் போர்த்துக்கீசிய ஆளுநர் அல்போன்சோ டி சூசாவின் உதவி உன்னிக்கு கிடைக்க கோபமடைந்த வெட்டும் பெருமாள் கிறிஸ்தவர்களைத் தாக்கினான். சவேரியார் கிறிஸ்தவ மீனவர்களை உன்னிகேரள வர்மனின் எல்லைப் பகுதிக்கு இடம் பெயருமாறு கூற இடம் பெயரவேண்டும், இடம் பெயர வேண்டாம் என்ற பிளவு பரவர்களுக்குள் ஏற்பட்டிருக்கிறது. அப்படி இடம் பெயற விரும்பாத மக்களை போர்த்துக்கீசிய தளபதி  கோஸ்மி டி பாய்வா ஆதரித்திருக்கிறார் .ஏனென்றால் அவர் வெட்டும் பெருமாளுக்கு குதிரைகள் விற்று கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் பிரான்சிஸ் சேவியர் உன்னி கேரள வர்மனை ஆதரிக்க இவரோ வெட்டும்பெருமாளுக்கு குதிரை விற்றார்.

கிறிஸ்தவ பரவர்கள் மீதான வடுகர்களின் தாக்குதலும், சிதறி ஓடிய கடற்கரைச் சமூகமும்.
............................................................................................................................................
பரவர்கள் மதம் மாறிய 1532 - இல் சேவியர் கடற்கரையில் வாழ்ந்த 1542-ல் பழைய எதிரிகள் மீண்டும் பரவர்களைத் தாக்கினார்கள். தெலுங்கு  நாயக்க மன்னர்களின் வழித்தோன்றல்களான வடுகர்கள் எனப்படும் படுகர்கள் நாயக்க மன்னர்களுக்கு வரி வசூலித்துக் கொடுப்பவர்களாக இருந்தனர். வரி கொடுக்க மறுக்கும் மக்களின் இடங்களை கொள்ளையடிக்கவும் கொடூர சித்திரவதை புரிவதிலும் இவர்கள் கைதேர்ந்தவர்கள் ,, (திருநெல்வேலிச் சரித்திரம்- கால்டுவெல்-பக்கம்-106)  போர்த்துக்கீசியரின் குடி மக்களாக சிறப்புரிமை பெற்று கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்ட பரவர்கள் மீது மிகுந்த சினம் கொண்டார்களாக நாயக்க மன்னர்கள் இருந்து தொடர்ந்து தாக்கி வந்தனர். இந்த வடுகப்படைகளிடம் இருந்து பர்வார்களைக் காக்க திருவிதாங்கூர் மன்னனிடம் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயர்சியை பிரான்சிஸ் சவேரியார் மேற்கொண்டார். ஆனால் படுகர்கள் திருவிதாங்கூரையே தாக்கும் அளவுக்கு வலிமை பெற்றவர்களாக இருந்தனர். நாயக்க மன்னர்கள் தொடர்ந்து பரவர்களைத் தாக்கக் காரணம் அவர்கள் போர்ச்சுக்கீசியர்களாக தேசிய மாற்றம் அடைந்ததே காரணம் என்கிறார்.  இதனால்தான் நாயக்க மன்னர்கள் பரவர்களை திரும்பத் திரும்பத் தாக்கினார்கள். இந்த தாக்குதல் டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை கைப்பற்றிய பின்னரும் தொடர்ந்தது. போர்ச்சுக்கீசியருக்கு வரியோ கப்பமோ கொடுக்காமல் அதை தங்களுக்கே வழங்க வேண்டும் என்பது நாயக்க மன்னர்களின் கோரிக்கை. (திருநெல்வேலி சரித்திரம்-பக்கம்-109)

1544-ல் ஜூன் மாதம் வடுகப்படைகள் கிறிஸ்தவ மீனவர்களை முற்றுகையிட்டன, அவர்கள் கொள்ளையடித்தார்கள், சூறையாடினார்கள். தரைவழிப்பாதைகள் எல்லாம் அடைபட்ட நிலையில் சவேரியார் அவர்களுக்கு உதவி 20 படகுகளில் போவதாக மன்சிலாவுக்கு எழுதுகிறார் இப்படி ,  ’’சனிக்கிழமை நான் மணப்பாட்டிற்கு வந்தேன், கன்னியாகுமரியில் இருக்கும் கிறிஸ்தவர்கள் பற்றித் துயரச் செய்திகள் கிடைத்துள்ளன. வடுகர்கள் அவர்களைச் சிறைப்பிடித்துள்ளனர். தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கிறிஸ்தவர்கள் கடலில் உள்ள பாறைகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் பசியாலும் தாகத்தாலும் மடிகின்றனர். நான் இன்று இரவு மணப்பாட்டிலிருந்து அவர்களுக்கு உதவி செய்ய 20 தோணிகளில் பயணம் செய்வேன். ”

ஆனாலும் இந்த மீனவர்கள் தாக்கப்பட்ட காலத்திலும் கூட தாக்குதல் நடைபெறாத இடங்களில் அவர் திருமுழுக்குக் கொடுக்க துறவிகளை ஊக்குவிக்கிறார். கொம்புதுறைக்குச் சென்று கோவில் கட்ட உத்தரவிடுகிறார். கன்னியாகுமரி மீனவர்களுக்கு உதவுவதாக கடிதம் எழுதிய பின்னர் 14 நாட்களுக்குப் பின்னர் ஜூன்- 30-ல் மணப்பாட்டிலிருந்து பிரான்சிஸ் மன்சிலாவுக்கு எழுதிய கடிதத்தில் கன்னியாகுமரி கிறிஸ்தவர்களுக்கு உதவ அவர் மேற்கொண்ட பயணம் கடல் காற்றால் தோல்வியில் முடிந்ததால் திரும்பி வந்ததாகவும், காற்றின் வேகம் குறைந்த பின்னர் அவருக்கு உதவப் போவதாகவும் எழுதுகிறார்.

மீனவர்களுக்கு உதவ முடியாமல் போன வேதனையை சவேரியார் இப்படிப் பதிவு செய்கிறார்  //இந்த உலகத்திலே அதிக வேதனை தரக்கூடிய விஷயம் உண்டென்றால் அது துர்பாக்கியசாலிகளான கிறிஸ்தவர்களின் துன்பங்களைக் கண்களால் பார்ப்பதேயாகும். ஒவ்வொரு நாளும் அவர்களின் பலர் களவாடப்பட்டவர்களாய், ஆதரவற்றவர்களாய், உணவும் உடையும் இல்லாதவர்களாய் மணப்பாடு வந்த வண்ணம் உள்ளனர் , இவ்வகை துர்ப்பாக்கியசாலிகளுக்கு உதவும் படி பட்டங்கட்டிகளுக்கு கடிதம் எழுதுகிறார்.

நிலமை சீரடைந்த பின்னர் ஜூலை மாதம் முழுவதையும் கன்னியாகுமரி மீனவர்களோடு செலவிட்டதாகவும் தன் புதுமையால் வடுகர்களை துரத்தியகாதவும் இன்னமும் கன்னியாகுமரி மாவட்ட மக்களிடம் செவி வழிக்கதைகளாகவும் குருசடிகளில் நன்றி மன்றாட்டுக்களாகவும் சொல்லப்படுகின்றன.

தொடர்ந்து நடந்த தாக்குதல்கள்.
.....................................................................................

‘’ வடுகர்களால் கொள்ளையடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து தப்பி ஓடிய கிறிஸ்தவர்களைச் சந்திக்க குமரி முனைக்குத் தரை வழிப் பாதையாகச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி மிகவும் பரிதாபமானது சிலருக்கு உணர்பதற்கு எதுவும் இல்லை. வயதான சிலரால் தப்பித்து வரமுடியவில்லை. சிலர் இறந்து விட்டனர். வழியிலேயே குழந்தைகளை ஈண்டுத்த தம்பதியரை சிலர் நான் பார்த்தது போன்று நீங்களும் பார்த்திருந்தால் உங்களுடைய இரக்கத்தை இன்னும் அதிகமாகத் தூண்டியிருக்கும் மிகப் பரிதாபமான காட்சிகளும் இருந்தன. எல்லா ஏழைகளையும் மணப்பாட்டிற்கு வர ஆணையிட்டுள்ளேன். எனவே இந்தக் கிராமத்தில் நிறைய ஏழைகள் இருக்கிறார்கள். இந்த ஏழைகள் மீது இரக்கம் காட்டப் பணக்காரர்களின் மனதைத் தூண்டுமாறு ஆண்டவரிடம் கேளுங்கள் “

வடுகர்கள் காட்டுக்குள் தப்பி ஓடிய கிறிஸ்தவர்களை தாக்கிக் கொள்ளையடித்தனர். என்றும் ஒரு கிறிஸ்தவரையும் ஒரு புறச் சகோதரர் எழுதுயுள்ளார். எல்லா பக்கமிருந்தும் மோசமான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

வடுகர் படைகளான விஜயநகரப் பேரரசின் படைகள் 1532,1544,1546, 1547 ஆகிய காலங்களில் தென்னிந்தியாவைக் கைப்பற்ற நடத்திய போரின் போதெல்லாம் கடலோரப்பகுதிகளில் கிறிஸ்தவ மீனவர்களும் போர்த்துக்கீசியர்களும் தாக்கப்பட்டனர். கயத்தாறில் ஆட்சி செய்த வெட்டும் பெருமாள் 1531- முதல் 1551 வரை தான் ஆட்சி செய்த காலம் முழுக்க தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப்பகுதிகளை தாக்கினான். இந்தத் தாக்குதலும் கொள்ளைகளும் பெருமளவு பொருட்சேதத்தை கிறிஸ்தவ மீனவ மக்களுக்கு உருவாக்கியது. அதனுடைய விளைவுகளாக கடலோர மக்கள் பல இடங்களுக்கும் சிதறி ஓடினார்கள்.  தூத்துக்குடிப் பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் அப்பகுதியைச் சுற்றியுல்ள தீவுகளில் தஞ்சமடைந்தனர். கோசல் ஏரித் தீவு, வான் தீவு, பாண்டியன் தீவு, முயல்தீவு, என இந்த தீவுகளில் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.  போர்த்துக்கீசிய தளபதியாக தூத்துக்குடியில் தங்கியிருந்தவர் கோஸ்மே டி பாய்வா அவர் மீன்பிடிக்கரையில் 1543 - 1545 இருந்த போது கோஸ் மே டி பாய்வா கயத்தாறு மன்னன் வெட்டும் பெருமாளுக்கு குதிரைகளை விற்றதால் சேவியருக்கும் தளபதி கோஸ் மே டி பாய்வாவுக்குமிடையில் கருத்து வேறு பாடு எழுந்தது.சவேரியாரோ உன்னி கேரள வர்மனுக்கு ஆதரவாக இருந்தார். 1544-ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வடுர்களின் தாக்குதலில் தளபதி கோஸ் மே டி பாய்வாவின் வீடும் படகும் கொளுத்தப்பட அவர் தீவுகளுக்கு மக்களுடன் தப்பிச் சென்றார்.

தீவுகளில் தஞ்சமடைந்த தூத்துக்குடி மக்களை திரும்ப அழைத்தல்.
.......................................................................................................................................................

”வெட்டும்பெருமாள் மற்றும் அவரது குதிரைப் படையினரின் துன்புறுத்தலால் அந்த மக்கள் பசி தாகத்தால் இறக்க விட்டு விடாதீர்கள். பசியாலும் தாகத்தாலும்  செத்துக் கொண்டிருக்கும் தூத்துக்குடி கிறிஸ்தவர்களை உங்களுடன் சேர்த்து  அந்தத் தீவுகளில் இருந்து அழைத்து வருவதற்குத் தேவையான தோணிகளை தயாராக வைத்திருக்கும் படி புன்னைக்காயல், கொம்புதுறை பட்டங்களுக்கு ஓலை அனுப்புகிறேன்.உண்ண உணவும் குடிநீரும் எடுத்துச் செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள் “

இந்த தாக்குதல்களுக்கிடையில் உன்னி கேரளவர்மனின் அளுகைக்குட்பட்டிருந்த பகுதிகளில் திருமுழுக்கு பணிகள் வேகமாக நடந்தன. ஒரு பக்கம் வடுகப்படைகள் தொடர்ந்து கிறிஸ்தவ மீனவர்களைத் தாக்க உன்னி கேரள வர்மன் மற்றும் அவரது நட்பு மன்னரான திருவிதாங்கூர் மன்னரும் சவேரியாரின் உதவிக்கு நன்றிக்கடனாக கோவில்கள் கட்டவும்,. திருமுழுக்கு அளிக்கவும் உதவினார்கள்.

”தூத்துக்குடி கிறிஸ்தவர்கள் கைவிடப்பட்டு இருப்பதாலும்,அவர்களைப் பற்றி அக்கறை கொள்பவர்கள் யாரும் இல்லாததாலும்  அவர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். நம் ஆண்டவரது அன்பின் நிமித்தம் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியப்படுத்துங்கள். புன்னைக்காயல், கொம்புதுறையில் உள்ள தோணிகளை உடனடியாக இன்னும் சில மணி நேரங்களில் எடுத்துக் கொண்டு அந்தத் தீவுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைக் கொம்புதுறைக்கும், புன்னைக்காயலுக்கும், திருச்செந்தூருக்கும், கொண்டு வாருங்கள். இதற்காகப் புன்னைக்காயலில் உள்ள எல்லா தோணிகளையும் எடுத்துக் கொள்ளுங்காள். கொம்புதுறையில் உள்ள தொணிகளை உங்களைத் தொடர்ந்து வரக் கட்டளையிடுங்கள்.இது கடவுளுக்காக நீங்கள் செய்யும் பணி”

போர்த்துக்கீசியர்களின் ஆதரவு உன்னி கேரளவர்மனுக்கு கிடைத்த காலத்தை முக்குவ மக்களை கத்தோலிக்கத்தின் பால் ஈர்க்க பயன்படுத்திக் கொண்டார் பிரான்சிஸ் சவேரியார். உன்னி கேரள வர்மன் நாட்டின் கிறிஸ்தவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பகவும் சில காலம் வாழ்ந்திருக்கிறார்கள். பின்னர் கொல்லம் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்கள் போர்த்துக்கீசியரால் கைவிடப்பட்ட நிலையில் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட தென்பகுதியை அவர்கள் விஜயநகரப் பேரரசுக்கு தாரை வார்த்து விட்டு அவர்களுக்கு திறை செலுத்தும் அரசுகளாக மாற வேண்டியிருந்தது. இதனால் மலபார் கரையில் மதமாற்றத்திற்கு உன்னி கேரளவர்மனும், திருவிதாங்கூர் மன்னனும் தடை விதித்தனர்.

சவேரியார் கடலோரத்திற்கு வந்த புதிதில் அவருடன் பெத்ரோ கொன்ஸ்சால்வஸ் என்ற பாதிரியாருடன் இணைந்து 1536 - 1537-ல் பரவதர்வகளுக்கு திருமுழுக்கு அளித்தனர் 1542 -ல் அவர் முத்துக்குளித்தூறையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சவேரியாரிடம் வழங்கினார். மணப்பாட்டிற்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள எட்டு கிராமங்கள் புதுக்கரை, பெரியதாழை, உவரி, கூத்தங்குளி, இடிந்தகரை, பெருமணல், முட்டம், கன்னியாகுமர் ஆகிய ஊர்களில் இதே காலக்கட்டத்தில் தொடர்ந்து திருமுழுக்கு நடந்து வந்தது. தூத்துக்குடி முத்துக்குளித்துறையில் உள்ள முக்கிய துறைமுக நகரம் 1644-ல் 8,270 பேர் பரவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். வேம்பாரில் -1644 -ல் 1,300 கிறிஸ்தவர்களும், 1914-ஆம் ஆண்டு 4,744 கிறீஸ்தவர்களும் இருந்தனர். பெரியதாளையில் 1644-ல் 1,200 கிறீஸ்தவர்களும் 1914 -ஆம் ஆண்டு 2,705 கிறீஸ்தவர்களும் இருந்தனர்.

ஒரு குடியேற்ற முயற்சியின் தோல்வி?
..............................................................................................

கன்னியாகுமரிலிருந்து இராமேஸ்வரம் வரையிலும் வாழ்ந்த பரவர்கள் கன்னியாகுமரியில் இருந்து கேரளக்கரையோரத்தை அண்டி வாழ்ந்த முக்குவர்கள் என இந்த ஒரு பெரும் சமூகங்களும் ரோமன்கத்தோலிக்க கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள். பரவர்கள் வெட்டும் பெருமாளாலும், நாயக்க மன்னர்களாலும் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொள்ளையிடப்பட்டும், கொல்லப்பட்டும் வாழ்ந்த அதே சூழலில் திருவிதாங்கூர் ஆளுகைக்குட்பட்டிருந்த முக்குவர்கள் ஒப்பீட்டளவில் அமைதியான வாழ்வைப் பெற்றிருந்தனர். திருவிதாங்கூர் மன்னருக்கு போர்ச்சுக்கீசியரின் ஆதரவு இருந்த சூழலில் வெகுவேகமாக அங்கும் மதமாற்றம் நடந்தது.  போர்ச்சுக்கீசியர் கீழைக்கடலோரத்தில் கால் பதித்த போது அவர்கள் புன்னைக்காயலையே தலைமையிடமாகக் கொண்டனர். அதுதான் இயேசு சபைத் துறவிகளின் தலைமையமாகவும் இருந்தது. தூத்துக்குடியை விட புன்னையாக்காயலே அப்போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. நாயக்க மன்னர்களின் தொடர்தாக்குதலாலும், டச்சுக்காரர்களுடனான போரினாலும் புன்னைக்காயலை தொடர்ந்து பேண முடியாத நிலையில் பரவர்கள் செரிவாக வாழ்ந்த தூத்துக்குடியை தலைமையிடமாக மாற்றிக் கொண்ட இயேசு சபை பாதிரியார்கள். முப்பது கிராமங்களில் நிம்மதியில்லாமல் தாக்குதல் அச்சத்தோடு வாழ்ந்த பரவர்களை ஏழு ஊர்களில் குடியேற்றினார்கள். வைப்பாறு, வேம்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டிணம், திருச்செந்தூர், மணப்பாடு. ஆகிய அந்த ஏழு ஊர்களுமே ‘ஏழு கடற்றுறை” (இடியின் ரகசியம்- எஸ். வெனன்சியூஸ்.-பக்கம்-14) என்று அழைக்கின்றனர்.

தாக்குதல் அச்சம் சூழ்ந்த நிலை தென்னிந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இதுதான் நிலை. இலங்கை கரையோரத்தில் போர்ச்சுக்கீசியரால் மத மாற்றம் செய்யப்பட்ட கரையாரையும், முக்குவர்களையும், திமிலர்களையும் யாழ்பாணத்தை ஆண்ட ஜெகராஜசெகரன் என்கிற முதலாவது சங்கிலி (1519 - 1561) மன்னன் தாக்கினான். மதம் மாற்றம் செய்யப்பட்ட மக்கள் மன்னாரில் படுகொலை செய்யப்பட்டதை வரலாறு மன்னார் படுகொலைகள் என்று பதிவு செய்துள்ளது. மன்னாரில் வசிக்கும் முக்குவர்களுக்கு திருமுழுக்கு அளிக்க 1544 -ஆகஸ்டில் மன்சிலாஸ் என்ற பாதிரியாரை இலங்கைக்கு அனுப்புவதாக இருந்தார் சவேரியார். ஆனால் வெட்டும் பெருமாள் பரவர்களைத் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் மன்சிலாலில் பயணத்தை தள்ளிப் போடச் செய்வதோடு உரிய ஏற்பாடுகளைச் செய்த பின்னர் செல்லலாம் எனவும் அறிவுறுத்துகிறார்.  ‘’ நீங்கள் மன்னாருக்குச் சென்று கரியப்பட்டணத்துக் கிறிஸ்தவர்களுக்கு திருமுழுக்கு அளித்து அதன் மூலம் ஆண்டவருக்கும் மக்களுக்கும் முதலியாருக்கும் சிறப்பான பணி செய்ய முடியும் ஏனென்றால் நாகப்பட்டணத்து தளபதிக்கு மன்னார் தீவுகளின் உரிமையாளரான யாழ்பாணத்து மன்னரிடம் மிகுந்த செல்வாக்கு உண்டு. அவர் உங்களுக்கு ஆதரவாக மன்னரிடம் செயல்படுவார். வடுகர்களின் தாக்குதலின்றி அந்தப் பகுதி பாதுகாப்பாக இருக்கிறதா? என்று ஒரு ஆள் மூலம் செய்தி அனுப்பினால் பணத்துடன் ஒரு ஓலையுடன் மன்னாரில் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்ற அறிவுரைகளுடனும் பிரான்சிஸ் கோயல்கோவை உங்களிடம் அனுப்புவேன்// தூத்துக்குசியில் இருக்கும் மன்சிலாவுக்கு புன்னைக்காயலிலிருந்து ஆகஸ்ட் 29-1544 - பக்கம்- 45, 49.என்று எழுதுகிறார். ஆனால் யாழ்பாணத்து மன்னரின் செயல்கள் சவேரியாரின் கனவுகளைத் தகர்க்க யாழ்பாண மன்னனை தண்டிப்பது தொடரபாக ஆளுநரைச் சந்திக்க முடிவு செய்கிறார். பக்கம் -72, 1544 - டிசம்பர் 18, புன்னைகாயலில் இருக்கும் மன்சிலாவுக்கு கொச்சியிலிருந்து சவேரியார் எழுதிய கடிதத்தில்) மூர்கள், வெட்டும் பெருமாள்,நாயக்க மன்னர்களின் தாக்குதலில் இருந்து மீனவர்களைக் காக்க ஏழு ஏழு கடற்றுறை கிராமங்களை உருவாக்கியது போல யாழ்பாணத்தில் உள்ள ஒரு தீவில் சகல மீனவர்களையும் பாதுகாப்பாக குடியேற்றும் முயற்சியும் சவேரியாரால் முன்னெடுக்கப்பட்டது. ” நமது ஆண்டவராகிய கடவுளின் சேவைக்கு மிகவும் உதவக்கூடிய, நீண்டகாலமாக நினைவில் இருக்ககூடிய ஒரு செயலை ஆளுநர் செய்யப் போகிறார். பல்வேறு இடங்களில் வசிக்கும் எல்லா கிறிஸ்தவர்களையும் ஒன்று சேர்த்து ஒரே தீவில் வைக்கவும் அவர்களுக்கு ஆவன செய்ய மற்றும் நீதியை நிலை நாட்ட ஓர் அரசரை நியமிக்கவும் உள்ளார். அத்தோடு கூட அவர்களுக்கு ஆன்ம பாதுகாவலராக ஒருவரையும் கொடுக்க உள்ளார் “(ரோமில் உள்ள தந்தை லயோலா இஞ்ஞாசியாருக்கு தூத்துக்குடியிலிருந்து அக்டோபர், 28,1542 -ல் எழுதிய கடிதம்- பக்கம்  4,5 -   தூய சவேரியார் கடிதங்கள்.)

நீண்டகாலமாகவே இந்த குடியேற்ற முயற்சி நடந்தது ஆனால் யாழ்பாணத்தை போர்ச்சுக்கீசியரால் கைப்பற்ற முடியவில்லை. 1561- ல் பெரும் கொள்ளை நோய்க்கு மக்கள் பலியாக அந்த முயற்சி கைகூடவிலை.

இந்தக் குடியேற்ற முயற்சிகள் எதுவும் கைகூடி வராத நிலையில் பதினேழாம் நூற்றாண்டு வரை அவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் நாயக்க மன்னர்களின் குடிமக்கள் இல்லை என்று ஒட்டு மொத்த மக்களும் கடற்கரையை விட்டு இடம்பெயர்ந்து தீவுகளில் தஞ்சமடைந்ததும் உண்டு. ஆனால் அவர்கள் ஒரு தலைமையற்று தாக்கப்பட்டது அத்தோடு முடிந்து விடவில்லை. போர்ச்சுக்கீசியர்கள் 1532-ல் தூத்துக்குடியில் இருந்து யாழ்பாணத்தை கைப்பற்ற படையெடுத்தனர். 1655 -ல் டச்சுக்காரர்கள் யாழ்பாணத்தைக் கைப்பற்றினார்கள் 1658 - பிப்ரவரி முதல் வாரத்தில் டச்சுத் தளபதி ரிஜ்க்லோவ் வன்கோவன்ஸ் நீர்கொழும்பில் இருந்து ஒரு பெரும்படையுடன் தூத்துக்குடிக்கு எதிரே முகாமிட்டிருந்தார். போர்ச்சுக்கீசியரின் ஆட்சி அத்தோடு முடிவுக்கு வந்து டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை கைப்பற்றினார்கள். 1532 தொடங்கி டச்சுக்காரர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றிய காலம் வரையான 126 ஆண்டுகளைக் கடந்து அடுத்த தாக்குதலையும் சுரண்டலையும் துவங்கினார்கள் டச்சுக்காரர்கள்.

தொடரும்..........