Sunday 18 August 2013

அன்னா ஹசாரேவின் சமூகப் பாசிசம் - காஞ்சா அய்லைய்யா



லோக்பால் பிரச்சனை குறித்து அண்மையில் டெல்லியைச் சுற்றி நிகழ்ந்தவை மக்களின் வெற்றி என்றும் அன்னா ஹசாரேயின் அணியால் நிகழ்த்தப்பட்டவை என்றும் ஊடகங்களால் கொண்டாடப்படுகின்றன. ஆனால் இந்த நாட்டின் நிறுவனமயமாக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்க சூழல்களில் வாழ்ந்து கொண்டிக்கும் ‘வெகுமக்களில்’ பெரும்பான்மையினர், வெற்றிபெற்ற குழு கூறிக்கொண்டிருப்பது போல இன்னும் “குடிமைச் சமூகத்தின்” பகுதியாக இல்லை.
அதனால், ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்று கூறிக்கொள்ளப்படும் இயக்கம் பல பரிமாணக் கண்ணோட்டத்திலிருந்து பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, நான் அதை நவீன மனுவாத முடியரசு எதேச்சாதிகரத்தின் வெற்றி என்று காண்கிறேன். நவீன முடியரசின் எழுச்சியைக் கொண்டாட மனுவின் நவீன சீடர்கள் காந்தி குல்லாவினால் அலங்கரித்துக் கொண்டு ராமலீலா மைதானத்திற்குள் நுழைந்தார்கள்.
anna_hazare_35021 ஆம் நூற்றாண்டின் சமூக “முடியரசர்” ஊழலின் எதிரியாக மைதானத்தில் நுழைந்தார், ஆனால் அவர் அரசியல் சட்டத்தை ஒதுக்கித் தள்ளவும் (அது ஒரு தலித்தின் தலைமையில் வரைவுசெய்யப்பட்டதால் இருக்கலாம்) வர்ணாசிரம தர்மத்தின் வடிவில் நூற்றாண்டுகளாக நிலவி வந்த பாசிச சமூகக் கட்டமைப்புக்களைக் கலைக்க‌ வந்த பாராளுமன்றத்தின் அதிகாரத்தை தூக்கி எறியவும் முயற்சி செய்தார். வந்தே மாதரம் அதன் முழக்கமாகவும் தேசியக் கொடி (அதன் சொந்தக் கொடி அல்ல) அதன் தெரு அதிகாரத்தின் அடையாளமாகவும் இருந்தது.
சமூகப் பாசிசம் தனக்குத் தானே ஒரு ஒழுக்க அடிப்படையை கட்டமைத்துக் கொள்ளும் குடிமைச் சமுதாயத்தின் உண்மை நிலையாக ஆகிறது. தன்னைச் சுற்றிலும் ஒரு பலமான சாதிக்கோட்டையை எழுப்பிக்கொண்டுள்ள இந்தியாவுடையதைப் போன்ற ஒரு நடுத்தர வர்க்கம், ஒழுக்கமானது அதன் சொந்த நலன்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அது அன்றாடம் ஊழல் நடவடிக்கைகளால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றாலும், ஊழல் என்பது பொதுவாக அதன் அன்றாட பஜனையில் கண்டனத்திற்கான நாகரீகச் சொல்லாக ஆகிறது. எடுத்துக்காட்டாக, நடுத்தரவர்க்க அரசாங்க அல்லது அரசாங்கம் சாரா நிறுவன அதிகாரி ஒரு லட்சம் ரூபாய்கள் அல்லது அதற்கு மேலாக ஊதியமாகவும் மேலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை கவுரவ ஊதியமாகவும் அமர்வுக் கட்டணமாகவும் பெற்றுக் கொள்வதற்குத் தயங்குவதில்லை, ஆனால் அதே நபர் மாதம் ரூ.5000/- ஊதியம் வாங்கும் ஒரு கடைநிலை ஊழியரை கூடுதல் வேலைக்காக ரூ.200 கேட்டால் ஊழல்வாதியாக நடத்துகிறார்.
ஊழல் எதிர்ப்புப் போருக்குத் தலைமை தாங்கும் குடிமைச் சமுதாயம், கார்பரேட் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை லஞ்சமாக கொடுப்பதை ஊழலாகப் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினரோ அரசாங்க அதிகாரியோ லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டால் அது ஊழலாகப் பார்க்கப்படுகிறது. இது ஏனென்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் “அவாளின்” கரங்களில் இருக்கின்றன. அதேவேளையில் அரசியல் மற்றும் அதிகாரப் பதவிகள் “பிறவிலேயே ஊழல்வாதிகளாக உள்ள” மனிதர்களின் கரங்களுக்கு நழுவிச் செல்லுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை எடுத்தக் கொள்வோம். அவர்கள் ஊழல்வாதிகளாக நடத்தப்படுகிறார்கள், ஆனால் லஞ்சம் கொடுக்கும் கார்பரேட் நிறுவனங்கள் மிக மலிவான விலைகளில் மிகப்பெரிய ஒப்பந்தங்களை தட்டிக்கொண்டு போவதை ஊழலாகக் கருதுவதில்லை. அதே கார்பரேட் நிறுவனங்களும் அவர்களது ஊடகங்களும் ஊழலுக்கு எதிராகப் போராட 'காந்திக் குல்லாய் குடிமைச் சமூகத்தை' மைதானங்களில் திரட்டுகின்றன.
எந்த நீதியுமற்ற முதலாளித்துவ சந்தையில், ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களில் அதிகநேரம் இடம்பிடிப்பவர்கள், தங்களைத் தாங்களே தூய்மையானவர்களாகக் காட்ட முடியும். அதே ஊடகங்கள் அவர்கள் விரும்பும் வகையில் ஊழலை வரையறுக்க கும்பலைத் திரட்டுவதற்கும் பயன்படுகின்றன‌. ஊழலை வரையறுக்கும் வேறு எந்த முறைமையும் படிப்பறிவற்ற சொல்லலங்காரமாக நடத்தப்படுகின்றன.
வந்தே மாதரம் என்ற மந்திரம் குடிமைச் சமுதாயத்திற்கு அதிகாரமளிக்கும் என்றால், அதே மந்திரம் ஏழைகளின் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் குறிப்பாக இந்தியாவின் முஸ்லிம்களுக்கும் வாழ்க்கையைத் தரக்கூடிய ஜனநாயக நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையை இழக்கச் செய்யும் சக்தியையும் கொண்டிருக்கிறது.
இந்து நடுத்தரவர்க்கம் நின்று கொண்டிருக்கும் உயர்ந்த ஒழுக்க அடித்தளம் சமூக பாசிசதிற்கான பிறப்பிடம் ஆகும்.
ஏழைகளும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் கடந்த இருப்பது ஆண்டுகளாக காவியுடை சமூக பாசிஸ்டுகளைத் தடுத்து நிறுத்த பெரும் போராட்டங்களை நடத்தி வந்தருக்கின்றனர். இப்பொழுது அதே பாசிசசக்திகள் காந்தி குல்லாயை அணிந்து கொண்டு அதிகார மையத்தைக் கைப்பற்ற வந்திருக்கின்றன. காந்தி குல்லாயுடன் ராம்லீலா மைதானத்திற்கு வந்த அனைவரும், காந்தி உடையணிந்த முறைகளைப் பின்பற்றி, தங்கள் குழந்தைகளை உடை அணியச் செய்து பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் வீட்டுக்குத் திரும்பியதும் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டும் கோட்டும் பூட்டும் அணிவித்து மகிழ்வார்கள், அந்தக் குழந்தைகள் செயின்ட் மேரி, செயின்ட் பீட்டர் பள்ளிகளுக்கு செல்வார்கள், மகாத்மா காந்தி அல்லது அன்னா ஹசாரெ பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். ஊழல் என்பது வெறும் ஒரு பொருளாதார நடைமுறை மட்டுமல்ல, அது கலாச்சார நடைமுறையும் ஆகும். அத்தகைய ஒரு இணைப்பு இருந்தாலும், சமூகப் பாசிசம் அந்த இணைப்புக் கண்ணியை நாம் காணக் கூடாது என்று விரும்புகிறது.
சமூகப் பாசிசம் எப்போதும் மோசடித் தன்மையிலேயே வாழ்கிறது. அது சமஸ்கிருதத்தை அதன் ஆலய மொழியாகப் பயன்படுத்துகிறது. இந்தியை மைதானப் பேச்சுக்கு வைத்துக்கொள்கிறது, ஆங்கிலத்தை அதன் அலுவலக மொழியாகப் பயன்படுத்துகிறது. பாசாங்குத்தனம் அதன் உள்ளார்ந்த கலாச்சார இருத்தலாக இருக்கிறது. அது பொது வாழ்க்கையில் எளிமையாக இருப்பதாக நடிக்கிறது, ஆனல அதன் உணவு மேசையில் முத்திரைப் பெயர்களுடன் கார்பரேட் சந்தை வழங்கும் அனைத்துப் பணடங்களையும் வைத்திருக்கிறது.
இந்திய கார்பரேட் நிறுவனங்கள் ஊழல் நிறைந்தவை என்று அன்னா ஹசாரே அணி எண்ணுவதில்லை ஏனென்றல் அவை அவர்களைக் காந்தியின் புதிய அவதாரத்தில் வந்த போர்வீரர்களாக காட்டுவதற்கான தொலைகாட்சி ஒளிப்படக் கருவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. சமூகப் பாசிச சித்தாந்தம் ஊழலை ஒருவழிச் செயல்முறையாகக் காட்டுகிறது.
இந்தியச் சூழலில் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கும் பணம் சென்று சேரும் எந்த ஒரு செயல்முறையும் ஊழல் அல்லது பொருளாதார வீணடித்தலாகக் காட்டப்படுகிறது. ஆனால் அரசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் மிகப்பெரிய லாபத்தை ஈட்டும் ஏகபோக வர்த்தகர்கள் சந்தை விலையை உயர்த்தும் போது அது ஊழலாக கருதப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக, ஊழல் எதிர்ப்பு படையணியில் சேர்ந்துகொண்டுள்ள அனைத்து பாலிவுட் நாயகர்கள், நாயகியர்களில் பெரும்பாலானவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களே. மக்களிடையே சமத்துவத்தை நிறுவுவதற்கான உள்ளாற்றல் கொண்ட அல்லது குறைந்தபட்சம் ஒடுக்கப்பட்ட வெகுமக்களின் அடிப்படை வாழ்க்கையை மாற்றுகிற நிகழ்ச்சிநிரல்கள் தேசிய உரையாடலில் இருக்கவே தேவையில்லை என்று அன்னா ஹசாரெ அணி நம்புகிறது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுநிலையை கட்டுப்படுத்தி, சூழ்ச்சித் திறம் மேற்கொண்டுவந்த பாரதமாதாவின் தோற்றத்தில் தேசம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும் பிறர் அதைக் கண்டாலே நடுங்கச் செய்கிற வகையில் அந்தத் தோற்றம் ஒவ்வொரு நிமிடமும், 24x 7, காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பாசிசம் இப்பொழுது அனைத்து வசதிகளும் நிறைந்த வீடுகளில் வாழ்கிறது, ஜனநாயகம் கொட்டடிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
சமூகப் பாசிசம், சமுதாயத்தின் சாதிஅடுக்கு நிலையை இயற்கையானதாகக் கருதுகிறது. அரசால் அல்லது ஒரு குடிமைச் சமுதாய அமைப்பால் முன்வைக்கப்படும் எந்த ஒரு பொருளாதார மறுவிநியோக அமைப்புமுறையும் ஊழலாகவும் நெறிமுறைக்கு மாறானதாகவும் காட்டப்படுகிறது.
இந்த ஆதிக்கசாதி நடுத்தரவர்க்கத்தின் மூக்குக்கண்ணாடி வழியே ஊழல் காணப்படும் போது, அதற்கு ஒரு சட்டத் தீர்வு இருக்கிறதாகவும் அந்த சட்டமுறை அதன் சொந்த நிபந்தனைகளால் உருவாக்கபடுகின்றன என்றும் அவர்களுக்குத் தோன்றுகிறது. ஒடுக்குபவரின் தர்மம் எப்போதும் ஒடுக்கப்படுவோரின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது என்பதை அது புரிந்து கொள்ள விரும்புவதில்லை.
ஒரு தேசம் ஒழுக்க நம்பிக்கையின் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கிற போது சமூக பாசிசம் தோன்றுகிறது. அது குடிமைச் சமுதாயத்தின் அடுக்குகளில் தன்னை உருவாக்கிக்கொண்டு அரசியல் அதிகாரத்தின் வாயிலை ஆக்கிரமித்துக் கொள்வதை நோக்கி நகர்கிறது. இது ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிற நாடுகளில் நிகழ்ந்தது. சமூக பாசிசம் வெற்றிகரமாகத் தோன்றிய அனைத்து நாடுகளிலும் அது தனக்கான ஒரு உயர்ந்த ஒழுக்க அடித்தளத்தை வலியுறுத்தும் நடுத்தர வர்க்கத்திடமிருந்துதான் பரவியது. அந்த உயர்ந்த ஒழுக்க அடித்தளம் பொதுவாக ஊழல்மறுப்பு கோட்பாட்டைச் சுற்றிதான் நிறுவப்படுகிறது.
-காஞ்சா அய்லைய்யா
(http://www.asianage.com/columnists/anna-s-social-fascism-579)
தமிழில்: வெண்மணி அரிநரன்
நன்றி: கீற்று.காம்

இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள் - இந்திக ஹேவாவிதாரண


சித்திரவதையென்பது, மனித வர்க்கத்தினால் தனது சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் மிகவும் கீழ்த்தரமான செயல்களிலொன்று என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. இலங்கை கூட அதனை ஏற்றுக் கொண்டு '1994ம் ஆண்டின் 22ம் இலக்கச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அச் சட்டத்தின் மூலம் குரூர, மனிதாபிமானமற்ற மற்றும் அவமரியாதையான சித்திரவதைகளுக்கு எதிராக நடந்துகொள்ள வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு நடந்துகொள்வதற்காக காவல்துறையினருக்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் சாதாரண பொதுமக்கள் எந்தவிதமான சித்திரவதைகளுமற்று வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தப்படுவதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பிறகு, சித்திரவதையைத் தடுப்பதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையினராலேயே அதிகளவில் மக்கள் சித்திரவதைகளுக்கும், குரூரமான நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.
சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு கடந்த 17 வருட காலத்துக்குள் நாட்டின் மிகப் பரந்தளவிலான மக்கள் தொகையினர் மீது காவல்துறையினரால் பல்வேறு விதமான சித்திரவதைகளும், குரூர நடவடிக்கைகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எனக் கூறி நடத்தப்படும் இச் சித்திரவதைகளினதும் குரூர நடவடிக்கைகளினதும் காரணத்தால் பொதுமக்கள் இறந்துபோன, ஊனமான நிலைக்கு ஆளாகிய மற்றும் நிகழ்ந்த அவமானத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அனேகம்.
இங்கு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மிகவும் வருந்தத்தக்கதாக 2002 ஆம் ஆண்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது, ஹினிதும எனும் பிரதேசத்தில் 10, 12 வயதுகளையுடைய பாடசாலை மாணவர்கள் இருவரை, திருட்டொன்றை நடத்தியதாகக் குறிப்பிட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாகும். தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எனக் கூறி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் முழங்காலில் இருக்கப் பணித்தல், காதுகளிரண்டையும் பிடித்துக் கொண்டு உயரப் பாய்தல், கால்களைக் கம்புகளால் தாக்குதல், நகங்களுக்குள் பல்வேறு விதமான பொருட்களை உட்செலுத்துதல், அந்தரங்க உறுப்புக்களை இழுப்பறையொன்றுக்குள் தள்ளிப் பூட்டுதல் போன்ற குரூரமான சித்திரவதைகள் காவல்நிலையத்துக்குள் வைத்து இச் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளன.
அன்றிலிருந்து காவல்துறையினரால் பிரயோகிக்கப்பட்ட பல்வேறு விதமான சித்திரவதைகளும் மிக வருந்தத்தக்கதான சம்பவங்களாக மக்கள் மத்தியில் சென்றடைந்தபோதும், பாரிய அளவிலான சித்திரவதைகளும் குரூரமான நடவடிக்கைகளும் சம்பந்தமான நிலைப்பாடு இன்னும் இரகசியமான முறையிலேயே இருக்கிறது.
அண்மையில் மிகப் பெரியளவில் பிரசித்தமான சம்பவமாக அங்குலானை காவல்துறையினரால் இளைஞர்கள் இருவர் பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதன் பிற்பாடு சுட்டுக் கொல்லப்பட்டதைக் குறிப்பிடலாம். அப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் கிண்டல் செய்ததே, 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி நடைபெற்ற இச் சம்பவத்தின் பின்னணியாக அமைந்திருந்தது. கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கிணங்கி சட்டத்தைக் கையிலெடுத்த காவல்துறையினர், இளைஞர்கள் இருவரையும் பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாக்கிய பின்னர் சுட்டுக் கொன்றிருந்தனர்.
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்று வந்த நிபுன ராமநாயக்க எனும் மாணவனைத் தாக்கியதற்கு எதிராக இன்னும் ஒழுங்கான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் காவல்துறை அதிகாரியொருவரின் மகனுடன் ஏற்பட்ட சிறு தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் சிலரால் கடத்திச் செல்லப்பட்ட இம் மாணவன் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். பிறகு இம் மாணவன் தாக்கப்பட்டது சம்பந்தமாக மாணவனின் தாயாரினால் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இம் முறைப்பாட்டைப் பதிவு செய்த குறிப்புப் புத்தகம் கூட தற்பொழுது காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது. இது நம் நாட்டுக் காவல்துறையினர், மாணவனொருவனை மிக மோசமான முறையில் தாக்கி, பிரசித்தமான இரண்டாவது சம்பவமாகும்.
இதற்கு மேலதிகமாக கல்கிஸ்ஸ பிரதேசத்தில், இரயிலொன்றுக்கு கல்லெறிந்ததாகக் குறிப்பிட்டு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனொருவரை கடற்கரையில் வைத்துத் தாக்கி, அவரைக் கடலில் மூழ்கி இறக்கும்படி செய்ததுவும், தெமட்டகொட பிரதேசத்தில் ஹோட்டலொன்றில் கடமை புரிந்த இந்திய சமையல்காரரொருவரைக் கொல்லத் திட்டமிட்டதுவும் இந் நாட்டில் குரூர சித்திரவதைகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரே. கொட்டாவ பிரதேசத்து காவல்நிலையத்துக்குள் வைத்து இளைஞரொருவரைத் தாக்கி, கை விலங்குடனேயே இறப்பை எய்தச் செய்ததுவும், சிறையறைக்குள் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டு சடலத்தை உறவினர்களிடம் கையளித்ததுவும் கொட்டாவ காவல்துறையினராலேயே நடைபெற்றது.
தலங்கம பிரதேசத்தில் ஒருவர் திருடனொருவனைப் பிடித்துக் கைவிட்டதால், அந் நபரைத் திருடனெனக் கூறிக் கைது செய்ததில் மனமுடைந்து, காவல்துறையினரின் சித்திரவதைகளைத் தாங்க முடியாததன் காரணத்தால்தான் இறந்துபோனார்.
இவ்வாறாக பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் குரூர சித்திரவதைகளுக்கு மேலதிகமாக பாதாள உலகோடு சம்பந்தப்பட்ட நபர்கள் சிக்கும்போது எந்தவொரு சட்டத்தையும் பின்பற்றாது அவர்களைச் சுட்டுக் கொல்வதுவும் இந்நாட்டில் அமைதியைக் காப்பதற்காக இருக்கும் காவல்துறையினரே. காவல்துறை மீது வெடிகுண்டெறிய முயற்சித்தல், துப்பாக்கியால் சுட முயற்சித்தல் மற்றும் தப்பிச் செல்ல முயற்சித்தல் ஆகிய காரணங்களைக் காட்டி இவ்வாறான நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சட்டத்தைத் தமது கையிலெடுத்து செயலாற்றி வரும் காவல்துறையினருக்கு எதிராக இன்றும் கூட நீதி நிலைநாட்டப்படவில்லை. இதில் கடந்த ஆகஸ்ட் 24ம் திகதி புதன்கிழமையன்று கிரிந்திவலை காவல்நிலையத்தில் நடைபெற்றதை மிகவும் அண்மையில் இடம்பெற்ற சம்பவமாகக் குறிப்பிடலாம்.
ரதாவான பிரதேசத்தில் இடம்பெற்ற சிறிய சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு 38 வயதேயான சமிந்த சனத்குமார எனப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எந்தவொரு சுகவீனமுமற்ற நிலையிலிருந்த இந் நபர் காவல்நிலையத்துக்குள் வைத்து மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் சுகவீனமுற்ற இந் நபர் காவல்துறையினரால் ரதாவான ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிறகு இந் நபரின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் இந் நபர் சுகவீனமுற்ற காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை வீட்டினராலேயே அனுமதிக்கப்பட்டதாகச் செய்து தரும்படியும் வீட்டினரிடம் கேட்டுள்ளனர். வீட்டினரால் அவ் வேண்டுகோள் மறுக்கப்பட்டுள்ளது. உடனே காவல்துறையினர், ரதாவான வைத்தியசாலைக்குச் சென்று வீட்டினராலேயே இந் நோயாளி அனுமதிக்கப்பட்டதாகக் குறிப்பிடும்படி வைத்தியசாலை அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளனர். எனினும் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது.
பிற்பாடு, சம்பந்தப்பட்ட நபர் மிகக் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அங்கிருந்து வத்துபிடிவல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் கதைக்க முடியாத நிலையில் மிக மோசமான உடல்நிலையோடு இருக்கும் இந் நபரின் முடிவு என்னவாகும் என்பதை எம்மால் கூற இயலாது. இலங்கை காவல்துறையானது, சித்திரவதைக்கு எதிராக நடந்துகொள்வது இவ்வாறுதானா?
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி: உயிரோசை இணையம்

டக்ளஸ் தேவானந்தா... சுட்ட அன்று சூளைமேடு!


வம்பர் 1-ம் தேதி... தீபாவ​ளியன்று மதியம் நண்பர் ஒருவரைக் காண சூளைமேடு போயிருந்தோம். நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கும் சமயம்... திடீரென்று சற்றுத் தொலைவில் இருந்து வெடிச் சத்தம் கேட்டது! பட்டாசு சத்தம் மாதிரி தோன்றவில்லை... பின்? துப்பாக்கிச் சத்தமா? உடனே -
சத்தம் வந்த திசை நோக்கி நண்பருடன் ஓடினோம். எதிரே எக்கச்சக்க ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தலைதெறிக்க ஓடிவந்து கொண்டிருந்தனர். சிலரை நிறுத்தி விவரம் கேட்க முயன்றோம். நம்மைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள்...
பார்வையை ஓட்டினோம்... நம் வயிற்றை லேசாகக் கலக்கியது. காரணம் - நமக்கு சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரண்டு பேர் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டபடி, வெறித்தனமாகக் கூச்சலிட்டபடி ஓடிவந்து கொண்டிருந்தனர்... பளிச் என்று பயம் நம்மைச் சூழ்ந்துகொண்டது.
அதற்குள், ''ஏய்... அரசைச் சுட்டுட்​டாங்கடா...'' என்றும், அதைத் தொடர்ந்து, ''அந்தப் பசங்களை கல்லை எடுத்து எறிஞ்சு கொல்லுங்கடா...'' என்றும் குரல்கள்! ஒரு கும்பலைப் பின்தொடர்ந்து சென்றோம். அங்கே -மார்பின் வலது பக்கம் குண்டு பாய்ந்து, அதில் இருந்து ரத்தம் குபுகுபுவென வெளியேறிக்கொண்டு இருந்த நிலையில் ஒருவர் கீழே கிடந்தார்.
இடது தோளில் இருந்து சதை சற்றுப் பிய்ந்து தொங்க, 'ஓ’ வென அலறித் துடித்தபடி இன்னொருவர்...
குண்டு பாய்ந்து கீழே புரண்டு புரண்டு கதறியபடி மற்றொருவர்...
தரை எல்லாம் ரத்தம்! கும்பலின் கோபம் மிக அதிகமானது...
''அந்தக் கத்தியை குட்றா...''
''என்கிட்ட அருவாமணைதான் இருக்கு...'', ''பெட்ரோல் வாங்கியாந்து அவனுகளை வீட்டோட எரிச்சிடலாம்...'' - இப்படி ஆவேசமாக பல்வேறு கருத்துகள்(?) பரிமாறிக்​கொள்ளப்பட்டன.
நம் நண்பரிடம், ''பக்கத்துலே ஏதாச்சும் ஆட்டோ கொண்டாங்க... அப்படியே பக்கத்து ஸ்டேஷனுக்கும் தகவல் சொல்லிட்டு வாங்க...'' என்றோம். நண்பர் சென்றார். அருகில் நின்ற ஒருவரின் லுங்கியைப் பிடுங்கி, மார்பில் குண்டு பாய்ந்தவரின் காயத்தின் மேல் நாம் இறுகக் கட்டினோம். நம் கைக்குட்டையை எடுத்து, கையில் காயம் பட்ட மற்றொரு நபருக்கு 'பாண்டேஜாக்கினோம்’.
இதற்குள் நிறையக் கூட்டம் சேர்ந்தது. அதில் ஒரு சாரார். ''அவர்களை ஒரு கை பார்ப்போம்...'' என்று கூவியபடி 'அந்தக் கொலையாளிகளின்’ வீட்டை நோக்கி ஓடினர். பலரின் கைகளில் அரிவாள், அரிவாள்மணை, மண்ணெண்ணெய் டின் இத்யாதிகள்...
இதற்குள் நண்பர் ஒரு ஆட்டோவுடன் வர, அடிபட்ட மூவர் மற்றும் துணைக்கு இரண்டு பேர் ஆகியோரை வண்டியில் (திணித்து) ஏற்றி அனுப்பினோம்.
பின்னர், மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க்​கொண்டு இருந்த 'வீட்டை’ நோக்கி நாமும் ஓடினோம்.
அந்தக் 'கொலையாளி​கள்’ சுமார் 7 பேர், வீட்டின் மொட்டை மாடியில் நின்று சரமாரியாக சுட்டுக்கொண்டு இருக்க...
கும்பல், குண்டு படாதவாறு மறைந்து நின்று கற்களை, மண்ணெண்ணெய் டின்னை கிழித்து தீக்குச்சிகளை எறிய... இரண்டு போலீஸ் வேன்கள் படுவேகமாக வந்து நின்றன.
நாமும் பின்வாங்கி ஒரு கடைக்குள் சென்று கன்ட்ரோல் ரூம் மற்றும் கமிஷனர், ஐ.ஜி. இல்லங்களுக்கு போன் மூலம் தொடர்புகொண்டோம்.
திரும்பி வந்து பார்த்தபோது ஐ.ஜி-யான ஸ்ரீபால் வந்திருந்தார். போலீஸாரை கண்டதும் கும்பல், ''அவங்க எல்லாத்தையும் சுட்டுத் தள்ளுங்க...'' என்றபடி கோபத்துடன் கத்தியது.
பதிலுக்கு ஸ்ரீபால், ''முதல்லே நீங்கள்லாம் அமைதியா இந்தப் பக்கம் வாங்க... ப்ளீஸ்...'' என்றார் குரலை உயர்த்தி. கும்பல் அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நகர்ந்தது. பிறகு ஸ்ரீபால் ஒரு இன்ஸ்பெக்டரை (மோகன்சிங்) அருகே அழைத்து ஏதோ பேசியபடி அந்த வீட்டை நெருங்கினார். மாடி இளைஞர்கள் சுடுவதை நிறுத்திக்கொண்டனர்.
தொடர்ந்து மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, ''நான் ஐ.ஜி... ஸ்ரீபால்!'' என்றார். மாடியில் இருந்து, ''நாங்கள் அறிவோம்...'' என்று பதில் வந்தது!
''நான் சொல்றதைக் கேளுங்க... ஆயுதங்களைப் போட்டுட்டுக் கீழே இறங்கி வாங்க...'' என்றார் ஸ்ரீபால்.
கொலையாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்​கொண்டனர். தொடர்ந்து ஆயுதங்களுடன் கைகளை மேலே தூக்கியபடி இறங்கினர். பார்த்துக்கொண்டு இருந்த நமக்கு 'திக், திக்...’ அச்சமயம் - வெகுவேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய கமிஷனர் தேவாரம், நேராக ஸ்ரீபால் அருகே போய் நின்றார். பிறகு அவசரமாகப் போய் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தார். தொடர்ந்து, ''நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள்...'' என்று தேவாரம் சொன்னார்.
'போராளிகள்’ தலையசைத்துக் (சம்மதம்?) கொண்டனர்.
துப்பாக்கிக்காரர்கள் வேனில் ஏற்றப்பட்​டனர்.
ஐ.ஜி-யுடன் ஒட்டிக்கொண்ட நாம், அந்த வீட்டுக்குள் சென்றோம். உள்ளே ஏராளமான ரிவால்​வர்கள், பிஸ்டல்கள், கையெறி குண்டுகள் சகட்டுமேனிக்குக் கிடந்தன. சீட்டு விளையாடிக்கொண்டு இருந்ததற்கான அடையாள​மாகச் சீட்டுகள், ரூபாய் நோட்டுக்கள்...
கிடைத்த தகவல்கள்: கடந்த ஒரு வருடமாகவே இந்த வீட்டில் வசித்து வருகின்றனர் ஈழப் போராளிகளில் ஒரு பிரிவினரான ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பை (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) சேர்ந்த சிலர்.
அந்தத் தெரு இளைஞர்கள் நம்மிடம், ''தினசரி குடித்துவிட்டு தெருவில் போகும் பெண்களைக் கிண்டலடிப்பது. அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று 'பழம் குடுப்பா...’ என்று கேட்டு வாங்கி விட்டு, 'ஈழம் கிடைச்சதும் காசு தர்றோம்...’ என்று மிரட்டிவிட்டுச் செல்வதும்... வாடிக்கை நிகழ்ச்சி கள்!'' என்றனர்.
உச்சகட்டமாக துப்பாக்கியால் சுட்டது தீபாவளி​அன்று நடந்துவிட்டது.
வழக்கம்போல், ரோட்டை மறித்தவாறு நடந்து வந்துகொண்டு இருந்தார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பைச் சேர்ந்த நால்வர். எதிரே அரிஜனக் காலனியைச் சேர்ந்த ஓர் இளைஞர் வர, நால்வரில் ஒருவர் இளைஞரிடம் வம்பு செய்தார். இளைஞர், 'உங்களை உள்ளே விட்டதே தப்புடா...'' என்றிருக்கிறார். அவ்வளவுதான், இளைஞரை அடித்து துவம்சம் செய்துவிட்டனர் நால்வர். கூட்டம் ஆட்சேபித்து இருக்கிறது.
நால்வரில் ஒருவர் ஓடிப்போய் தன்(?) வீட்டுக்குள் நுழைந்து சகாக்கள் இருவருடனும் கையில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் வந்து சுட ஆரம்பிக்க...
மார்பில் குண்டு பாய்ந்து இறந்தே போய்விட்ட திருநாவுக்கரசு, கையில் குண்டு பாய்ந்து துடித்த குருமூர்த்தி, தோள்பக்கம் பாதிக்கப்பட்ட ரவி... - இந்த சூழ்நிலையில்தான் நம் பிரவேசம்!
- அபராஜித்
இந்த வழக்கின் இன்றைய நிலவரம் இதுதான்!

துப்பாக்கியால் திருநாவுக்கரசுவைச் சுட்டதாகப் பதிவான வழக்கின் முக்கியக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா, இன்று இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவர். இந்த துப்பாக்கிசூட்டுடன் ஒரு சிறுவனைக் கடத்தி பணம் பறிக்க முயற்சித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1994-ம் ஆண்டு முதல் இவர் தமிழ்நாட்டின் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டவர். அவர் அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுடன் டெல்லிக்கு வந்து நம்நாட்டு ஜனாதிபதி அளித்த விருந்தில் கலந்து கொண்டார். ''தேடப்படும் குற்றவாளியான அவரை ஏன் கைது செய்யவில்லை?'' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடுத்தார். ''இந்தியாவுக்கு அரசு சுற்றுப்பயணமாக வந்ததால் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது. அவர் மந்திரியாக இருப்பதால் தூதரக ரீதியான சட்டப்பாதுகாப்பு அவருக்கு உள்ளது. அதை மீறி அவரைக் கைது செய்ய முடியாது!'' என்று மத்திய வெளிவிவகாரத் துறையின் சார்புச் செயலாளர் சுஹல் மாதா பிரபுல்ல சந்திர சர்மா சொல்லி இருக்கிறார். வழக்கின் விசாரணை ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி : ஜூனியர் விகடன், 28-09-2011

ஈழம் இன்று! -ப.திருமாவேலன்



ழம்... இந்த நூற்றாண்டின் சொல்லி மாளாத சோகம்!
இரண்டரை ஆண்டுகளைக் கடந்த பிறகும், மரண பீதி இன்னும் விலகவில்லை. கடவுளின் வரைபடத்தில்கூட இல்லாத தேசமாகிவிட்டது. சிதைக்கப்பட்ட இடங்களின் சிதிலங்கள் மீது சிமென்ட் பூசி மறைக்கும் காரியங்கள் மட்டும்தான் இந்த 30 மாதங்களில் நடந்துள்ளன. மிச்சம் இருப்பவர்களை உரிமை பெற்றவர் களாக அல்ல... உயிர் உள்ளவர்களாகக்கூட மதிக்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே உலகத்துக்கான சேதி!
இன்னமும் முறியாத முள் வேலி!
'விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல... மொத்தத் தமிழர்களும் போராளிகள்தான். அவர்களை வெளியே விடுவது ஆபத்து!’ என்று அனைத்துத் தமிழர்களையும் நடுக் காட்டுக்குள் திறந்தவெளிச் சிறைவைத்து... சுற்றிலும் இரும்பு முள் வேலி அமைத்தார் கள். அதில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டார்கள். இப்படி ஒரு மனித உரிமை மீறல் உலகத்தில் எங்கும் நடந்தது இல்லை என்று ஐ.நா. சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் திரும்பத் திரும்பச் சொல்லி, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் சூழ்நிலை வந்த பிறகுதான்... வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை வெளியே விட்டார்கள். முள் வேலிக்குள் இருப்பவர்களுக்கும் சரியான சாப்பாடு, குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்காமல்விட்டதில் பலரும் நொந்தே செத்துப்போனார்கள். கையில் பணமும் நகையும் வைத்திருந்தவர்கள், அங்கே இருந்த சிங்கள அதிகாரிகளுக்கு அதைக் கொடுத்து வெளி நாடுகளுக்குத் தப்பித்தார்கள். இப்படிப் பலரும், பல வழிகளில் தப்பியது போக.... இன்னமும் கதிர்காமர் மற்றும் ஆனந்த குமாரசாமி ஆகிய இரண்டு முகாம்கள் இருக்கின்றன. கதிர்காமர் முகாமில் 1,017 குடும்பங்களும் ஆனந்த குமாரசாமி முகாமில் 1,262 குடும்பங்களும் என, மொத்தம் 7,540 பேர் மட்டுமே இருப்பதாகக் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
முகாமைவிட்டு வெளியே வந்து தங்களது சொந்த ஊருக்குச் சென்ற பலருக்கும் அவர்களது வீடு இருந்த சுவடே இல்லை. மரங்கள் உள்ள இடத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள். அவர்களது சொந்த நிலம் எங்கே என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. 'அரசாங்கம் எடுத்துக் கொண்டுவிட்டது. பழைய பத்திரங்கள் செல்லாது!’ என்று சொல்லிவிட்டார்கள். மீன் பிடிக்கக் கடற்கரைக்கும் செல்ல முடியாது. இடிபாடுகள்கொண்ட பழைய கட்டடங்களையும் தெருக்களையும் பார்த்த படியே படுத்துக்கிடக்கின்றன தமிழ்க் குடும்பங்கள். 80 ஆயிரம் விதவைகள், 5,000 உடல் ஊனமுற்றோர் அநாதைகளாக அலைகிறார்கள். எங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று குவிந்த புகார்களில் இருந்து 49 குழந்தைகள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா கொடுத்த கோடிக்கணக்கான பணத்தைவைத்து இதுவரை 50 வீடுகள்கூடக் கட்டித் தரவில்லை என்கிறார் எம்.பி-யான சீ.யோகேஸ்வரன். 'எங்களை யாரும் கேள்வியே கேட்க முடியாது’ என்பதுதான் ராஜபக்ஷே, தமிழர்களுக்குச் சொல்லும் ஒரு வரிச் செய்தி!
எங்கும் ராணுவமயம்!
''வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது!'' என்று தமிழ் எம்.பி-க்கள் கூட்டமைப்பு சொல்கிறது. அதை உறுதிப்படுத்துவது மாதிரியே திரும்பிய பக்கம் எல்லாம் ராணுவம்... ராணுவம்... ராணுவம் மட்டுமே!
''போர் முடிந்துவிட்டதே... அப்புறம் எதற்கு ராணுவத்தினரை இந்த அளவுக்கு நிறுத்திவைத்து இருக்கிறீர்கள்? அவர்களை வாபஸ் வாங்க வேண்டியதுதானே?'' என்று தன்னைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவிடம், ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன் கேட்டார். ''அவர்கள்தான் இப்போது தமிழர்களுக்குச் சேவை செய்கிறார்கள். அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களை யும் அமல்படுத்த அவர்களைத்தான் பயன் படுத்துகிறோம்!'' என்றார் ராஜபக்ஷே. துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமூக சேவை செய்பவர்களை இலங்கையில்தான் பார்க்க முடியும். வடக்கில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. கிழக்கில் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், யாழ்ப்பாணத்தில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படிப்பட்ட யாழ்ப்பாணத்திலேயே இன்னும் 44 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருப்பதாக, அந்த மாவட்டத்து எம்.பி. சொல்கிறார். அதன் மொத்த மக்கள் தொகையே 6 லட்சம்தான்!
இலங்கை முழுவதும் ஆறு ராணுவப் படைத்தளங்கள் உள்ளன. அதில் நான்கு, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி ஆகிய இடங்களில் உள்ளன. ராணுவத்தின் 17 டிவிஷன்கள் அங்கு உள்ளன. சிங்களப் பகுதியில் நான்கு டிவிஷன்கள் மட்டுமே இருக்கின்றன. 'இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதற்காகவே இவர்களை நிறுத்திவைத்து இருக்கிறார்கள்!’ என்று தமிழ் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டுகிறார்கள்!
சிங்களமயமாகும் தமிழ் நிலம்!
''வடக்கும் கிழக்கும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம். எனவே, இது தமிழர் தாயகம். இவை இரண்டையும் இணைத்து தமிழ் ஈழம் அமைப்போம்!'' என்பதுதான் தமிழர்கள் இதுநாள் வரை வைத்த கோரிக்கை. வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைப் பெரும்பான்மை ஆக்கிவிட்டால்? தமிழர் தாயகம், இணைப்பு, தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே செல்லாததாக ஆகிவிடும் அல்லவா? ராஜபக்ஷேவின் திட்டம் இதுதான். இப்போது தமிழர் பகுதியில் இதுதான் நடக்கிறது.
தமிழர் கையில் இருந்த நிலங்களை வித்தியாசமான தந்திரத்தின் மூலம் பறிக்கிறார்கள். 'ஊர்க் காவல் படைக்கு இடம் வேண்டும்’, 'ராணுவத்துக்கு இடம் வேண்டும்’ என்று சொல்லி, மொத்தமாக அரசாங்கம் எடுத்துக்கொள்கிறதாம். பிறகு, இந்த இடங் கள் ராணுவ வீரர்களுக்குத் தரப்படுகின்றன. அவர்கள் சிங்கள மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இந்த மாதிரி கையகப்படுத்தப்பட்டு சிங்களவர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. ''புதிய முகாம் அமைத்தல், ராணுவத்துக்கான இடவசதிகள், ராணுவத்தின் தேவைகள் ஆகியவற்றுக்காக காணிகளை எடுப்பது என இடங்கள் பறிக்கப்படுகின்றன. மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்று தங்களது வாழ்க்கையைத் தொடங்க முடியாமல், அவர்களது வாழ்க்கையே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது!'' என்கிறார் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தம். இதனால், ஓமந்தை என்ற இடம் 'ஓமந்த’ என்ற சிங்கள உச்சரிப்புடன் சொல்லப்படுகிறது. கொச்சன்குளம் என்ற ஊர் 'கால பொவசெவெள’ என்று மாற்றப்பட்டு விட்டது. தமிழில் எழுதப்பட்ட பலகை கள் அழிக்கப்பட்டு... சிங்களம், ஆங்கிலத் தில் எழுதப்படுகின்றன. கிளிநொச்சியில் பிரதான தெருவுக்கு 'மகிந்த ராஜபக்ஷே மாவத்தை’ என்று சூட்டப்பட்டு உள்ளது. இந்து, கிறிஸ்துவக் கோயில்கள் இடிந்த நிலையில் கிடக்க... புத்த விகாரைகள் புத்துணர்வு பெற்று எழுகின்றன!
நடுங்கும் ராஜபக்ஷே!
''இலங்கைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் என் மீது தாக்குதல் நடப்பதற்கான சூழல் இருக்கிறது. அதனால்தான் ராணுவ பலத்தை நான் அதிகப்படுத்தி வருகிறேன்!'' என்று கொழும்பு கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ராஜபக்ஷே பேசும்போது சொன்னார். இலங்கைப் பகுதியில் அதிக அளவில் விழாக்களில் அவர் பங்கேற்பது இல்லை. பெரும்பாலும் அலரி மாளிகை விழாக்களில் மட்டுமே கலந்துகொள்கிறார். லண்டனுக்கு அவர் சென்றிருந்தபோது புலம்பெயர் ஈழத் தமிழர்கள், அவர் தங்கி இருந்த இடத்தைச் சுற்றி வளைத்தபோது 'எப்படித் தப்பினார்?’ என்று வெளியே தெரியாத அளவுக்கு கொழும்பு வந்து குதித்தார். இதன் பிறகு அவரது வெளிப் பயணங்கள் பலதும் தள்ளிவைக்கப்பட்டன!
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ராஜபக்ஷே மீது 'போர்க் குற்றவாளி’ என்று குற்றம்சாட்டும் வழக்குகள் பாய்ந்துவருகின்றன. இதனாலும் பயணங்கள் தள்ளிவைக்கப்படுகின்றன. ராஜபக்ஷேவுக்கு அடுத்த நிலையில் அவரது தம்பி பசில் வருவாரா அல்லது அவரது மகன் நிமல் வருவாரா என்ற உள்வீட்டுக் குழப்பம் இப்போதே தொடங்கிவிட்டது. தனது மகனைக் கொண்டுவர வேண்டும் என்பதில் மகிந்தாவின் மனைவி ஆர்வமாக இருக்கிறார். விடுதலைப் புலிகள் பேரால் கூறப்படும் ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக இலங்கை அதிகப்படியான கடன் சுமைகளில் மூழ்கிவருவதும்... இதனால் பொருட்களின் விலை அதிகமாகி வருவதும் சிங்கள மக்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கி உள்ளன. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ராணுவத்துக்கு மட்டும் 229.9 மில்லி யன் ஒதுக்கிவிட்டு உட்கார்ந்துவிட்டார் ராஜபக்ஷே. நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடந்துகொண்டு இருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து ஒருவர் தண்ணீர் பாக்கெட்டைத் தூக்கிப் போட... வெடிகுண்டு விழுந்ததைப் போல அத்தனை பேரும் பதறிப்போனார் கள். அனைவரையும்விட அதிகமாகப் பதறியவர் ராஜபக்ஷே!
கண்துடைப்பு கமிஷன்!
''ராஜபக்ஷே மீது போர்க் குற்ற வழக்கைப் பதிவுசெய்துக் கைது செய்'' என்பதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரல். இதற்கு அவர் சொன்ன பதில், ''இலங்கையில் போர் விதிமீறல் நடந்திருக்கிறதா என்று நாங்களே ஆய்வு நடத்தி, அப்படித் தவறு செய்தவர்களைக் கண்டிப்போம்!'' என்பது. அதாவது, இலங்கை ராணுவத்தினர் செய்த தவறுகளை இலங்கை அரசே விசாரிக்கும் காமெடி இது!
'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ என்று இதற்குப் பெயர். 338 பக்கம்கொண்ட இந்தக் குழுவினரின் அறிக்கை ராஜபக்ஷேவிடம் கடந்த 20-ம் தேதி தரப்பட்டது. ''மொத்த சம்பவங்களைப் பூசிமெழுகும் காரியம் இது'' என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். சிங்கள மொழி பேசியபடியே தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கும் காட்சியும்... தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் நிர்வாணமாக்கி, கண்ணைக் கட்டி சுட்டுக் கொல்லும் காட்சியும்... சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பானது. உலகத்துக்கு உண்மையைச் சொன்ன ஒரு சில நிமிடங்கள் அவைதான். அந்தக் காட்சியே பொய்யா னது என்று இந்த அறிக்கை சொல்கிறதாம். ''ராணுவத் துக்கு வேறு வழி இல்லை. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ராணுவம் நினைத்திருந்தால், தீவிரவாதிகளது கை ஓங்கி இருக்கும்!'' என்று காரணமும் சொல்கிறதாம். அதையும் மீறிச் சில சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கு சரத் ஃபொன்சேகாவும் அவரது ஆதரவு ராணுவ அதிகாரிகள் சிலரும்தான் காரணம் என்று கைகாட்டுகிறதாம் இந்த அறிக்கை. நாடாளுமன்றத்தில் இன்னமும் தாக்கல் செய்யப்படாத அந்த அறிக்கையின் சில தகவல்களை சிங்களப் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்து உள்ளன. ''இந்த அறிக்கையை ஏற்க முடியாது!'' என்று சிங்களக் கட்சிகளே சொல்ல ஆரம்பித்துஉள்ளன!
எப்படி இருக்கிறார் ஃபொன்சேகா?
மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சரத் ஃபொன்சேகா, கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கிறார். அவரது விடுதலைக்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் பொய்த்துவிட்டன. தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுத் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார் ஃபொன்சேகா. யார் இந்தத் தண்டனையைக் கொடுத்தாரோ... அதே நீதிபதிக்குப் பதவி உயர்வைக் கொடுத்து, அந்த அப்பீல் மனுவையும் அவரையே விசாரிக்கச் சொல்லிவிட்டார் ராஜபக்ஷே. பிரிந்த இந்த இரண்டு மாஜி நண்பர்களுக்குள் நடக்கும் அரசியல்தான் இன்றைய இலங்கை அரசியல். ''என் கணவரைக் காப்பாற்றுங்கள்!'' என்று ஃபொன்சேகாவின் மனைவி தான் தினமும் அறிக்கை விடுகிறார். ஃபொன் சேகாவை எப்போது எல்லாம் மருத்துவமனையில் காட்ட வேண்டுமோ... அப்போது எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அங்கு அழைத்துச் செல்ல மறுத்துவிடுகிறார்களாம். இந்த நிலையில், ஃபொன்சேகாவின் விடுதலைக்காக சிங்க ளக் கட்சிகளை ஒன்றுதிரட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குரல் கொடுத்துள்ளார். உடனே, ரணில் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் (ஹோமோ செக்ஸ் மாதிரியான புகார்கள்) சொல்லிக் கேவலப்படுத்தும் காரியங்கள் தொடங்கி இருக்கின்றன. 'ஃபொன்சேகா உயிரோடு வெளியே வர மாட்டார்!’ என்கிற அளவுக்கு அவருக்கு நெருக்கடிகள்ஏற்பட்டு விட்டனவாம்!
பேசிப்பார்க்கும் தமிழ் எம்.பி-க்கள்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அணி திரண்டுள்ள தமிழ் எம்.பி-க்கள் மட்டும்தான் ஈழத் தமிழர்களுக்காக அந்த மண்ணில் இருந்தபடி தயங்காமல் பேசுகிறவர்கள். நாடாளுமன்றத்திலும் இவர்கள் பேச்சு நம்பிக்கை தருவதாக உள்ளது. பயன் இருக்கிறதோ இல்லையோ, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். இதுவரை 13 முறை இவர்கள் பேசி இருக்கிறார்கள். டிசம்பர் மாதம் மட்டும் நான்கு நாட்கள் பேசுவதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது. மீள் குடியமர்வு, புனர்வாழ்வு, வீட்டுவசதி, தொழில்வாய்ப்பு, அத்தியாவசியத் தேவைகள் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைப்பதோடு, அரசியல் தீர்வையும் வலியுறுத்துகிறார்கள். ''நாங்கள் எங்களுக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டோம். அரசு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை!'' என்கிறார் சம்பந்தம்.
''இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் நிதானமாகச் செயல்படுவோம். எமது மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களை விட்டுத்தர மாட்டோம்!'' என்கிறார் சம்பந்தம். இன்னும் எத்தனை சுற்று பேசுவார்கள் எனப் பார்ப்போம்!
தமிழர்களின் மௌன எழுச்சி!
தமிழர்கள் முதலில் அடி வாங்கியதும், திருப்பி அடிக்க ஆரம்பித்ததும் யாழ்ப்பாணம்தான். எல்லாவற்றுக்கும் ஆரம்பம் அதுதான். இப்போது அங்கும் சில ஒளி மின்னல்கள் கடந்த வாரத்தில் தெரிந்தன. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நவம்பர் 27 மாவீரர் நாளுக்கான நிகழ்வாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டதாம்.
'சத்திய லட்சிய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்க உறுதி பூணுவோம்!’ என்று எழுதப்பட்டதைப் பார்த்து, தமிழ் மாணவர் கள் உணர்ச்சி அடைய... அடுத்த சில நிமிடங்களிலேயே ஆறு பைக்குகளில் முகமூடி அணிந்து (ராணுவத்தினர் என்று சொல்லப்படுகிறது!) வந்தவர்கள் அந்த சுவரொட்டியைக் கிழித்துச் சென்றுவிட்டார்களாம். கானா நகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்துக்கும் பண்டத்தரிப்பான் குளம் ஸ்ரீசுந்தரேசன் பெருமாள் கோயிலுக்கும் வந்த கடற்படை வீரர்கள், 'இந்த ஒரு வாரத்துக்கு கோயிலில் மணி அடிக்கக் கூடாது!’ என்று உத்தரவிட்டார்களாம்.
மீறி ஒலித்திருக்கிறது 'மாவீரர்’ மணிஓசை!

நன்றி: ஆனந்த விகடன், 07-12-2011  

அன்று பராசக்தி... இன்று 'பல்டி'யேசக்தி!


'சாந்தா அல்லது பழனியப்பன்’ - இது கருணாநிதி  போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ’ - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.
ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது. அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, 'என்னது... சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது 'ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்... பச்சைத் துரோகம்!
முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால், இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
''இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில் 'முதல்வராக’ இருந்தபோது, ''நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப் பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்'' என்று சொல்லிச் சமாளித்தவர்.
லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை. 'கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். 'இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ''பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி'' என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!
''இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்'' என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை. 'போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ''அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே... அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் 'பாதுகாப்பான இடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டு கள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.
''நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி  உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?'' என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ''மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்'' என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. 'கொன்றுவிட்டார் கள்... கொடுமைப்படுத்தினார் கள்... சித்ரவதை செய்தார்கள்’ என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. 
அப்போதும் 'முதல்வர்’ கருணாநிதி, ''இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல'' என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ''போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை'' என்றார். அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.
''இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்'' என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். 'போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக் காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.
''போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல'' என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ''அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது'' என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும். ''ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்'' என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.
போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ''முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து'' என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ''அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை... பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்'' என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப் பட்டபோது, ''இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்'' என்று மிரட்டல் விடுத்து,  பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து... இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.
  
சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ''பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்'' என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ''விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்'' என்று கிண்டல் அடித்ததும், ''இன்று அனை வரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்'' என்பவர், அன்று, ''ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்'' என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.
ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு... என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ''ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!'' என்று தந்தை பெரியார் சொன்னார்.
அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?
Courtesy: Ananda Vikatan

Monday 5 August 2013

'கவலை (இல்லாத) மனிதன்' J.P.சந்திரபாபு


ஆக. 05 தமிழ் திரை உலகின் பல துறைகளில், உச்சம் தொட்ட கலைஞனின் பிறந்த நாள் இன்று...


இசை:- இசை துறையை பொறுத்தவரை மேற்கத்திய பாணி பாடல்கள் பாடுவதில் தமிழ் திரை உலகின் முன்னோடி இவர். இன்றைய குத்து பாடல்களின் முன்னோடியான 'பாய்லா' பாடல்களின் துவக்கமும் இவரே.
நடனம்:- இன்று இந்தியாவின் 'மைக்கேல் ஜாக்சன்' என்று போற்றப்படும் பிரபுதேவா, இவரின் நடன அசைவுகளையும், மேனரிசங்களையும் பின்பற்றிதான் புகழடைந்தார் என்பதை பிரபுதேவாவினாலும் மறுக்க முடியாது. (இனிமேல் பிரபுதேவாவை 'இந்தியாவின் சந்திரபாபு' என்று அழைத்து கொள்ளுங்கள்)
நடிப்பு:- M.R.ராதாவின் நடிப்பை விவேக்கும், நாகேஷ் நடிப்பை வடிவேலுவும், கவுண்டமணி நடிப்பை சந்தானமும் காப்பி அடித்து வெற்றிபெற முடிந்தது. ஆனால் இவருடைய இடத்தை நிரப்ப மற்ற எந்த நடிகராலும் இன்றுவரை இயலவில்லை. (லூஸ் மோகன், சார்லி முதல் சாப்ளின் பாலு வரை முயற்சித்து தோற்றவர் லிஸ்ட் அதிகம்)

தமிழ் திரையிசை மேடை கச்சேரிகளில் இன்றும் தவிர்க்க முடியாத அங்கம் சந்திரபாபுவின் குரல். (T.M.S. குரலை வெறுப்பவரும் உண்டு. சந்திரபாபு குரலை வெறுக்கும் மேடை கச்சேரி ரசிகர் எவரும் கிடையாது)

இப்பேர்ப்பட்ட மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஏதாவது ஒரு டிவி-யில் சிறப்பு நிகழ்ச்சி இருக்கும் என்று காலையிலிருந்து சானல்களை மாற்றி மாற்றி பார்கிறேன், கடைசில ஒருத்தனும் கண்டுகிடலன்னு புரிஞ்சுகிட்டேன்.

நாமாவது முகநூலில் ஒரு பதிவிடலாம் என்று தீர்மானித்து, 'கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில்' தகவல் தேடலாம்னு போய் பார்த்தால், அங்கு முதல் வரி 'ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர்' என்றிருக்கிறது. ஆனால் J.P.ரோட்ரிக்ஸ் (ஜோசப் பிச்சை ரோட்ரிக்ஸ்) என்பது சந்திரபாபு அவர்களின் தந்தையார் பெயர் என்பதும் சந்திரபாபுவின் இயற்பெயர் 'பனிமயதாசன்' என்பதுதான் உண்மை. ஆக.05 தூத்துக்குடி 'பனிமய மாதா' திருவிழா என்பதால் பெற்றோர் அந்த பெயரை சூட்டினர். விக்கிப்பீடியாவில் இருப்பதுதான் இறுதி உண்மை என்று நம்புகின்ற 'அறிவாளிகள் யுகத்தில்' இப்படியான அஜாக்ரதைகள் எதை காட்டுகிறது? (நான் மதிக்கின்ற ஒரு கட்டுரையாளரின் கட்டுரையில், சந்திரபாபுவின் இயற்பெயர் 'மகிமை தாஸ்' என்று எழுதப்பட்டிருந்ததை இன்று பார்த்தேன்)

நடிக்கவே தெரியாதவன், ஓவரா நடிக்கிறவன், சொந்த வாழ்க்கையில் அயோகியனாகவே வாழ்ந்தவனுக்கெல்லாம் சிறப்பு நிகழ்ச்சி செய்கிற சானல்கள், தனது திறமையை நிரூபித்து மறைந்த ஒரு கலைஞனை, நல்ல மனிதனை சிறப்பிக்க மறுப்பதன் பின்னணி என்ன?

J.P.சந்திரபாபு ஒருவேளை தமிழ்நாட்டில் சிறப்பிக்கப் பட்டிருக்கலாம்...
சந்திரபாபு மேனன்
சந்திரபாபு நாயர்
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு ரெட்டி
சந்திரபாபு ஐயர்
சந்திரபாபு அய்யங்கார்
சந்திரபாபு ராவ் கெய்க்வாட்...
இவற்றில் ஒன்றாக இருந்திருந்தால்...

(பி.கு:- கப்பலோட்டிய தமிழர் என்று தமிழினத்தால்(இந்தியர்களால்) கொண்டாடப்பட வேண்டியவர் சந்திரபாபுவின் தந்தை J.P.ரோட்ரிக்ஸ். அவருக்கும் இதே சதி வரலாறு பொருந்தும்)