Thursday 18 October 2012

டெங்கு காய்ச்சல் - சில தகவல்கள், சில தீர்வுகள்.



உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயே டெங்கு காய்ச்சல். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் (EPIDEMICS) அதிகரித்துள்ளது. உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் ட
ெங்கு கொள்ளை காய்ச்சல் பாதிப்பு வளையத்திற்குள் வாழுகின்றனர். ஆண்டுக்கு 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது.

டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?

டெங்கு 1, 2, 3, 4 என 4 வகை வைரஸ்களால் ஏற்படும் சுரம் இது. ‘எடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்களால் இது பரவுகிறது. கொசு கடித்த 5, 6 நாட்களில் சுரம் வருகிறது.

இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும்.

தண்ணீர் தேங்க விடாதீர்கள்!
முன்பெல்லாம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெருகிய ஏடியஸ் கொசுக்கள் இப்போது கோடை மழைக் காலச் சூழலிலும் பெருகி வருகின்றன.
ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம். ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

நோய் தொற்றிய பின் காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?

நோய்க்கிருமி தொற்றியதும் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடையும். 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகளை உண்டாக்கும்.

டெங்கு காய்ச்சல்... அறிகுறிகள் என்ன?

1. டெங்கு காய்ச்சல் ( Dengue Fever -DF)

2. டெங்கு ரத்தக் கசிவு காய்ச்சல் (Dengue Hemorrhagic Fever -DHF)

3. டெங்கு தீவிர தாக்குதல் நிலை (Dengue Shock Syndrome)

இவ்வாறு டெங்கு சுரத்தில் 3 நிலைகள் ஏற்பட்டு மரணங்களும் ஏற்படுகின்றன. DF: கடுமையான ள1030 - 1050 ஊன சுரம், கடும் தலைவலி, கண்களுக்கு பின்னால் கடும் வலி (Retro Orbital Pain), தசைவலி, எலும்பு & மூட்டுவலி, கடும் வாந்தி, தோலில் சிவந்த சினைப்புகள் (Rash)
DHF: கடும் சுரம், தோலில் சிவப்பு, ஊதா நிறப் புள்ளிகள், வாய் உட்பகுதி,
மூக்கு, குடற்பகுதியில ரத்தக் கசிவு, ரத்த வாந்தி, ரத்த மலம்.
(3) DSS: நோய் உக்கிரமடைந்து ரத்த சுழற்சி செயலிழந்து விடும். இந்நிலை ஏற்பட்டு

12 – 24 மணி நேரங்களில் நோயாளி மரணமடைந்து விடுவார்.

டெங்கு சுரத்தை உறுதிப்படுத்த சோதனைகள் உள்ளதா?
நேரிடையாக (அ) மறைமுகமாக டெங்கு சுரத்தை ஆய்வுக் கூடங்களில் உறுதிப்படுத்த முடியும்.
நோயின் ஒரு கட்டத்தில் டெங்கு வைரஸ்கள் மனித ரத்தத்திலுள்ள தட்டையணுக்களை (PLATELETS) அழிக்கும். எனவே வாய், மூக்கு என உடலின் பல பாகங்களில் ரத்தக் கசிவு நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும். இந்நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் - மருத்துவமனைகளில் (Fresh Blood Transfusion (அ) Platelets Rich Plasma) ரத்தம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா?

ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை! சித்த, ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன.
நிலவேம்பு கசாயம் தினம் - காலை / மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸôல் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.
ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும்.

சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.

ரத்தத் தட்டணுக்கள் ( PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ளபோது - 1 லட்சம் To 11/2 லட்சம் அளவுக்குள் இருக்கும்போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால் Platelets அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்காவிட்டால்.... பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன் படுத்தலாம்)

(குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியம்; நல்லது.)

‘டெங்குவை’ அடங்கச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளனவா?
உலகப்புகழ் பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்கன் குனியா, பன்றி சுரம், பறவை சுரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.
1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு சுரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு சுரம், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர்.

பொதுமக்களே! அச்சம் வேண்டாம்!
பெருவாரி நோய்கள் பரவும் காலங்களில் நம் உடலின் தற்காப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு நோய் வராமல் தடுக்கவும், நோயின் ஆரம்ப நிலையிலேயே பக்கவிளைவு இல்லாமல் முழுமையாக குணப்படுத்தவும் வாய்ப்புள்ள ஹோமி யோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.
எளிய கிருமிகளால் மனித உயிர்கள் அழிவது மாபெரும் வீழ்ச்சி! அறியாமை! மனிதன் மகத்தானவன்! மனித உயிர் விலை மதிப்பற்றது!

மனித உயிருக்கு அரணாய் திகழும் மாற்று மருத்துவங்கள் இருக்க...
வீண் பயமும் பீதியும் எதற்கு? டெங்கு சுரத்தை முறியடிப்போம்..

Thursday 11 October 2012

இதுதானா சார் உங்க டக்கு???


செய்தி:- சுமார் 25,000 பேரின் உயிரைப் பலி கொண்ட அமெரிக்காவின் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் செயல் அதிகாரி வாரன் ஆண்டர்சனுக்கு இந்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்கள் அனைத்தும் முகவரி தவறு என திரும்பி வந்துள்ளன.

இந்திராகாந்தி முதல் மண்ணுமோகன்சிங் வரையிலான ஆட்சியாளர்கள் 28 வருடங்களாக 25000 அப்பாவி இந்தியர்களை கொன்ற அன்னிய சக்திகள் மீது எடுத்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும்போது, தேசபக்தியில் உடம்பெல்லாம் செல்லரிச்.. மன்னிக்கவும் புல்லரிச்சு போயிடுது...

டிசம்பர் 2, 1984 போபாலில், மக்கள் இரவு உணவருந்திவிட்டு, எதிர்காலக் கனவுகளுடன் உறங்கச் சென்றார்கள். இன்னும் சில மணி நேரங்களில் தங்களுக்கு நேரப்போகும் பேராபத்தால் மீளா உறக்கத்தில் ஆழப்போகிறோம் என நிச்சயம் அவர்களுக்குத் தெரியாது. நல்லிரவுக்கு அருகாமையில் கடுமையான இருமல் மற்றும் கண் எரிச்சல் எற்பட்டதும், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அடித்துக்கொண்டு வெளியேறினர். ஊரே அலறியடித்துக்கொண்டு திக்குத் தெரியாமல் ஓடுவதைக் கண்டு மக்கள் திகைத்தனர். ஓர் விஷவாயு அருகிலிருந்த யூனியன் கார்பைடு கம்பெனியிலிருந்து கொல்ல வந்தது. பொழுது விடிந்தபோது விஷவாயு 5,000 உயிர்களைப் பலிகொண்டிருந்தது. அக்கொடிய வாயுவின் பெயர் மெதில் அய்சோ சயனைடு.

உலகின் மிகப் மோசமான தொழிற்சாலை விபத்தென உலகம் அலறியது. மொத்தத்தில் 25,000 பேர் இறந்தனர். இலட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சரிசெய்ய முடியாத அளவிற்கு சுற்றுசூழல் நாசம் செய்யப்பட்டது. விபத்திற்குக் காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்க கோரியும், இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்பீடு கோரி பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. நீதிமன்றங்கள் தங்களுக்கு விரைவில் நீதி வழங்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் ஏற்பட்டது. நீதித்துறை இவ்வழக்கை மிகவும் தாமதமாக நடத்தியது. இறுதியில் 178 சாட்சிகளுடன் 30,000 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வழக்கில் 26 ஆண்டுகள் காத்திருக்கும்படி செய்தார் நீதிபதி மோகன் திவாரி.

சூன் 7 அன்று அளித்திருக்கும் தீர்ப்பு பேரதிர்ச்சியை உண்டு பணர்ணிவிட்டது. கொடிய குற்றங்களுக்கு குறைந்த தண்டனைகள் வழங்கியது மக்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலானது. 25,000 மக்களைக் கொன்றவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. நம்முடைய ஊர்களில் உணர்ச்சி வசப்பட்டு செய்யப்படும் கொலைக்கு கூட ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் தங்களின் இலாபவெறியால், அலட்சியத்தால் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்ற நிறுவன முதலாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை. ஏனெனில் மக்களைவிட பன்னாட்டு முதலாளிகளும், பணக்காரர்களும் அரசுக்கு நெருக்கமானவர்கள் என்பது உறுதியாகிறது. இதில் தண்டனை பெற்றவர்களுக்கு உடனே பிணை கிடைத்ததால் அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள் என்பதிலிருந்து, இந்நாட்டில் நீதி, நியாயம் என்ற ஏதாவது இருக்கிறதா என நம்மை கேள்வி கேட்க வைக்கிறது.

போபால் பேரழிவினைப் பற்றி சரியான புரிதல் எற்பட நாம் அந்நிறுவனத்தைப் பற்றியும், அதன் செயல்படும் தன்மை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் துணை அமைப்பான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட், 1969-இல் போபாலில் 67 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை தொடங்கியது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் செயற்கை உரங்களைத் தயாரித்து விவசாய விளை நிலங்களை, மலடான நிலைக்கு மாற்றிய நிறுவனங்களில் இது முக்கியமானது. 1979-இலிருந்து மிகவும் நச்சுத்தன்மையுடைய வாயுவான மெதில் அய்சோ சயனைடைத் தயாரித்தது. பல தொழில்நுட்பக் கோளாறுகள் அத்தொழிற்சாலையில் இருந்தாகப் பலர் கூறியும், அந்நிறுவனம் அதைக் கண்டுகொள்ளவில்லை. 1983 மார்ச் 4-இல் அதாவது அக்கொடிய சம்பவம் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு சமூக அமைப்பு தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது என்று அந்நிறுவனத்தின் செயல் மேலாளர் முகுந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ஏப்ரல் 28-இல் அவர் அனைத்து பாதுகாப்பும் போதுமானதாக உள்ளதென பதில் தந்துள்ளார். ஆனால் அடுத்த ஆண்டே அக்கொடிய விபத்து நடைபெற்றது.

அக்கோர தினத்தன்று, 610 என்ற எண் கொண்ட தொட்டியில் மட்டும் அளவுக்கு அதிகமாக 40 டன் மெதில் அய்சோ சயனைடு வைக்கப்பட்டு இருந்தது. இந்த சயனைடின் கொதிநிலை 31.1 டிகிரி. எனவே, இதை குளிர் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். இந்த வேதிப்பொருளுக்கு மணம், நிறம் கிடையாது. எனவே, இது பரவினால் தரியவும் வாய்ப்பில்லை. அவ்வாயு வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப்பட வேண்டும். ஆனால், போபாலில் இந்த அளவு 11 டிகிரிக்கு பதிலாக 20 டிகிரிகளாக வைக்கப்பட்டிருந்தது. அவ்வாயு கசிந்து அன்று வீசிய பலமான காற்றினால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் அவ்வாயு புகுந்தது. முதலில் கண் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலை மட்டுமே உணரமுடிந்தது. முதலில் யாரோ மிளகாய் மூட்டையை எரிக்கிறார்கள் என்றே மக்கள் நினைத்துள்ளனர். அதற்குள் தன் கொடிய வேலையை அவ்வாயு செய்யத் தெடங்கியது. பொழுது புலர்வதற்குள் மக்கள் குடியிருப்பை சுடுகாடாக மாற்றிச் சென்றது. போபால் பேரழிவின் அடையாளமாக இன்று கருதப்படும் அந்த கண்கள் பொங்கிய நிலையில் புதையுண்ட குழந்தையின் பெயர் இரகு ராய்.

விபத்தின் தாக்கம் அதோடு நின்றுவிடவில்லை. அடுத்த ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் விஷவாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணிப் பெண்களுக்கு உடனடியாகக் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், 21 குழந்தைகள் குறையுடன் பிறந்ததாகவும், 27 குழந்தைகள் இறந்தே பிறந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த ஆலையானது, விபத்து ஏற்பட்ட பிறகு அரசால் மூடப்பட்டது. 1994-இல் நடத்தப்பட்ட பொது ஆய்வின்போது, 44,000 கிலோ நச்சு தாரும், 35,000 கிலோ அல்பா நெப்தாலுமர், திறந்த வெளியில் டிரம்மிலும், கோனிப்பையிலும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் போட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 18,000 டன் நச்சுக்கழிவுகள் அங்கிருக்கும் விஷகுளத்தின் அடியில் புதையுண்டுள்ளது. 23,000 டன் வேதிப்பொருட்கள் தரையில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அத்தொழிற்சாலை தொடங்கி நாற்பது ஆண்டுகளாக அவை மழையால் பெரும்பகுதி மண்ணிலும், நிலத்தடி நீரிலும் கலந்து தொடர்ந்து இன்றும் மக்களுக்குக் கெடுதலை எற்படுத்தி வருகின்றது.

மத்திய அரசு 2006 அக்டோபர் 26-இல் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த உறுதிமொழி அறிக்கையில் மொத்தம் 5,58,125 பேர் விஷவாயு விபத்தின் மூலம் காயம்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் 92.5% அதாவது 5,16,406 பேர் மிகவும் சிறிய காயம்பட்டதாகத் தரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்புகளும், குடல் பாதிப்புகளும் சிறு காயங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் கொடுமையானது. 38,478 பேர் (6.8%) தற்காலிக அரை-இயலாமைக்கு ஆளாயினர் என்றும், வெறும் 0.7 சதவீதத்தினர், அதாவது 3,241 பேர் மட்டுமே முழு இயலாமைக்கு ஆளாயினர் என்றும் கூறப்பட்டுள்ளது. பாதிப்புகளின் அளவைக் குறைத்துக் கூறுமாறு மருத்துவர்களை அரசு கடுமையாக அழுத்தம் கொடுத்தாக, போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

போபால் பேரழிவின்போது அதன் தலைமை இயக்குநர் ஆண்டர்சன் டிசம்பர் 7 அன்று கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குத் தேவைப்படும்போது நீதிமன்றத்தில் நேர் நிற்பேன் என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு பின்னர்தான் 25,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டான். அன்றைய போபால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அரசுக் காரில் ஆண்டர்சனை தப்புவிக்க விமானம் நிலையம் வரை சென்று வழியனுப்பினர். இதை ஒரு பிரான்சு ஊடகம் படம் எடுத்த பிறகே வெளியுலகத்திற்குத் தரிய வந்தது. பின்னர் ஆண்டர்சன் சகல அரசு மரியாதையுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றான். அப்பொழுதே இந்தியாவை ஆண்ட காங்கிரசு அரசு, கொலைகாரன் ஆண்டர்சனுக்கு உற்ற துணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்தது. எதிர்கட்சிகளும் எதிப்பதுபோல் மக்களிடம் பாசாங்கு செய்துகொண்டே பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாவலனாகவே இருக்க விரும்புகின்றன. இப்போது வீரவேசம் போடும் பா.ஜ.க. தன் ஆட்சிக்காலத்தில் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வந்து தண்டனை வாங்கித்தர விரும்பவில்லை. எனவே அவர்கள் ஆண்டர்சனுடைய வழக்கறிஞர் சார்ந்திருக்கும் சட்டக்குழுமத்தின் மற்றொரு வழக்கறிஞரிடம் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வரமுடியுமா என வல்லுனர் கருத்து கேட்டது. அதற்கு அந்த வழக்கறிஞர் முடியாது என கருத்து கூறியவுடன் ஆண்டர்சன் வழக்கைத் தூக்கி குப்பையில் வீசியது பா.ஜ.க.

மக்களிடம் போபால் பிரச்சனை பெரிய அளவில் வெடித்த பின்பு இப்பொழுது அனைத்து அரசியல் கட்சிகளும் ஆண்டர்சனை இந்தியா கொணர்டுவந்து தண்டிக்க வேண்டுமென முழக்கம் போடுகின்றனர். இது சரியானதுதான். ஆனால் இந்த விசயத்தில் எந்தக் கட்சிகளும் மனச்சாட்சியுடன் செயல்படவில்லை. ஏற்கனவே ஆண்டர்சனுக்கு 90 வயது ஆகிவிட்டது. அமெரிக்கா இன்னும் அவனை அனுப்பமாட்டேன் என அடாவடி செய்கிறது. அப்படியே இந்திய மக்களின் கோபத்தின் காரணமாக கொண்டுவந்தாலும் வழக்கு விசாரணை என்ற பெயரில் காலந்தள்ளி அவனாகவே வாழ்க்கை இன்பங்களை அனுபவித்துவிட்டு இறந்தபிறகு வழக்கை முடித்துக் கொள்வது தான் இந்த அரசியல் கட்சிகளின் திட்டம்.

இதுவரை போபால் விபத்தில் நம் நாட்டின் அரசியல் கட்சிகள் எவ்வாறு நம் நாட்டுக்கும் நம் நாட்டு மக்களுக்கும் பச்சை துரோகம் செய்தனர் என்பதை பற்றி பார்த்தோம். அவர்கள் அதோடு நின்றுவிடுகிறார்களா என்ன? இன்னும் பல வழிகளில் பன்னாட்டு, உள்நாட்டு பணக்காரர்களின் பணப்பைகளை நிறைப்பதற்காக ஏழை மக்களை பலிகடாக்களாக ஆக்குவதற்கு சுயநலங் கொண்ட அரசியல் கட்சிகள் தயாராய் உள்ளன. போபாலைப் போன்று மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக் காத்திருக்கும் சில உதாரணங்களைப் பற்றிப் பார்ப்போம்.

நம் நாடெங்கிலும் இரசாயனத் தொழிற்சாலைகள் பல ஆயிரக்கணக்கில் இயங்கி வருகின்றன. அவற்றில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் கடும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றில் பலவும் முறையான அனுமதி இல்லாமலேயே இயங்கி வருகின்றன. நம் தமிழ்நாட்டில் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மாவட்டங்களில் கொடிய நச்சுத்தன்மை ஏற்படுத்தும் நிறுவனங்கள் பல உள்ளன. குறிப்பாக, கடலூரில் சிப்காட் தொழிற் பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளது. தொழிற்பேட்டைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் கெட்டுவிட்டது. 2008-இல் இங்கு ஆய்வு செய்த மத்திய அரசின் ‘நீரி சூழல் நிறுவனம்” இந்த ஆலைகளின் கழிவுகளால் புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது என அறிக்கை அளித்தது. நான்கு ஆண்டுகளாக சமுதாய சுற்றுச்சுழல் கண்காணிப்புக் குழு எடுத்த 12 மாதிரி ஆய்வுளில் அங்கு வெளியேறும் 25 வேதிக் கழிவுகளில் 12 கழிவுகள் புற்றுநோயை உண்டாக்குபவை எனத் தரிய வந்துள்ளது. அதேபோல் டால்மியாபுரம் சிமெண்டு ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில் மூளையைப் பாதிக்கும் காரியம், பாதரசம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காட்மியம், பெரிலியம், பேரியம் உள்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் இருக்கின்றன.

இதெல்லாம் போதாதென்று அணுக்கழிவுகளால் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வந்துவிட்டது இந்திய அமரிக்க ’123′ ஒப்பந்தம். இவ்வொப்பந்தப்படி, அமரிக்காவின் அணுசக்தி நிலையங்கள் கட்டும் தனியார் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக இந்தியாவில் பல புதிய அணுசக்தி நிலையங்கள் கட்டத் திட்டமிட்டுள்ளன. மக்களின் நலன்களை துச்சமாக மதிக்கும் அரசுகள், தனியார் பகாசுர நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாயுள்ளது. அணுவிபத்தின்போது அந்நிய நிறுவனங்களுக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாமல் அவர்களைக் காப்பாற்றுவதற்கே ‘அணுசக்தி பொறுப்பான்மைச் சட்டம்’ என்ற சட்ட மசோதாவைக் கொண்டுவந்து, தங்களின் எஐமான விசுவாசத்தைக் காட்டுகிறது இந்திய அரசு. இச்சட்டப்படி அணுவிபத்து ஏற்படும் போது, இழப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அணு உலையை இயக்குபவர் ரூ.500 கோடி இழப்பீடு கொடுத்தால் போதும் என கூறப்பட்டுள்ளது. அணு விபத்தின்போது இழப்பீடுக்கான உச்சவரம்பை இந்தியா ரூ.500 கோடி என நிர்ணயம் செய்திருப்பது பைத்தியக்காரத்தனமானது. அமொpக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், தென் கொரியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் இந்தியாவைப் போன்று எந்த உச்சவரம்பையும் வைத்துக் கொள்ளவில்லை. மேலும் இந்த 500 கோடி இழப்பீடு என்பது மிக மிகக் குறைவு. இந்தியச் சட்டத்திற்கு நேர்மாறாக, ஜப்பானில் ஒரு சட்டம் உள்ளது. அதன்படி, அணுசக்தி விபத்து ஏற்பட்டால் அதற்குக் காரணமான நிறுவனம் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையை அரசு நிர்ணயம் செய்திருக்கின்றது. அந்தத் தொகை ரூ.130 பில்லியன் கோடி. இது இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ள ‘உயர்ந்தபட்ச இழப்பீட்டு தொகையை” விட பல ஆயிரம் மடங்கு அதிகம். அணு விபத்தென்பது காலங்கடந்து பாதிப்புகள் எற்படுத்தும். ஆனால், இச்சட்டபடி விபத்து ஏற்பட்ட பிறகு 10 ஆண்டுகள் கழித்து எற்படும் எந்த பாதிப்பிற்கும் நிறுவனம் பொறுப்பாகாது (விதி 18). இதன்மூலம் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் மனிதர்களின் இழப்பீடு கோரும் உரிமையைப் பறிக்கிறது இச்சட்டம். இது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். தீர்ப்பை எதிர்த்து எந்த இந்திய சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யமுடியாது (விதி 35). பல்வேறு எதிர்ப்புகளால் இச்சட்ட மசோதா இன்று சட்டமாகாமல் இருக்கிறது. ஆனால் மன்மோகன்-சிதம்பரம் கும்பல் இதை எப்படியாவது அடுத்ததேர்தலுக்குள் சட்டமாக்கிவிட முயற்சிக்கும்.

போபால் தீர்ப்பைப் பார்த்து விழிப்படைந்து தமிழகத்தில் கூடங்குளம் அணு உலை பணிக்கு மக்களின் எதிர்ப்புக்குரல் வலுவடைந்துள்ளது. மக்களின் எதிர்ப்பு குரல், தெரு நாடகங்களாகவும், பொதுக் கூட்டங்களாகவும் கிராமந்தோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கூடங்குளத்தில், விரிவாக்கமாக 3 புதிய அணு உலைகள் கட்ட அரசு திட்டமிட்டுவருவது மக்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏதாவது விபத்து நடந்தால் பக்கத்திலுள்ள 6 மாவட்டங்களின் மக்களை வெளியேற்றும் அவசரத் திட்டம் பற்றி ஏதும் அம்மாவட்ட ஆட்சியர்கள் கேள்விபட்டதாகக்கூட அறிய முடியவில்லை. இதுதான் இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் மீது வைத்துள்ள பற்று.

போதும் இதுவரை நாம் காத்து வந்த மௌனம். போபால் பேரழிவிலிருந்து நாம் பெற்ற படிப்பினை என்ன? 1984-இல் ஒரு ஆண்டர்சன் மக்களை கொன்றான். இப்போது பல ஆயிரக்கணக்கான ஆண்டர்சன்கள் தம் இலாப வெறிக்காக நம்மைக் கொல்ல அலைந்து கொன்டிருக்கிறார்கள். இது செயல்படுவதற்கான நேரம்.

Tuesday 9 October 2012

இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக அருந்ததி ராயின் அறிக்கை (தமிழ் வடிவம்).




கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை எதிர்த்துப் போராடும் இடிந்தகரை மக்களோடு நான் முழு நல்லாதரவோடு நிற்கிறேன். ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்ட போது நான் அங்கு இருந்தேன். அந்த பேரழிவுக்கு பிறகு அணு சக்தியை பயன்படுத்தும் எல்லா நாடுகளும் தங்களது கொள்கையை மாற்றிக் கொள்ள போவதாக அறிவித்தன. இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் அறிவித்திருந்தன.

அன்றாடக் கழிவுகளை கூட அகற்றுவதற்கு வக்கற்றது நமது அரசாங்கம். தொழில் கழிவுகளையும் நகரக கழிவுகளையும் பற்றி சொல்லவே வேண்டாம். அணு உலைக் கழிவுகளை கையாளத் தெரியும் என்று அது தைரியமாகச் சொல்வதை எப்படி நம்புவது? இந்தியாவில் அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்வதையும் எப்படி நம்புவது? போபால் விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த யூனியன் கார்பைடோடு (இப்போது டௌ கெமிக்கல்) கை கோர்த்த அரசு இது என்று நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் அணு பேரழிவை எப்படிப்பட்ட நிவாரணமும் சரிப்படுத்திவிட முடியாது. கூடங்குளத்தில் நடந்து கொண்டிருப்பது வளர்ச்சியின் பெயரால் ஒரு கிரிமினல் குற்றம் என்று நான் நம்புகிறேன் – அருந்ததி ராய்

Sunday 9 September 2012

ஜாதியின் பெயரால் - முத்துகிருஷ்ணன்





1991 இல் அம்பேத்கர் நூற்றாண்டு விழா மத்திய அரசால் பெரும் கொண்டாட்டமாக நடத்தப்பட்டது. மத்திய அரசு அம்பேத்கரின் நூற்றாண்டை அவ்வாறு கொண்டாடியதற்கு ஒரே காரணம் அப்பொழுது இந்திய பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்கள் அம்பேத்கரின் அருமை அறிந்தவராக இருந்ததுதான். மத்திய அரசால் பெரும் தொகை செலவில் அம்பேத்கர் ஃபவுண்டேசன் தொடங்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கரின் எழுத்துக்கள் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.

மலிவு விலையில் அந்தத் தொகுதிகள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டது. இந்தத் தொகுதிகளின் வழியாக புதிய வெளிச்சம் ஒன்று விளிம்பிலிருந்து மையம் நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது. அது தலித் விடுதலை, தலித் உரிமை, தலித் இலக்கியம், தலித் கட்சிகள் எனப் பல வடிவங்களில் மலர்ந்தது. அம்பேத்கர் நூற்றாண்டின் ஒரு பகுதியாக அம்பேத்கரின் உருவச்சிலை முதல் முறையாக பாராளுமன்றத்துள் நுழைந்தது. சிற்பிகள் கோவிலுக்குள் நுழைய முடியாதுதானே. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தைக்கு சுதந்திரம் பெற்று 44 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் இடம் இல்லை என்பது வெட்கித் தலைகுனிய வைக்கும் விஷயமின்றி வேறு என்ன.

அதே வேளையில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கிய முடிவுகளில் ஒன்று அரங்கேறியது. அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள், பத்தாண்டுகள் தூசு படிந்திருந்த மண்டல் அறிக்கைக்கு உயிர் கொடுத்தார். இந்திய அதிகார வர்க்கம் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளுக்கு நிரந்தர சவப் பெட்டியைத் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத திருப்பமாக மண்டல் பரிந்துரைகள் அமலுக்கு வந்தது. வி.பி.சிங் மண்டலை கையில் எடுத்த அதே நேரம் அத்வானி கமண்டலத்தைக் கையில் தூக்கி ரத யாத்திரையைத் தொடங்கினார்.  தேசமெங்கும் சாதிய, மதக் கலவரத்தை தனது வன்ம உரைகள் மூலம் அரங்கேற்றினார். மண்டல் பரிந்துரைகள் சமூகத்தில் பெற்ற கவனத்தைத் திசைதிருப்ப உச்சபட்ச செயலில் களமிறங்கியது ஹிந்து தீவிரவாதிகளின் படை. அவர்கள் ராமருக்கு கரசேவை செய்யப் போகிறோம் எனக் கூறிக்கொண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதியைக் களங்கப்படுத்தினர், தரைமட்டமாக இடித்தனர். நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு, அது முதல் இந்திய உயர் சாதி சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அங்கமாக அது நிலைத்துவிட்டது.

ஒவ்வொரு தினமும் இரு தலித்துகள் கொல்லப்படுகிறார்கள், ஒவ்வொரு தினமும் மூன்று தலித் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள், ஒவ்வொரு 18 நிமிடமும் ஒரு தலித்துக்கு எதிரான தாக்குதல் நடத்தப்படுகிறது, ஒவ்வொரு வாரமும் 5 தலித்துகளின் சொத்துகள் சேதப்படுத்தப்படுகிறது, வீடுகள் முற்றாக எரிக்கப்படுகிறது. இப்படியான ஒரு பெரும் பட்டியல் நீண்டு செல்கிறது. இது நாம் தயாரித்த அறிக்கை அல்ல, மத்திய அரசின் தேசிய கிரிமினல் ஆவணக் காப்பகம் வெளியிடும் விபரங்கள் தாம் இவை. இந்தியாவில் தலித்துகள், சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளில் காவல் நிலையம் சென்று பதிவு செய்யப்படும் வழக்குகள் 5% கூட இருக்காது. அப்படிப் பதிவு பெற்ற வழக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை தான் மேற்கூறிய புள்ளிவிபரங்கள், அப்படியானால் நாம் ஊடகங்கள் வழி அறியும் சம்பவங்கள், வன்கொடுமைகள் வெறும் குறியீட்டு அளவிலானவையே.

கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பம் பட்ட துயரம், உத்தப்புரத்தில் மொத்த தலித் குடும்பங்களின் மனக் குமுறல்கள், நீதி மறுக்கப்படும் குஜ்ஜர் சமூகம், நாடு முழுவதும் மலம் அள்ளும் கோடிக்கணக்கான தலித்துகள், திண்ணியத்தில் வாயில் மலம் திணிக்கப்பட்டவர்கள் என நாம் அறிவது பெரும் விருட்சத்தின் மேற்பரப்பில் உள்ள மரப்பட்டையைப் போன்றதே.

இந்தியாவின் நிரந்தர இரண்டாம் குடிகளாக ஆக்கப்பட்டவர்களை ஊடகங்கள் எப்பொழுதும் கண்டுகொள்வதில்லை . இவர்களைத் தாண்டி எங்கு நோக்கினாலும் இதை ஒத்த கதறல்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அது சுந்தூர், கீழ்வெண் மணி, கம்பளப்பள்ளி, பெல்ச்சி, சென்னகரம்பட்டி, எறையூர், தாமிரபரணி, விழுப்புரம் முருகேசன் - கண்ணகி, மேலவளவு, பாப்பாபட்டி - கீரிப்பட்டி, பில்கிஸ் பானு எனப் பெயர் மட்டுமே மாறித் திகழ்கிறது. இந்தப் பட்டியல் நிரம்பிய காகிதச்சுருள் ஊர் மந்தைகளில் தொட்ங்கி சேரிகள் வழியாக காடுகளுள் புகுந்து, செசன்ஸ் நீதிமன்றங்களில் இழைப்பாறிவிட்டு மீண்டும் கர்ஜித்து உயர் நீதிமன்றங்களின் வெங்காய கோபுரங்களை எக்காளம் செய்துவிட்டு, பெரு ஊடக நிறுவனங்களின் நுழைவாயில்களில் போதை ஏற்றிக் கொண்டு மிகச் சில சமயங்களில் மட்டுமே உச்ச நீதிமன்றங்களின் கடவாய்ப் பல்லில் சிக்கிக் கொள்கிறது. அப்படி நீதிமன்றங்கள் கண்டிப்பான மொழியில் சுடும் சொற்களால் பேசினாலும் சிறிது நேரம் வாத்தியார் முன்பு கை கட்டி நிற்கும் மாணவனைப் போல, வாத்தி தலை மறைந்தவுடன் கும்மாளம் போடத் தொடங்கிவிடுகிறது.

1993ல் பம்பாய் தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரங்கள் நடந்த பின் அதனை விசாரிக்க நியமிக்கபட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷ்னின் பரிந்துரைகள் மீது பல்லாண்டுக்காலத் தூசு படிந்துள்ளது. அந்த கமிஷன் தனது ஆள்காட்டி விரலை துல்லியமாக பால் தாக்க்கரேயின் மீது நீட்டி உள்ளது. அவர் அவரது வாழ்நாளிலாவது கைது செய்யபட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவாரா? 1984ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டுவுடன் 7000த்திற்கும் மேற்பட்ட சீக்கியர்களைல் கொன்று குவித்தவர்களை சட்டம் என்ன செய்தது? போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கபட்ட லட்சகணக்கானவர்களுக்க்கு இன்று வரை ஏன் நியாயம் கிடைக்கவில்லை? நியாயத்தை விட்டு தள்ளுங்கள் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட வழங்கவில்லை, லட்சக்கணக்கானவர்களை கொன்று குவித்த யூனியன் கார்பைடு அதிபர் ஆண்டர்சனை சிறையில் தள்ளாமல் அவருக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு பதமஸ்ரீ வழங்க முயன்றதை எங்கு சென்று முறையிடுவது. வெறும் 1450MW மின்சாரத்திற்காக கட்டபட்ட நர்மதா அணையால் பெயர்த்தெறியப்பட்ட லட்சக்கணக்கானவர்களின் வாழ்வுடன் விளையாடும் மூன்று மாநில அரசுகளுடன் நீதிமன்றம் ஏன் கொஞ்சி உறவாடுகிறது. கோத்ராவில் 2000 இஸ்லாமியர்களைக் கொன்றவர்களே விரிவான ஆதாரபூர்வமான வாக்குமூலங்கள் வழங்கிய பின்னும் ஏன் ஹிந்து தீவிரவாதிகள் இன்னும் சுதந்திரமான உலவ அனுமதிக்கபட்டிருக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்தவர்கள் எப்படி இன்று வரை பகிரங்கமாக வன்ம உரைகளை விதைக்க அனுமதிப்பட்டிருக்கிறார்கள்?

இந்தியாவை உலுக்கிய கயர்லாஞ்சி வன்கொடுமையில் தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் இது ஒரு சாதாரணக் கொலை என வழக்கை முடிக்கிறது, இதற்கு ஜாதிய மேலாதிக்கத்திற்கும் தொடர்பு இல்லையாம். சுரேகாவும், பிரியங்காவும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை, நிர்வாணப்படுத்தப்ப படவில்லை என்கிறது.

1992ல் பன்வாரி தேவி அவரது கிராமத்தை சேர்ந்த 5 உயர் ஜாதி ஆண்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார், அவர் துணிச்சலாக காவல் நிலைய்த்தை அணுகியும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் படிகளிலும் ஏறினார். 1995ல் நீதிமன்றம் இந்தியாவின் உச்சபட்ச உதாரணமாகத் திகழும் தீர்ப்பினை வழங்கியது. இப்படி ஒரு வன்புணர்வு பன்வாரி தேவிடின் மீது நிகழ்ந்திருக்க வாய்பே இல்லை, ஒரு உயர்ஜாதி ஆண் தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணுடன் புணர்வது சாத்தியமே இல்லை என்று தீர்ப்பளித்தது.இந்த வழக்கின் சாயலுடன் தான் பெரும்பாலான தீர்ப்புகள் வருகின்றன. விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் அதனை மட்டுமே நம்மால் கொண்டாட இயலாது.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் பயனாக சிறு சதவிகித தலித்துக்கள் அரசு பணிகள் நோக்கி சென்றுள்ளனர். இதை கூடத் தாங்க இயலாதவர்கள் பல தவறான தரவுகளை தயாரித்து சமூக மனநிலையை தலித்துகளுக்கு எதிராக அமைத்தவண்ணம் உள்ளனர். இவர்கள் தான் மண்டல் அமலான பொழுது அதற்கு எதிராக 1000த்திற்கும் மேற்பட்ட  தலையங்கங்களை  எழுதியவர்கள். ஆனால் இன்றும் தலித்துகளில் பெரும்பான்மையானவர்கள் கொத்தடிமைகளாக உள்ளன, 50% தலித் குழந்தைகள் ஊட்டக் குறைபாட்டுடன்  உள்ளன, 12% தலித குழந்தைகள் 5 வயதைக்கூட எட்டுவதில்லை. இவை எல்லாம் இந்திய அரசின் புள்ளிவிபரகளே. இந்திய ஜனத்தொலையில் 27.5% மாகத் திகழும் தலித்துகள், ஆதிவாசிகள், பழங்குடிகளின் நிலை இதுவே. 15% சிறுபான்மையினரின் நிலைமையும் இதுவே. இது எப்படி இருக்க 10% வளர்ச்சி யாருடைய வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி?? ஊடகங்கள் உருவாக்கும் போலியாஅன ஒளிரும் பிம்பங்களைப் பார்த்து கண்கள் குருடாய் திரிபவர்களுக்கு நாம் எங்கு சென்று சிகிச்சை அளிப்பது?

ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கபடும் நாடுகளில், நீதித்துறை தன் கடமையை செய்யத் தவறிய சமூகங்களில் என்ன நிகழ்ந்துள்ளது என்பது குறித்து உலக வரலாறும், சமகால நிகழ்வுகளும் நமக்கு எண்ணற்ற செய்திகளை, படிப்பினைகளை வழங்கிக் கொண்டேயிருக்கிறது. வரலாற்றின் நெடுகிலும் தொடர்ந்து நியாயம் மறுக்கபட்ட சமூகங்கள் கிளர்ந்து எழுந்ததை காண்கிறோம். அப்படியிருக்க இங்கு மட்டும் “அய்யா மனு போட்டுக் கொண்டேயிருங்கள்” என அறிவுரை கூறுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். அவர்கள் தங்களின் சொந்த நலன் பாதிக்கபடும் பட்சத்தில் இவ்வாறு அமைதியாக அறவழியில் மினு போட்டுக்கொண்டேதான் இருப்பார்களா? ஜனநாயகத்தின் அனைத்து குறைதீர்ப்புக் கருவிகளும் செயல் இழந்த பின்பு ஒரு குடிமை சமூகம் அடுத்து என்ன செய்ய வேண்டும்? கடந்த 20 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக பூர்வகுடிகளை அவர்களின் நிலங்களிலிருந்து பெயர்த்தெறிய எண்ணற்ற தீர்ப்புகளை இந்திய நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன. அவர்களுக்கு வழங்கபட்ட தற்காலிக உதவிகள் எவ்வகையிலும் அவர்களின் வாழ்வு சார் பிரச்சனைகளை தீர்க்காது. பிரச்சனைகளை அதன்  வேர்களுக்கு சென்று களையாமல் மேம்போக்கான, தற்காலிக தீர்வுகள் எந்த வகையிலும் பயனளிப்பவை அல்ல. இந்த தேசத்தில் அதிகார வர்க்கத்தின் அலட்சியங்கள், முன்முடிவுகள் மற்றும் மநுவின் வன்மம் நிறைந்த உடும்புப் பிடியினால்தான் தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும் உருவாகிறார்கள். இந்த கட்டுமானங்களின் வன்மத்தை நிர்மூலமாக்குவதுதான் இன்றைய செயல்பாட்டாளர்கள், போராளிகளின் இலக்காக இருக்க முடியும்.

இந்த சூழலில் பெரும் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் சமூகத்தின் மனதை மந்தமாக மாற்றி வருகின்றன. கல்வி கற்ற சமூகம்தான் ஆகச் சுயநலமான ஒரு பொறுப்பற்ற மந்தையாக மிச்ச சமூகத்தையும் நுகர்வு, மற்றும் ஜாதிய வைரஸ் கிருமிகளைப் பரப்பி சீரழித்து வருகின்றது. அரசு வேலை, வாழ்க்கை உத்திரவாதங்கள், தொழில், வங்கி இருப்பு, சொந்த ஐந்து செண்டு வீடு, என வாழும் இவர்கள் தான் தங்கள் வீட்டு திண்ணைகளிலும் சொந்த கிராமத்திலும் ஜாதியத்தின் பெரும் நாற்றாங்காலை செல்லமாய் வளர்த்து வருகிறார்கள். சொந்த ஜாதிஜ்ஜுள் கச்சிதமாய் குடும்ப உறவுகள் மற்றும் திருமணம், ஊர்க் களரிகளில் சென்று ஜாதியச் செருக்கைக் காட்ட பணத்தை சூறைவிடுவது,  மகனுக்குக் காதுகுத்து - மகளுக்கு சடங்கு நடத்துவது, ஜாதிய திருமணத் தகவல் மையம் நடத்துவது, ஆவணி ஆவிட்டத்துக்திற்கு பூநூல் மாற்றுவது என, சீரழிவுகள் கச்சிதமாகச் செய்து ஜாதிய சங்கிலியை அறுபடாமல் பாதுகாத்துவிட்டு, அதையெல்லாம் அவ்வளவு எளிதாகத் தகர்த்துவிட முடியாது என அறிவியல் பூர்வமாக விளக்கமும் அளிப்பர். அவர்களின் ஜாதியும், பூநூலும், குடும்பமும் சொந்த விஷயமாம் - அதில் அவரது நண்பர்கள், சக ஊழியர்கள், இயக்கத்தார் என எவரும் நுழைய இயலாது. இதில் கூத்து “ ஜாதி ஒழிந்தால் தான் சார் எல்லாம் சரியாகும்” என அசந்தால் பொது இடத்தில் அவர் பெரும் உரையே நிகழ்த்தக்கூடும். குறிக்கோள் அற்ற ஒரு கல்விமுறையால் விழைந்த பேராபத்து இது.

லஞ்ச ஒழிப்பு, திவிரவாத ஒழிப்பு என்றால் மைக் செட் கட்டிக் கொண்டு வரும் இயக்கங்களின் கூட்டமைப்புகள், ஜாதி ஒழிப்பு - ஜாதிய நீக்கம் என்றால் “ சாரி சார் ராங் கால்” என உரையாடலை பட்டெனத் துண்டித்துக் கொள்கிறார்கள். முற்போக்கு இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் கூட ஜாதி ஒழிப்பை தங்கள் இயக்க அளவில் கூட விவாதப் பொருளாக மாற்றில் தங்களின் கைகளில் எடுக்காததுதான் இந்த நூற்றாண்டின் பெரும் சோகம். ஜாதி ஒழிப்பு போன்ற ஒன்றை கட்டாயமாக நாம் நம்மிலிருந்து தான் தொடங்க வேண்டும். இந்திய சூழலில் ஜாதி தான் இங்கு சமூகத்தை பின்நோக்கி இழுக்கும் ஒரு பெரும் ஆற்றல் அதனை முறியடிக்காமல் இங்கு அனைவருக்குமான ஒரு அமைதியுடன் கூடிய சமதையான வாழ்வு, சுகவாழ்வு சாத்தியமில்லை. அத் திசையில் நாம் ஒரு பெரும் தோழமையை உருவாக்க முனைய வேண்டும்.

Friday 31 August 2012

என்றும் இளமையோடு வாழ, ஒரு எளிய வழி!


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ..

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

Wednesday 29 August 2012

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த – காவிரிபூம்பட்டினம் !






“காவிரிப்பூம்பட்டினம்” – கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் !

கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்! ஆன
ால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !!தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த “காவிரிப்பூம்பட்டினம்”. பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்!! காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “சிலப்பதிகார” நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!
இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.
ஒன்று கடலோரம் இருந்த “மருவுர்பாக்கம்”
மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த “பட்டினப்பாக்கம்”.
இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது! இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது!! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்!! பகல் அங்காடியின் பெயர் “நாளங்காடி”, இரவில் நடப்பது “அல்லங்காடி” !!

ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது! இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்! இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் !

பட்டினப்பாக்கம்:
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், ஜோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் !!

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன
(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்!! நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது !!

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் “சுனாமி” வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.

மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் “இந்திர விழா” கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் “சிலப்பதிகார அருங்காட்சியகம்” ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது! இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அறிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது!! தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.

வரலாற்றுத் தேடல் தொடரும் !!

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்...




      தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் ‘அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர்.            
     
         தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.

         புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.

சிந்துவெளி நாகரிகம்:
      சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:

1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.

2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.

3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.

4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.

5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.

6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.

7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)

9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.

10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review – An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )

11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.

12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.

‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.
கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express – Madras – 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.
அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.

      சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (ndian Express – Madras – 5 August 1994)
Fr. ஹீராஸ் ‘Studies in Proto – Indo – Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

     தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. ‘சொல்லாய்வுஃ. ‘பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.
   
      சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

      பூம்புகார் ஆய்வுகள் குறித்து ‘குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் ‘சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ”கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”
புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்
‘நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

      சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

         புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
       
      சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.
எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

     சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

     பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.
எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). …ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

நதிகள், மலைகளின் பெயர்கள்
      நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.
பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் ‘பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் ‘குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

          தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

            இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

           இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து ‘குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

2 – பூம்புகார்
         அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.
      ”நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

         இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ”மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.

        கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ”தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ”ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
         
         இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ”சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ”லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ”சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.

          இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ”ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

       சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
         
         மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ”அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

           மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்
1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 – 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் – இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).
19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

       இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

       ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.
மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

source:  பஃறுளி முதல் யூப்ரடீசு வரை

Friday 24 August 2012

‘கடலோடிகளின் முன்னோடிகள் தமிழர்களே’ orrisa balu






இன்றைக்கும் ஓடாவி என்ற கப்பல் கட்டும் வயதான மூப்பன்கள் தமிழகத்தில் உள்ளனர். மிகச் சிறப்பான கப்பல்களை, படகுகளைக் கட்டிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். தூத்துக்குடியில் இன்றைக்கும் 35 பாய்மரக் கப்பல்கள் உள்ளன. நான் அவற்றிலும் பயணித்து இருக்கின்றேன். பண்டைக் காலத்திலேயே, 2500 டன் எடை கொண்ட கப்பல்கள் தமிழகத்தில் இருந்து உள்ளன. ஆங்கிலேயர்கள் வந்து ஒரு சட்டத்தைப் போட்டதால் தான், இந்தக் கப்பல் கட்டும் தொழில் ஒடுங்கிப் போயிற்று. இந்தச் செய்தியை, ‘ஓடாவி’ எனும், படகு கட்டும் குடும்பத்தாரிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.


ஆங்கிலேயர்களுடைய நீராவிக்கப்பல்களின் வளர்ச்சிக்கு, இந்த பாய்மரக் கப்பல்கள் தடையாக இருந்தன. அவர்களிடம் 400 டன் எடை கொண்ட கப்பல்கள் தாம் இருந்தன. எனவே, ‘இந்தியர்கள் கப்பல் கட்டக் கூடாது ; இந்தியர்கள் மாலுமிகளாக இருக்கக்கூடாது’ என, 1789 ஆம் ஆண்டு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். உண்மையில், 1802 ஆம் ஆண்டு வரையிலும், இந்தியாவில் கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. 1802 ஆம் ஆண்டில் தான் ஆங்கிலப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. ஆனால், 1780 இலேயே, ‘மரைனர்ஸ் ஆக்ட்’ என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தியக் கப்பல் கட்டும் தொழிலை முடக்கினார்கள்.


தமிழர்கள் ஆமைகளைப் பின்தொடர்ந்து சென்றார்கள் என்கிறபோது, ‘முகவை, மிதப்பு, தெப்பம்’ என படகுகளில் பயணித்து, அதற்குப்பிறகு, பாய்மரக்கப்பல்களைக் கட்டினார்கள். இன்றைக்கும், நாகப்பட்டினத்திலும், கடலூரிலும், ‘மஞ்சு’ என்ற பெயரில் ஐந்து பாய்மரக் கப்பல்கள் உள்ளன. மஞ்சு,வத்தை, கோட்டியா என்பனவெல்லாம் பலவகையான கப்பல்கள். ‘கொட்டியா’ என்றால், கடலில் புலி போல வேகமாகச் செல்லுகின்ற கப்பல். கொட்டியா என்றால், இலங்கையில் புலி என்று பொருள். அது சோழர்களைக் குறிப்பது. ‘மஞ்சு’ என்றால், மேகம் போல விரைந்து செல்லுகின்ற கப்பல் என்று பொருள். இப்படி, ஒவ்வொரு வகையான கப்பலுக்கும் ஒவ்வொரு பெயர். அதாவது, அந்தக் கப்பல் எந்த வழியில் செல்கின்றதோ, அதை வைத்துப் பெயர் சூட்டுவார்கள்.


தூத்துக்குடியில் இருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பல்கள், இலட்சத்தீவுகள், மாலத்தீவுகளுக்குப்போகின்றன. 20 கப்பல்கள் அந்தமான் போகின்றன. அங்கிருந்து பர்மாவுக்கும் போய் பொருள்களை இறக்கி விட்டு, அங்கிருந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு வருகின்றார்கள். ஆகவே, நம்முடைய கடலோடிகளின் கப்பல் ஓட்டும் திறமை இன்றைக்கும் மங்கி விட வில்லை. அதை நாம் தான் முயன்று, அடுத்த தலைமுறைக்கு, இந்தத் தொழில் நுட்பங்களைக் கொண்டு செல்ல வேண்டும். நம்முடைய தொன்மை என்ன? எத்தனையோ பேர் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள் என்றால், நாம் ஒரு வேலை செய்கின்ற சமூகமாகத்தான் இருக்கின்றோமே தவிர, ஆளுமைமிக்க சமுதாயமாக உருவெடுக்க வில்லை. இயற்கையின் பயன்பாடுகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள் தாம். தேங்காய், மாங்காய், பலா, தேக்கு, புளியமரம் ஆகியவற்றின் பயன்பாடுகள் மற்றும், இயற்கை, மரம், செடி, கொடிகள், கடல், வேளாண்மைஅனைத்திலும் உலகுக்குத் தமிழர்களின் பங்களிப்பு உள்ளது. சுறா வேட்டை ஆடினார்கள், சங்கு, முத்து, கடல் பாசி குளித்தல் இவையெல்லாம், உலகுக்குத் தெரிய வேண்டும்.


இராமநாதபுரம் மாவட்டத்துக்கு, ‘முகவை’ என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு, ‘மிதப்பு’ என்று தான் பொருள். அந்த மாவட்டத்தில் மட்டும், 5000 கப்பல்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதிக்கும் நிறைய கப்பல்கள் இருந்தன. தமிழர்கள் தொடக்கத்தில்,முகவை, மிதப்பு, தெப்பம் என்ற சிறிய கப்பல்களைக் கட்டிப் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அதைத்தான் பின்னர் பாய்மரக் கப்பல்களாக மாற்றினார்கள். உலகத்திலேயே முதன் முறையாக பாய்மரத்துணிகளை நெய்தவர்கள் தமிழர்களே. ‘வாதிரியார்’ என்ற ஒரு சமூகத்தினர், தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து வேப்பலோடை வரையிலு ம் , இன்றைக்கும் இருக்கின்றார்கள். அவர்கள் தாம், பாய்மரத் துணிகளை நெய்தவர்கள். புளியங்கொட்டையை மாவாக அரைத்து, அதில் பருத்தித் துணியைத் தோய்த்து, பாய்மரத் துணியாக மாற்றினார்கள். அந்தத் துணிகள் எளிதில் கிழிந்து போகாது; எத்தகைய சூறைக் காற்றையும் எதிர் கொண்டு நிற்கும். அப்படி, 20,000 கப்பல்களுக்கு அவர்கள் பாய்மரங்கள் செய்து இருக்கின்றார்கள். இன்றைக்கு அது வெறும், 35 கப்பல்களாகச் சுருங்கி விட்டது. அந்த சமூகமே நசிந்து, பனை ஏறுதல் உள்ளிட்ட வேறு தொழில்களுக்குப் போய் விட்டார்கள். நிறையப்பேர் வெளியேறிப் போய் விட்டார்கள். தமிழகத்தில் பட்டு சாலியர், செளராஷ்டிரர் போன்ற வெளி மாநில நெசவு சமூகங்கள் உள்ளன. ஆனால், வாதிரியார்கள், தமிழகத்துக்கே சொந்தமான, பருத்தி நெசவாளர்கள். அவர்கள் முன்பு, ‘மாதறியார்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். அதாவது, பெரிய தறிகளை வைத்து இருந்தார்கள். அதில் இவர்கள் நெய்த பாய்மரத் துணியைத்தான், கிரேக்கர்கள் உடையாக அணிந்து கொண்டார்கள். காரணம், அது குளிருக்கு இதமாக இருந்தது. அந்த உடைக்குப் பெயர் ‘பல்லன்’.


அதேபோல, பலவகையான மரங்களைப் பயன்படுத்தி, பெரிய பெரிய கப்பல்களைக் கட்டினார்கள். 2500 டன் எடை கொண்ட கப்பல்கள் கூட இருந்தன. ஆங்கிலேயர்களுடைய 450 டன் எடை கொண்ட கப்பல்களை, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்து செய்ய வேண்டும். ஆனால், நம்முடைய கப்பல்களை, 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்து செய்தாலே போதும். ஐரோப்பியர்கள் காற்றின் திசையைக் கணித்து, கப்பலைச் செலுத்தினார்கள். ஆனால், தமிழர்கள் கடல் நீரோட்டத்திலும், எதிர்காற்றிலும் கூடக் கப்பலைச் செலுத்தும் திறமையானவர்களாக இருந்தார்கள். பலத்த காற்று வீசும் போதும் கூட, அதற்கு அஞ்சாமல், விரைவாகப் போய்ச் சேருவதற்கு, அந்த நாள்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதாவது, 200 கிலோமீட்டர் வேகத்தில் அடித்த
காற்றிலும் கூட, பாய்மரங்களை அதற்கு ஏற்றவாறு கட்டி படகைச்செலுத்தினார்கள்.


ஒரு ஆஸ்திரேலியா ஆய்வாளர் இந்தியாவுக்கு ஆய்வுகள் செய்ய வருவதாக இருந்தால், இங்கே அவர்களுக்கான வழிகாட்டிகள் (Guide) இல்லை. நம்முடைய பங்கு அளிப்புகள், நமக்கு மட்டுமே தெரிந்து இருந்தால் போதாது. உலகத்துக்கும் தெரிய வேண்டும். தென்னை நாரில் இருந்து கயிறு திரித்தோம். அந்த நாள்களில் கப்பல்களில் கயிறுதான் முக்கியப் பங்கு வகித்தது. அதைக் கொண்டுதான், பெரிய பெரிய பாய் மரங்களைக் கட்டினார்கள். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ‘ஆழ்கடல் பண்பாட்டு ஆய்வுகள்’ (Underwater Cultural Heritage Research ) என்று ஒரு துறையே உள்ளது. ‘கடல் தொல்லியல் ஆய்வு’ (Marine Archaeology) என்றும் சொல்வார்கள். அவர்கள், சங்கு பற்றி ஆய்வு செய்தார்கள், கல் நங்கூரத்தைப் பற்றி ஆய்வு செய்தார்கள். ஆனால், பாய்மரங்களைப் பற்றி ஆய்வு செய்ய வில்லை. பூம்புகாரைப் பற்றி ஆய்வு செய்தார்கள். அதுவும் வெளி வரவில்லை. குமரிக் கண்டத்தைப் பற்றி எந்த விதமான கடல் ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை.

Monday 20 August 2012

குஜராத்தில் மீனவர்கள் நலனுக்காக புதிய மாவட்டம்




குஜராத்தில் மீனவர்களுக்கென புதிய மாவட்டம் ஒன்றை முதல்வர் ந‌ரேந்திரமோடி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்புதிய மாவட்டம் உதயமாகிறது. குஜராத்தில் ஜூனாகத் மாவட்டத்தை இரண்டாக பிரித்து 6 தாலுகாக்களை உள்ளடக்கிய கிர்-சோம்நாத் என்ற புதிய மாவட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் கிர்-சோம்நாத் மாவட்டம் உதயமாகும் என முதல்வர் ‌நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி மீனவர்களின் நலன் குறித்து, தலைமைசெயலர் தலைமையில் நடந்த உயர்மட்ட குழுக்கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மோடி பேசுகையில், கிர்-சோம்நாத் மாவட்டம் சாகர்கேது பிரிவைச் சேர்ந்த மீனவர்கள் அதிகம் உள்ள பகுதியாகும் இதனை கருத்திற்கு கொண்டே புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.. எனவே கிர்-சோம்நாத் மாவட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி துவங்கும் எனவும், பாகிஸ்தானில் சிறையில் வாடும் இந்திய மீனவர்களின் குடும்பங்களுக்கு தினசரி வழங்கப்படும் உதவித்தொகையினை ரூ. 50 -ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தியும், மாநிலம் முழுவதும் உள்ள மீனவர்களுக்கு ரூ. 200 கோடியில் வாட் வரியின் கீழ் டீசல் மானியம் வழங்கப்படும். இதன் மூலம் 11 ஆயிரம் மீன்பிடி படகு வைத்துள்ளவர்கள் பலன் அடைவர்.இவ்வாறு மோடி கூறினார்.


Gujarat: Modi announces formation of new district

PTI, Ahmedabad, 14 August: Gujarat Chief Minister Narendra Modi has announced the formation of a new Gir-Somnath district along with a slew of other measures for the fishermen community there.
In an attempt to woo the fishermen community ahead of the state elections, Modi yesterday announced an increase of daily allowance from Rs 50 per day to Rs 150, for families of fishermen who are lodged in Pakistani jails.
“A new district will be formed soon and will be called Gir-Somnath and will have six talukas,” Modi said at the Sagarkhedu fishermen community meet held by the state government in the Somnath temple town of Junagadh district in Saurashtra.
He announced the constitution of a high-level committee headed by the chief secretary to form the new district. The new Gir-Somnath district is likely to be formed on January 26, next year.
At present, Gir and the famous temple town of Somnath are in Junagadh district of Saurashtra region of the state. Six talukas of Junagadh will form the new district of Gir-Somnath.
Other announcements by Modi include a Rs 200-crore diesel subsidy on VAT for nearly 11,000 mechanised boats to be borne entirely by the state government.
He announced setting up of a new fishing port at Sutrapada and future development of other fishing ports in the Saurashtra coast, from Jafrabad in the east, to Bhadeli and Okha in the west.
Under Mission Mangalam Project, he announced a plan to set up 5,000 ‘sakhi mandalis’ to provide training and bank linkage to women to grow sea-weed for economic empowerment.
He laid the foundation stone for four water supply and underground sewer projects for Veraval, Kodinar and Una towns costing Rs 228 crore.

Tuesday 26 June 2012

மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!



மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள “மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா” முடக்கிப் போடப் போகின்றது.

தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்து, ஆழ்கடலில் நெடுந்தொலைவு சென்று நம் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களால்தான், இந்தியாவின் புரதத் தேவையில் பாதியளவு நிறைவு செய்யப்படுகிறது. இம்மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள “மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா” முடக்கிப் போடப் போகின்றது.

மீன் பிடித் தொழிலில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தை வகிக்கும் தமிழ்நாட்டிலுள்ள 2.5 லட்சம் மீனவர்கள், 6200 மீன்விசைப் படகுகள், 50 ஆயிரத்து 360 பாரம்பரியக் கலன்களைக் கொண்டு அண்மைக்கடல், தூரக்கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நம் நாட்டின் மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்கென ’70-களில் நீலப்புரட்சித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தின்படி, விசைப்படகுகள் வாங்கக் கடனுதவி, டீசலுக்கு மானியம் போன்றவை கடந்த 35 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா, விசைப்படகுகள் மற்றும் பாரம்பரியப் படகு வகைகளுக்கிடையே உள்ள பாரதூரமான வேறுபாடுகளையோ, அவற்றின் மீன்பிடித் திறன்களையோ கருத்தில் கொள்ளாமல் அனைத்தையும் “மீன்பிடிக் கலன்” என ஒரே வார்த்தையில் வரையறுத்து, அனைவரையும் மீனவர்கள் என்று பொதுவில் வகைப்படுத்தி விதிமுறைகளையும் தண்டனைகளையும் வகுத்துள்ளது.

இச்சட்டப்படி, எல்லா வகைப் படகுகளும் மத்திய அரசிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறும்போதே பிடிக்கப்போகும் மீன் இனங்கள், எந்த இடத்தில் எத்தனை மாதங்கள் மீன்பிடிக்கப்படும், எந்த முறையில் மீன்பிடிப்பு நடக்கும் முதலான அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்; என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்; இதற்கான அனுமதிகளையும் மீனவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். பிழைப்புக்கா, வணிகத்துக்கா, ஆய்வுக்கா என்றெல்லாம் துருவிக் கொண்டிருக்கப் போகிறது அரசு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வரும் கடலை மீனவர்களிடம் இருந்து பிரித்து, அவர்களை நாட்டினுள் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளைப் போல கேள்வி மேல் கேள்வி கேட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பறித்தெடுக்கத் துடிக்கிறது, அரசு.

நாட்டின் பாதுகாப்புக் காரணத்தையோ அல்லது அரசு தீட்டும் கடல் அல்லது மீன்வளம் சார்ந்த திட்டத்தைக் காட்டியோ மீனவர்களுக்குத் தரப்படும் அனுமதிகளையும் சலுகைகளையும் ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. திடீரென சில குறிப்பிட்ட வகை மீனினங்களைப் பிடிக்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரப்படவுள்ள தண்டனைகளையும் இச்சட்டம் பட்டியலிட்டுள்ளது. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால், படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணையாகக் கட்ட வேண்டும். அப்படகில் இருந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சோதிக்க விடாமல் தடுப்பவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம்; பன்னிரண்டு கடல்மைல் தாண்டினால் ஒன்பது லட்சம் அபராதம்; படகின் சொந்தக்காரருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் உண்டு. மீன்களும் பறிமுதல் செய்யப்படும். படகின் நீளம் 12 மீட்டருக்கு மேல் இருந்தாலும் தண்டனை உண்டு.

கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்துவருவதால், 12 கடல்மைல்களைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் இன்றைய நிலைமையாக உள்ளது. விசைப்படகேறி, கடலில் நெடுந்தொலைவு பயணித்து, பல நாட்கள் தங்கியிருந்து, மீன் பிடிக்க ஒரு முறை போய்வரும் செலவு மட்டுமே ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இந்நிலையில், இவ்வாறான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவருமாயின் மீனவர்கள் இனி கடல் இருக்கும் திசைப்பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாது.

விதிமுறைகளை மீறும் மீனவரைக் கைது செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறித்தல் போன்றவற்றிற்கு இழப்பீடும் கோரமுடியாது. சந்தேகத்தின்பேரில் தவறான நபர்களைப் பிடித்தாலும், அவற்றிற்காக கடலோரக் காவல்படையைக் குற்றம் சாட்ட முடியாதபடிக்கு இச்சட்டம் கடலோரக்காவல் படைக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் கொடுக்கிறது.

ஏற்கெனவே மீனவர்களின் வாழிடங்கள் உல்லாச விடுதிகள் கட்டுவதற்கென கரையோரங்களிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தீவிரமாகியிருக்கும் உலகமயத்தினால் அதிகரிக்கும் கப்பல் போக்குவரத்து, கடலோர நகரங்களிலிருந்து தினமும் கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகள், சாக்கடைகள், அனல் மின்நிலைய சாம்பல்கள் போன்றவையும், ஏற்கெனவே இருந்த மீன்வளத்தை அழித்துக் கொண்டு வரும் சூழ்நிலையில், மீனவர்களின் மேல் இன்னுமோர் பேரிடியாக ஏன் இந்தக் கெடுபிடிச் சட்டம்?

இதற்கு இந்திய அரசு, “ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிற நாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும் மீன் பொருள்களையும் ஏற்றுமதி செய்வதென்றால், இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்க வேண்டுமென்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கிணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை” எனக் கூறுகிறது.

வேளாண்மைத் துறை அமைச்சகமோ, கடல்வழியாக பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதல்கள் போல இனி நடைபெறாமல் தடுக்க, நமக்கு உரிமையுள்ள கடல் பரப்பை நிர்ணயிப்பதும், அதில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் அவசியம் என்பதால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகச் சொல்கிறது. ஆனால் உண்மையோ வேறு.

1990-களில் நரசிம்மராவ் அரசால் அறிவிக்கப்பட்ட மீன்வளக் கொள்கை, ‘கூட்டு முயற்சி’ எனும் பெயரில் பன்னாட்டு ஆலைக் கப்பல்கள் இந்தியக் கடல்களில் மீன்பிடிக்க உரிமம் வழங்கியது. இம்முடிவுதான், மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் படிப்படியான தாக்குதலைத் தொடுத்திட வழிகோலியது. இந்தியக் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிறுவனங்களின் கப்பல்கள், நவீன கருவிகளைக் கொண்டு முட்டை, குஞ்சு வேறுபாடின்றி அப்படியே மீன் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து, மீன்களை இரகம் வாரியாகப் பிரித்தெடுத்து இன்னொரு கப்பலுக்குக் கைமாற்றி விடுகின்றன. எஞ்சிய மீன்குஞ்சுகளையும், முட்டைகளையும், சில சமயங்களில் துடுப்பு வெட்டப்பட்ட சுறாவின் உடல்களையும் கழிவாகக் கடலில் கொட்டிவிடுகின்றன. மீன்வளத்தின் ஆதாரமான முட்டைகளைத் துப்புரவாகத் துடைத்தொழித்து வரும் இவற்றின் அகோரப் பசிக்கு இடையூறாக இருக்கும் இந்திய மீனவர்களை முற்றிலுமாக கடலிலிருந்து துரத்துவதுதான் ஏகாதிபத்தியத்தின் அடுத்த இலக்கு.

அந்த நோக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சட்டம், அதற்காகக் கடுமையான நிபந்தனைகளையும், தண்டனைகளையும் வரையறுத்துள்ளது. அதே நேரத்தில் மீனவர்களை அத்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் மாற்றுத் தொழில் கற்றுத் தரும் நூற்றுக்கணக்கான தன்னார்வக் குழுக்கள், சுனாமி பேரழிவுக்குப் பிறகு இந்தியக் கடற்கரை நெடுக வலை விரித்துள்ளன. ரொட்டி தயாரிப்பு, உள்ளீடற்ற செங்கல் தயாரிப்பு போன்ற சிறுதொழில்களுக்கு மீனவர்களை மாற்றும் சதித்திட்டத்தில் நாகை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் கரையோரங்களில் இவை இயங்கி வருகின்றன. ஒரே நேரத்தில் அடக்குமுறை சட்டம் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மீனவர்கள் மீது ஏகாதிபத்தியமும் இந்திய அரசும் போரைத் தொடுத்துள்ளன.

இச்சட்டத்திற்கு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ள பரவலான எதிர்ப்புக்கூட ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின் சதிகளுக்கெதிராகப் போராடாமல், இலக்கற்ற போராட்டங்களாகவே உள்ளன. அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து, நமது கடல்வளத்தைக் கொள்ளைகொண்டு போகவரும் ஏகாதிபத்தியங்களை விரட்டியடிக்கும் திசையில் மீனவர்களின் போராட்டம் முன்னேறாவிடில், நமது கடல் இனி நம்முடையதாக இருக்காது.

புதிய ஜனநாயகம், April 1, 2010

Monday 11 June 2012

ஒரு நிஜக் கதாநாயகன்..... [சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன்]




சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.

தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழுகிறான்.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.
அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு, மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை.

கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொறுத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…