Saturday 17 March 2012

மிடாலம் - விநாயகர் கலவரம்



       
         பார்வதி, தான் குளிப்பதனை யாரும் உற்றுப்பார்த்து விடாமல் இருக்க தனது உடலிலிருந்த அழுக்கினை உருட்டி பிள்ளையார் சிலையொன்றினைச் செய்து, அதற்கு உயிர் கொடுத்து, தான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை யாரையும் உள்ளே வர அனுமதிக்காதே என விநாயகருக்கு கட்டளையிட்டு வாசலில் காவல் இருக்கும்படி கேட்டு கொண்டார். பார்வதி குளித்துக் கொண்டிருக்கும்போது அவளுடைய கணவர் சிவன் நுழைய முற்பட்டார். அவரை விநாயகர் தடுத்தார். இதில் ஆத்திரம் கொண்ட சிவன், தனது இடையில் செருகியிருந்த வாளால் விநாயகரின் கழுத்தைத் துண்டித்தார். விநாயகர், ”அம்மா” எனக் கதறி உயிரை விட்டார். சத்தம் கேட்டு வெளியே வந்த பார்வதி தலையில்லா விநாயகரைக் கண்டு துக்கம் தாளாமல் அழுதார். தனது மனைவியைத் தேற்றுவதற்காக வெட்டுண்ட தலையைத் தேடியபோது தலையைக் காணவில்லை. இதனால் வாசலின் வெளியே நின்ற யானையின் தலையை வெட்டி அதனை விநாயகரின் கழுத்தில் ஒட்டவைத்து உயிர் கொடுத்ததாக சிவபுராணம் கூறுகிறது.

        பார்வதி கருவுற்றிருக்கையில் ஒரு  அரசன், கருப்பையில் காற்று வடிவமாகச் சென்று அக்கருவின் தலையை வெட்டிவிட்டு சென்றதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தை பெற்றுக் கொண்டதாக விநாயகர் புராணம் கூறுகிறது.

        தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்கு சிவன்  தனது மூத்த மகன் விநாயகரை அனுப்பி யுத்தம் செய்ததாகவும், அதில் விநாயகர் வெட்டுண்டு இறந்ததாகவும், போய் பார்த்ததில் தலையைக் காணாமல் வெறும் முண்டம் மட்டும் கிடந்ததால், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி உயிர்பித்ததாகவும் தக்கயாப்பரணி கூறுகிறது.

       பார்வதி தனது உடல் அழுக்கைக் கழுவி  அதைக் கங்கா நதியின் முகத்தூவாரத்திலுள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாள் என்றும், இதன் விளைவாக மாலினி குழந்தை ஒன்றினைப் பெற்றதாகவும் அக்குழந்தையை பார்வதி எடுத்துச் சென்றதாக பிரம்மவை வர்த்தப் புராணம் கூறுகிறது.

        விநாயகர்  தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையை கடித்துத் தின்றுவிட்டதாகவும், பிறந்த குழந்தை தலையில்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைக்கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக்கொண்டது என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

         இந்த  கதைகளில் எது உண்மையானக் கதை என்பதனை யாரும் இதுவரை வரையறுத்துக் கூறவில்லை. இதனால் கதை சம்பந்தமான விமர்சனங்களும் கருத்துக்களும் தொடர்ந்து நீடித்த வண்ணமாக உள்ளது. அதைப்போன்று விநாயகருக்கு சித்தி, புத்தி, வல்லபை மற்றும் விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளான மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை என 15 மனைவியர் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. அதே வேளையில் விநாயகர் தனது தாய் பார்வதி போன்று மனைவி வேண்டுமென்று கூறியதாகவும், அப்படியொரு அழகான மனைவி கிடைக்கவில்லையென்றும் இதனால் அவர் குளங்களிலும் ஆறுகளிலும் குளிக்க வருகின்ற எந்தப் பெண்ணாவது தனது தாயைப்போன்று இருக்கிறரா என்று பார்க்கச் சென்றதாகவும், அதன் அடிப்படையில்தான் விநாயகர் கோவில்கள் குளக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் அமைக்கப்படுவதுமான கருத்துக்களும் மக்கள் மத்தியில் வியாபித்துள்ளன.
       சமீப  காலங்களாக விநாயகருக்கு மவுசு கூடியுள்ளது. இதற்கு காரணம் இந்து கோவில்களிலும், வீட்டுக் கன்னி மூலைகளிலும் விநாயகர் சிலைகள் வைத்திருந்தால் எந்த வினையும் அண்டாது என்கிற கருத்து மக்கள் மத்தியில் புதிதாக விதைக்கப்பட்டதாகும். இருப்பினும் தமிழ் உணர்வுள்ள இந்துக்கள் இதனை முழுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில் நமது கோவிலுக்குள் விநாயகர் நுழைந்து விட்டால், அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் வரும், ஐயர் நுழைவு வரும், சமஸ்கிருத மந்திரம் வரும், சர்க்கரைப் பொங்கல் வரும், பிள்ளையார் ஊர்வலம் வரும், அதனைத் தொடர்ந்து கலவரங்கள் வரும் என்பதாகும். தமிழ் கடவுளான முத்தாரம்மனும் மாடசாமியும் சொள்ளமாடனும் இசக்கியும் காணாமல் போவார்கள் என்பது அவர்களின் நியாயமான வருத்தமாக இருக்கிறது. இதற்கு விநாயகர் காரணமில்லை என்பது மட்டும் உண்மை.

       செப்டம்பர்  18, 2010 அன்று சென்னையை அடுத்த நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் 5 அடி உயர விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்டத் தகராறில் 30 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் காண்டீபன் தனது நண்பர்கள் சதீஷ், செந்தில், ஈஸ்வரன் ஆகியோர் துணையுடன் 25 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் பிரபாகரனை பீர்பாட்டிலால் கழுத்து, வயிறு, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தற்பொழுது இரு குடும்பங்களும் அநாதையாக தெருவில் நிற்கிறது.

       சென்னை  புதுவண்ணாரப்பேட்டை காவல்  நிலையத்தில் ஆய்வாளராக இருந்தவர் பகீர் அஹம்மத். இவர் தண்டையார்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அவரை தலை, உடல் மற்றும் முகத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது.
வருடம்தோறும்  விநாயகர் ஊர்வலம் வந்து  விட்டாலே ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதி குலைந்து கலவரங்கள் வெடித்துவிடுமோ என்கிற பயஎண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாகி விடுகிறது. அன்றைய நாள் மத விரோதங்களை தீர்த்துக் கட்டுகின்ற நாளாகவும் கருதப்படுகிறது. இதனால் எங்கு எப்பொழுது கலவரம் வெடிக்குமோ என்று தெரியாமல் ஒருவித பதட்டத்துடனே அந்த நாளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

       தொடக்க  கால கட்டத்தில் விநாயகரைக் கும்பிட்ட மக்கள் ஒரு கைப்பிடி பசுவின் சாணியில் அல்லது களிமண்ணில் விநாயகர் உருவம் செய்து, அதனை குளங்களிலும் ஆறுகளிலும் சில்லறைக் காசுகளை வைத்து கரைத்தனர். சிறுவர்கள் கரைக்கின்ற இடங்களில் குதித்து போட்டி போட்டுக்கொண்டு அந்த காசுகளை தேடி எடுப்பார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. இதற்கும் விநாயகர் காரணமில்லை.

       தமிழகத்தில் சங்கபரிவார் அமைப்பான இந்து  முன்னணி, பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்காக பெரியபெரிய விநாயகர் சிலைகளைச் செய்து அதை வீதிகளில் வைத்து, அந்த பகுதியில் லௌடு ஸ்பீக்கர்களை அமைத்து பாடல்களை ஒலிபரப்புகின்றனர். இதனால் அந்தந்த பகுதியில் வசிக்கின்ற குழந்தைகளுக்கு படிப்பதற்கும் முடியவில்லை. நோயாளிகள் வீட்டில் நிம்மதியாக தூங்கவும் முடியவில்லை. தெருக்கள் தோறும் விநாயகர் சிலைகள்; ஒவ்வொரு சிலையையும் பாதுகாக்க இரு காவலர்கள்.

       விநாயகர்  ஊர்வலத்தில் வருபவர்கள் பெரும்பாலும் குடித்துவிட்டு போதையில் ஆடி வருகிறார்கள். சிறுபான்மையினரின் ஆலயங்கள் மற்றும் பள்ளி வாசல்கள் இருக்கும் இடங்களில் வரும்போது அவர்களுக்குள் சைத்தான் நுழைந்து விடுகிறான். இதனால் சிறுபான்மையினருக்கு எதிராக ஆக்கிரோஷமாக கோஷங்கள் எழுப்புவதுடன் சிலர் இடுப்பில் கட்டியிருக்கின்ற வேட்டியை தூக்கிக் காட்டி வெறுப்பேற்றுகின்றனர். இந்நிகழ்வுகள், ”இன்னும் எதற்கு அமைதியாக நிற்கிறாய், வா சண்டைக்கு வா என அறைகூவல் விடுவது போன்று அமைந்துவிடுகிறது”. இதன்விளைவாக திண்டுக்கல், திருவல்லிக்கேணி, நாகூர், முத்துப்பேட்டை, திருப்பூர், கல்பாக்கம், வந்தாவாசி, சங்கரன்பந்தல், மதுக்கூர் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாகக் கல்லெறி சம்பவங்களும், கடை உடைப்புகளும், வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அரங்கேற்றப்படுகின்றன.

      பொதுமக்களுக்கு  எந்தவிதப் பிரச்சனைகளும் பாதிப்புகளும் வந்துவிடக்கூடாதென ஊர்வலத்திற்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் சிலைகளை கரைப்பதற்கு கிரேன் போன்ற இயந்திரங்கள் அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டு மெரினா கடற்கரையிலிருந்து சற்று உள்ளே தள்ளி கடலுக்குள் கரைக்கின்றனர். மதசார்பற்ற சனநாயக நாட்டில் பொதுமக்களின் பணமும் காவல்துறையினரின் நேரமும் வீணடிக்கப்படுகின்றன.  குமரி மாவட்டத்தில் வருடம்தோறும் ஏதாவது ஒரு ஊர்வலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் மிடாலத்தில் கலவரம் அரங்கேற்றப்பட்டது..

       அமைதிக்கான  பேச்சு வார்த்தையின் அடிப்படையில், ஊர்வலத்தைச் சீர்படுத்தும் நோக்கத்திலும், ஊர்வலக்காரர்கள் குறிப்பிட்ட பகுதியைத் தாண்டிச் சென்று கலவரத்தை ஏற்படுத்திவிடக்கூடாதென்றும் காவல் நிலைய அதிகாரிகள் 19 செப்டம்பர் 2010 அன்று காலையிலே ஊர்வலம் வரும் இருபுறங்களிலும் கயிறுகளைக் கட்டினர். மிடாலம் பாதிரியாரும் காலைத் திருப்பலியில், ஊர்வலம் வரும்போது  அந்த பக்கம் எவரும் போக வேண்டாமென்றும், கடற்கரைப் பகுதியில் இருக்கின்ற யாத்தினங்கள், கட்டுமரங்கள், வள்ளங்களை கயிறு கட்டியிருக்கின்ற பகுதிக்கு வெளியே கொண்டு வைத்துவிடுமாறும் அறிவிப்பு செய்தார். மீனவர்களும் அவ்வாறே அப்பகுதியில் வைத்திருந்த தங்களது தொழில் கருவிகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.

      கிள்ளியூர்  ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் கருங்கல் அருகேயுள்ள கூனாலுமூடு ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, 200 வாகனங்களில் ஆனந்த கூத்தாடியும், கோஷங்கள் எழுப்பியும் மிடாலம் கடற்கரையை நோக்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
      2010 ஆகஸ்ட் 17ஆம் தேதி பத்மநாபுரம் வருவாய்த்துறை அதிகாரித். தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படியும், அரசு வழிகாட்டுதலின்படியும் சரியாக மாலை 4 மணிக்கு மிடாலம் கடற்கரையை ஊர்வலம் அடைய வேண்டும். இருப்பினும் மாலை 3 மணியளவில் இருசக்கர வாகனங்களில் காவிக்கொடியுடன் வந்த ஒரு இளைஞர் பட்டாளம் கடற்கரையில் உட்கார்ந்து தாங்கள் கொண்டுவந்த மதுபாட்டில்களை திறந்து உண்டு குடித்து கூத்தாடியது. போதைத் தலைக்கேறிய அவர்கள் இடையிடையே அலைபேசியிலும் பேசிக்கொண்டிருந்தனர்.

      விநாயகர்  ஊர்வலம் உதயமார்த்தாண்டத்தை அடைந்தது. அங்கிருந்து 100 அடி தூரமுள்ள கடலுக்கு சிலைகளை எடுத்துக் கொண்டும், காவிக்கொடிகளைப் பிடித்துக் கொண்டும் கோஷத்தொடு கடற்கரையை நெருங்கி வருவதனைக்கண்ட அக்கூட்டம் கயிறு கட்டியிருந்த எல்லையைத் தாண்டி தங்கள் காலணிகளைக் கழற்றி வள்ளத்திலிருந்த வலைகளின் மேல் வைத்தனர். படகில் உட்கார்ந்து கொண்டிருந்த பெரியவர் மெர்லின், செருப்புகளைக் கீழ வையுங்க, வலைகளின் மேல் வைக்காதிங்க என்றார். ஆத்திரம் கொண்ட ஒருவன் அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தான். மற்றவர்களும் அவரை அசிங்கியமான வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தனர்.

      இதனை  தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு மீனவர், ”லே நம்ம  ஆளுகள   போட்டு அடிக்கிறானுவ. ஓடுவாலேய்” என்றார். அதற்குள்  டெம்போக்களில் கும்மாளமிட்டுக்கொண்டு கோஷத்தோடு வந்தக் கூட்டம் காவிக்கொடிக் கம்புகளை எடுத்துக் கொண்டு அடிப்பதற்காக ஓடி வந்தது. சிலர் கற்களை எடுத்து ஓடிவருகின்ற மீனவர்களைப் பார்த்து வீசினர். இதனால் மீனவர்களும் ஆங்காங்கே கிடந்த கற்களை எடுத்து பதில் தாக்குதல் நடத்தினர்.

      இவர்களின் இரச்சல் சத்தத்தை கேட்டு சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்களும், அவரவர் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மீனவர்களும் வெளியே வந்தனர். நடக்கின்ற கலவரத்தைப்பார்த்த மீனவர்கள் கும்பல் கும்பலாக, ”விடாதலேய் விடாதலேய்” என்று கத்திக்கொண்டு ஆவேசத்துடனும் முன்னோக்கிப் பாய்ந்து  வந்தனர். ஊர்முழுவதும் இரச்சல்  த்தம் வலுவடைந்தது. மீனவர்கள்  ஆவேசமாக   ஓடிவருவதனைக் கண்ட காவிப்படைகள், தாக்குப்பிடிக்க  முடியாது என உணர்ந்து   உயிருக்குப் பயந்து வந்த பாதையில் ஓட்டம் பிடித்தனர். கலவரக் காரர்களில் இரண்டுபேர் மீனவர்களிடம் மாட்டிக்கொண்டனர். ஆண்ட்ரோஸ் என்ற மீனவர் அவர்களை அடிக்கவிடாமல் தடுத்து, போய்விடுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என இருகரங்காளால் வணங்கி விட்டு பைக்கை எடுத்துக்கொண்டு பறந்து சென்றனர்.
      வந்த  பாதையில் ஓட்டம் பிடித்த  காவிக்கும்பல் உதயமார்த்தாண்டத்திலுள்ள கடைகளையும், வீடுகளையும் அடித்து நொறுக்கியது. இதில் அந்திரியாஸ், டேவிட் குமார், லாசர் ஆகியோரின் வீடுகள் முற்றிலும் தரைமட்டமானது. இன்னொரு கொள்ளைக் கும்பல், கடையிலுள்ள பொருள்களை டிம்போவில் ஏற்றிவிட்டு, கொண்டுவந்த விநாயகரை ரோட்டில போட்டுவிட்டு, கிடைத்தது லாபமென தப்பி ஓடியது. இன்னொரு கொலைவெறிக் கும்பல் நீரோடி பேருந்தினை அடித்து நொறுக்கியது. பேருந்தில் பயணம் செய்த ராமன்துறை மீனவ கிராமத்தைச் சார்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் நிஷாந்தின் கையை ஒடித்தது. அதே ஊரில் வசிக்கும் சிவரஞ்சினையை காயப்படுத்தியதுஇஸ்லாமிய சகோதரி ஒருவரை மானபங்கப் படுத்த முயன்ற காவி படையினரிடமிருந்து அவரை புனிதா என்ற மீனவ பெண் கௌன்சிலர் காப்பாற்றிய சம்பவமும் நடந்தது. இன்னொரு குடிகாரக் கும்பல், பொதுவிநியோகக் கடையை அடித்து நொறுக்கியதோடு அங்கிருந்த மண்ணணையில் காவிக்கொடியை நனைத்து கடைகளுக்கும், வீடுகளுக்கும், ஆட்டோவுக்கும் அரசுப் பேருந்துக்கும் தீ வைத்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வண்டியைவிட்டு இறங்கி கடற்கரையை நோக்கி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தக்கலை, குளச்சல் பகுதியிலிருந்து தீயணைப்புப் படையினர் விரைந்தனர். தீயணைப்பு வாகனத்தை கலவரக் கும்பல் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆம்! இதுதான் பக்தியின் உச்சகட்ட லட்சணம்.

      இக்கலவரத்தைக் கேள்விப்பட்டு,மண்டைக்காடு பகுதியிலுள்ள வெட்டுமடையில் விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்துக் கொண்டிருந்த கூட்டம் 90 சிலைகள் கரைத்த நிலையில், கரைக்காத 51 சிலைகளை மண்டைக்காடு கோவிலின் முன்பகுதியில் கொண்டுவந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் டி.ஐ.ஜி. சண்முக ராஜேந்திரன், நெல்லை மாவட்ட எஸ்.பி. ஆஸ்ராகர்க், மாவட்ட வருவாய் அதிகாரி கலைச்செல்வன், கல்குளம் தாசில்தார் பால்சுந்தர் ஆகியோர் சிலைகளைக் கரைக்கும்படி கெஞ்சிக் கொண்டிருந்ததுதான் வேடிக்கை. கைபேசியில் இரகசிய அழைப்பு வந்தபிறகுதான் இக்கும்பல் இரவு 8 மணிக்கு மீதமிருந்த விநாயக சிலைகளைக் கடலில் கொண்டு கரைக்க சம்மதம் தெரிவித்தது.
      இதைப்போன்று மேல்புறம் ஒன்றியம் சார்பில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்வன் மற்றும் பா.ஜ. மாவட்ட செயலாளர் விஜயபிரசாத் தலைமையில் கொண்டுவரப்பட்ட 150 சிலைகளையும், குழித்துறை நகர இந்து முன்னணித் தலைவர் ராஜேஷ் மற்றும் பா.ஜ. மாவட்டப் பொதுச்செயலாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் கொண்டுவரப்பட்ட 17 சிலைகளையும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்காமல், மிடாலத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட பின்புதான் கரைப்போம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      உதயமார்த்தாண்டத்தில்  நடந்த கலவரச் சம்பவங்கள் ஓய்ந்த நிலையில் கத்தோலிக்க பாதிரியார்களான கென்னடி, கீளீட்டஸ், சேவியர் ராஜ், கில்டஸ், கிளாரட், ஆண்ட்ரோஸ் ஆகியோர் ஒருபுறம் மிடாலத்தில் கூடி விவாதிக்கின்றனர். இன்னொருபுறம் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி, மாவட்டத் தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் சந்திரகுமார், இந்து முன்னணி மாவட்டத்தலைவர் செல்வன், கீழ்குளம் டவுண் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கூடி விவாதிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் அரசு வாகனத்தின் மூலம் சம்பவ இடத்திற்கு பயணம் செய்துகொண்டு வரும்போதே கைபேசி மூலமாக இவர்களைத் தொடர்பு கொண்டு சமாதானம் பேசி வந்தனர். .
      மாவட்ட  ஆட்சித்தலைவரும், மாவட்ட கண்காணிப்பாளரும் உதயமார்த்தாண்டத்தில் வந்து முதலில் பொன்.ராதாகிருஷ்ணனையும் அவரோடு இருந்தவர்களையும் சந்திக்கிறார்கள். பின்பு, மிடாலம் வந்து கத்தோலிக்கப் பாதிரியார்களைச் சந்திக்கிறார்கள். அப்பொழுது, மீனவ மக்கள் அனைவரும் இவர்களைச் சுற்றி சூழ்ந்து நிற்கிறார்கள். இவர்கள் மக்களுக்குப் புரியாத   ஆங்கில மொழியில் உரையாடுகிறார்கள். இவர்கள் என்னப் பேசினார்கள் என்று மக்களுக்குப் புரியவில்லை.
      30 நிமிடங்களுக்குப்பின்பு மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு மக்களைப்பார்த்து, ”மீனவ மக்கள் என்னை அடித்து விடுவார்கள் என்ற பயத்துடனே  இங்கு வந்தேன். ஆனால் நீங்கள் நல்ல மக்கள்” எனப் புகழ்ந்து விநாயகரை கடலில் கரைக்க அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் நின்ற ஒரு மீனவர், ‘எங்கள கலச்சு புள்ளிபிடிக்க போலிஸ் வருதாமே’ என்றார். இதுதான் சரியான வாய்ப்பென கருதிய மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ”அரசு பஸ்ஸை நீங்களா எரித்தீர்கள்? வீடுகளை நீங்களா அடித்து நொறுக்கினீர்கள்? கடைகளை நீங்களா எரித்தீர்கள்? கடையிலுள்ள பொருட்களை நீங்களா வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சென்றீர்கள்? நாங்க ஏன் உங்கள கலச்சு பிடிக்கணும்? அதனால விநாயகர் சிலைகளை அவங்க கரச்சிட்டு  போகட்டும். நாங்க அவங்கள அரஸ்ட் பண்றோம்” என்றார்.
       இரவு  11 மணிக்கு காவல்துறைப் பாதுகாப்புடன் கலவரக் கும்பல் கும்மாளமிட்டபடி விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்தன. கடலின் அலைகளுக்கு பயந்து சிலர் விநாயகர்ச் சிலைகளைக் கடலிலில் தூக்கி வீசிச் சென்றனர். இவ்வளவு கலவரம் நடத்திய கலகக்காரர்களை ஏன் சிலைகளைக் கடலில் கரைக்க அனுமதித்தீர்கள் என்று கேட்டதற்கு, ”சாமியார்மாருவதான்(பாதிரியார்கள்) சரிசரி போட்டுபோட்டு என்று சொல்லி கரைக்கச் சொன்னாங்க. இப்ப அவங்களுக்கென்னா அதிகாரிகளோடு ஒண்ணுக்கொண்ணா நெருக்கமாயிட்டாங்க. இன்னும் அவங்களுக்குத் தேவையானத சாதிச்சிடலாமில்லயா” என்றார் ஒரு வயதான அம்மா.
1982 மண்டைக்காடு கலவரத்தை மதக்கலவரமாக சித்தரித்து திசை திருப்பியது போன்று மிடாலம் கலவரத்தை கலகக்காரர்கள் திசைதிருப்பி விடாமல் இருக்க, ”விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த மோதல்இரு மதங்களுக்கு இடையேயான பிரச்சனையல்ல” என மாவட்ட ஆட்சியர் பத்திரிகை வாயிலாக மறுநாளே அறிக்கையிட்டார். ஏனெனில் இதனை மதக்கலவரமாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்பது சிலரின் எண்ணமாக இருந்தது.
      
      21.09.2010 தினத்தந்தி பத்திரிகை இவ்வாறு கூறுகிறது,”நேற்று காலையில் வீடுகள் மற்றும் பொருட்களை இழந்த பொதுமக்கள் வீதிகளில் வந்து அழுது புலம்பினர். இதனால் அந்த பகுதியில் வீதியெங்கும் அழுகுரல் கேட்டவண்ணம் இருந்தது”. இக்கலவரத்தில் 4 வீடுகள் முழுமையாகவும் 6 வீடுகள் பகுதி அளவாகவும் சேதமடைந்தது. இதேப்போல் 1 ரேஷன் கடை, 16 கடைகள் மற்றும் இரு சக்கர வாகனங்களும், ஒரு ஆட்டோவும், ஒரு அரசு பஸ்ஸும் தீக்கிரையாக்கப்பட்டன.
      20.09.2010 அன்று தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, குஷ்பு, ஹெலன் டேவிட்சன், சுரேஷ் ராஜன் ஆகியோர் கலந்து  கொண்ட  முப்பெரும் விழா கோலாகோலமாக  நடைபெற்றது. கலவர  நேரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் மறுநாள் நாகர்கோவிலில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரியில் தங்கியிருந்தனர். இருப்பினும் மாநாட்டிலோ அதற்கு பின்போ கலவரம் குறித்து முதல்வர் ஒருவார்த்தை கூட பேசவில்லை.
      
பஸ் டிரைவர்  சிவகுமார் கொடுத்த புகாரில், பஸ் எரிக்கப்பட்டதில் ருபாய் 15 லட்சம் சேதம் எனவும், கூட்டுறவு தனி அலுவலர் ஜெயக்குமார் கொடுத்த புகாரில் ரேசன்கடை பொருட்கள் சேதமதிப்பு 24 ஆயிரத்து 755 ருபாய் எனவும், டேவிட் குமார் கொடுத்த புகாரில் தனது வீடும் கடையும் சேதமடைந்த மதிப்பு 7 இலட்சத்தி 17 ஆயிரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மிடாலம் கிராமத்தைச் சார்ந்த ஐம்பது பேர் மூன்று வேன் ஒரு காரில் கருங்கல் காவல்நிலையம் வந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இந்த புகார்களின்பேரில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவதாஸ் வழக்குப் பதிவு செய்தார். கொடுக்கப்பட்ட  அத்தனைப் புகார்களிலும், ”கண்டால் அடையாளம் தெரியும் நபர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
      
இச்சம்பவம்  குறித்து மிடாலம் பங்குச்  செயலாளர் ஜார்ஜ் ஆன்றனி கூறும்போது, ”கடந்த 18ஆம் தேதி மாலை உதயமார்த்தாண்டத்திலிருந்து மிடாலம் வரை திடீரென காவிக் கொடிகள் கட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம். போலீசார் வந்து கொடிகளை அப்புறப்படுத்தினர்” என்றார். வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் காவிக்கொடிகள் கட்டப்பட்ட சம்பவம் நடந்த பின்பும் காவல்துறை உஷார் ஆகவில்லை என்பது ஆச்சிரியத்திற்குரிய விசயம். தக்கலைப் பகுதியில் முதல்வர் கருணாநிதியை வரவேற்று தி.மு.க.வினர் வைத்திருந்த ஃப்ளக்ஸ் போர்டுகளை பட்ட பகலிலேயே ஒரு கும்பல் அடித்து சேதப்படுத்தியது. அதுபோல கொட்டாரம் பகுதியில் தி.மு.க. சார்பில் சாலையோரம் வைத்திருந்த டியூப் லைட்டுகள், விநாயக ஊர்வலக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்குப் பிறகும் காவல்துறையினர் உஷாராகவில்லை.
     
    மிடாலம் ஊர்வலத்திற்கு முன்னிலை வகித்த கீழ்குளம் டவுண் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன், ”அங்கு கட்டப்பட்டிருந்த கயிறைத் தாண்டிச் சென்றவுடன், ‘நீங்கள் எப்படி கயிறைத் தாண்டி வரலாம்’ எனக்கேட்டு அப்பகுதியினர் கற்களை வீசினர்” என்கிறார். இதன்மூலம் நாங்கள்தான் ஊர்வலக் கட்டுப்பாட்டினை முதலில் மீறினோம் என்பதனை அவர் ஒப்புக் கொள்கிறார். அங்கு எரிக்கப்பட்ட கடைகளில் இரண்டு தவிர மீதியெல்லாம் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் கடைகள் என காவல்துறை அறிக்கைகளும் நேரடி ஆய்வுகளும் புலப்படுத்துகிறது. ”பாதிக்கப்பட்ட மக்கள் எதிர் நடவடிக்கையில் இறங்காமல் அரசையே நம்பியுள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி” என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர்.
      இச்சம்பவம்  குறித்து மாவட்டச் செயலர் முருகேசன், ”மிடாலத்தில் நடந்த மோதல் திடீரென்று ஏற்பட்டதல்ல; திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. அரசியல் லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டு மக்களை மோதவிடும் இச்செயலை மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.

      கலவரம்  குறித்து பாதிக்கப்பட்ட  உதயமார்த்தாண்டம் பகுதியைச் சார்ந்தவர்களை சந்தித்தப்போது, இக்கலவரம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்றும் கலவரத்திற்கு முன்பாக ஒவ்வொரு இந்து வீடுகளுக்கும் முன்பு விநாயகர் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தனர் என்றும் கூறுகின்றனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதனையும், தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளையும் பார்க்கும்போது இந்துக்களின் வீடுகளுக்கு இடையிடையே இருந்த கிறிஸ்தவ வீடுகளை மட்டும் கலகக்காரர்கள் இனம் கண்டு அடித்து நொறுக்கியுள்ளது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இதன்மூலம் இக்கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியென்பது உறுதியாகிறது. விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பாக, உதயமார்த்தாண்டம் பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன், பழநி, அரசு வாகன நடத்துநர் வீரமோகன் மற்றும் சிலர் உதயமார்த்தாண்டத்தில் இரகசிய கூட்டம் நடத்தியதாகவும்  பாலவிளை கிராமத்தில் விநாயகர் சிலையை  டெம்போவில் ஏற்றும்போதே ஆயுதங்களையும் கற்களையும் வாகனங்களில் ஏற்றிச் சென்றதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
      இதற்கு  முக்கிய காரணம்:(1) அயோத்தி வழக்குத் தீர்ப்பின் முன்னோட்டமாக கலவரத்தை உருவாக்க வேண்டுமென்றும் (2) பாரதிய ஜனதாவின்  ஜூலை போராட்டத்தின் தொடர்ச்சியாக  கடந்த சட்டசபைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு இந்து மக்களின் ஓட்டுக்களை வாங்கவும் இக்கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக உளவுத்துறைச் செய்திகள் கூறுகிறது.
      சம்பவ இடத்தில் 5 நாட்களாக  அநாதையாகக் கிடந்த î TN 74 Z 0817, TN 74 V 1724, TN 72 L 246, TN 74 V 4145, TN 75 A 6625, TN 75 4066, TN 75 B 4509, TN 75 A 2375, TN 74 T 3042, TN 74 T 3042, TN 74 U 8419  கலகக்காரர்களின் பத்து மோட்டார் சைக்கிள்களையும் பி.ஜே.பி. கொடி கட்டிய TN 01 AH 3160 என்ற போலிரோ வாகனத்தையும் மீனவர்கள் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். அதனை அவர்கள்   டெம்போவில் ஏற்றிச் சென்றனர்.    நன்றி: ஜோ.தமிழ்செல்வன்   

Monday 12 March 2012

பரதவர், பரவர், அல்லது பரதர்

பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான சாதியினர். பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள். இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலை நாட்டியவர்கள். பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. இவர்கள் சந்திர வம்சத்தினர். பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே.

இலக்கியத்தில் பரதவர்
பண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.

பரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாக பிரிந்தார்கள். அவ்வுட் பிரிவுகளின்படி தொன்மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

பழம் குலப் பெயர்கள்
பரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், ஆரிய நாட்டார் (ஆரியன்), கங்கை நாட்டார், சிந்து நாட்டார் சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு. இதில் ஒரு பெயரான ஆரியன் என்ற பெயர் சோழநாட்டு பட்டினவரைக் குறிக்கும் பெயராகும். இது இன்றும் வழக்கில் உண்டு. துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். அதில் சோழநாட்டுத் துறைமுகங்களில் வாழ்ந்த பட்டினவர் ஆரியன் என்று அழைக்கப்பட்டார்கள். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும். பட்டினவர் தொழில்களாக கடல் ஓடுதல், கடல் வாணிபம் செய்தல், கடற்படை வீரர்களாக அரசபடைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.

சிறப்புக்கள்
பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முன்நாட்களில் பாண்டியர் என்றும், படையாட்சியர், வில்லவராயர், பூபாலராயர், பாண்டியதேவர், சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ, மச்சாடோ, மச்காறேன்ஹாஸ், ரோட்ரிகோ என்ற போர்த்துக்கீசிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பரத குலத்தினர் பேரரசர் குலத்தவர் என்பதற்கான பல அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன.

மட்டக்களப்பில் முக்குவச் சட்டம்

இப்பொழுதுள்ள கிழக்கு மாகாணப் பிரதேசமானது, பொதுவாக “மட்டக்களப்புச் சமூகம்” என்று குறிப்பிடப்படுவதாகும்.

மட்டக்களப்புச் சமூக அமைப்பு, குறிப்பாக அதன் சமூக ஒழுங்கமைப்பிலும் (Social Organizations), சாதியமைப்பிலும், யாழ்ப்பாணத்தில் நிலவும் முறைமையிலிருந்து நிதர்சனமான வேறுபாடுகளைக் கொண்டது.
வரலாற்று ரீதியாக இது நீண்டகாலம் கண்டியர் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் சுய ஆதிக்கமுள்ள பிரதானிகள் இருந்துவந்தனர் என்ற அபிப்பிராயம் உண்டு.
இங்குள்ள “குடி” முறைமை முக்கியமானதாகும். ஒவ்வொரு சாதிக்கும் பல்வேறு குடிகள் உண்டு. அக்குடிகள் புற மண குழுமங்களாகும் (Exogamons). [குடிமுறைமை யாழ்ப்பாணச் சமூக அமைப்பிலும் ஒரு காலத்தில் நிலவி இருத்தல் வேண்டும். அங்கு "குடி", "பகுதி" என்பன வம்சவழியினைக் (Lineage) குறிப்பவை.] மட்டக்களப்பில் குடிமுறைமை, கோயில் ஆதிக்கம் போன்றவற்றால் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள இந்து சமய முறைமை, யாழ்ப்பாணத்தில் நாவலருக்குப் பின் ஏற்பட்டதுபோன்று “அடுக்கமைவுபூர்வமாக வரன்முறைப்படுத்தப்பட்ட ஒன்று” அன்று. இதனால் மட்டக்களப்பில், “முக்குவர்” நில ஆதிக்க முதன்மை நிலையுடையோராய் விளங்கினாலும், அவர்களுக்கு (யாழ்ப்பாணத்தில் வெள்ளாளருக்கு உள்ளது போன்று) சடங்காச்சார முதன்மை” (Ritual Supremacy) இல்லை. வெள்ளாளர், சீர்பாதக்காரர் ஆகியோரும் தத்தம் முக்கியத்துவத்தினை வற்புறுத்துவர்.
மட்டக்களப்பின் புவியியற் கூறுகள் காரணமாக அதன் உணவுமுறைகள் தனித்துவமானவை.
மத ஒழுகு முறையில், சமஸ்கிருதமையப்பாடு கிடையாது. இதனால், “ஆகம” முறை முதன்மை அங்கு இல்லை. கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றி ஈசுவரர் கோயில் வீரசைவ மரபின்படியே கோயிலொழுகு முறையைக் கொண்டது.
மட்டக்களப்பின் கவனிக்கப்பட்ட ஒரு முக்கிய அம்சம் அது சோழ ஆட்சியின் ஒரு கூறாக அமைந்திருந்தது என்பதாகும். இதனால் பொலநறுவை – மட்டக்களப்பு – மூதூர் – திருகோணமலை ஆகிய பிரதேசங்களினனூடே ஓர் ஒருமைப்பாடு நிலவியிருத்தல் வேண்டும். இந்த ஒரு நிலைப்பாட்டின் எச்ச சொச்சங்களாக இப்பகுதிகளில் இப்பொழுது காணப்படும் சிவன் கோயில்கள் உள்ளன. இவ்வமிசம் இன்னும் நன்றாக ஆராயப்படவில்லை. (த.சிவராம் தமது சில கட்டுரைகளில் இவ்வமிசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளார். இது பற்றி முதன் முதலில் புலமைச்சிரத்தையினை ஏற்படுத்தியவர் அவரே).
மட்டக்களப்பில் முக்குவச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக முக்கியமானதெனினும் இப்பொழுது அது வழக்கில் இல்லை.
மட்டக்களப்புப் பிரதேசத்தின் மிகப் பிரதானமான சனவேற்ற (demographic) அமிசம், அது பாரம்பரிய முஸ்லிம் வாழிடங்களைக் கொண்டது என்பதாகும். இந்த முஸ்லிம்கள் மொழியாலும் (தமிழ்), சமூக ஒழுங்கமைப்பு முறையாலும் (குடிமுறைமை), தமிழரோடு இணைந்தவர்கள். சில நில ஆட்சியிலும் நிறையப் பொதுமை உண்டு.
இங்குள்ள முஸ்லிம்கள் விவசாயத்தை தளமாகக்கொண்டவர்களாதலால், இவர்கள் தமிழர்களிலிருந்து பிரிக்கப்படமுடியாதவர்கள்.
இங்கு தமிழ் – முஸ்லிம் சகசீவனம் என்பது இருபகுதியினரது தனித்துவங்களையும் உரிமைகளையும் கணக்கெடுப்பதிலும், ஒற்றுமையான வாழ்வு ஒழுங்குமுறையை வகுத்துக் கொள்வதிலும் தங்கியுள்ளது.
இப்பிரதேசத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை.
திருகோணமலை
மட்டக்களப்புப் பிரதேசம் போன்று இப்பிரதேசமும், அதற்குரிய தமிழ்நிலை வரலாற்றாய்வுகளை இன்னும் முழுமையாகப் பெறவில்லை.
திருகோணமலை மாவட்டம் (கந்தளாய், தம்பலகாமம், மூதூர் ஆகியன உட்பட) சோழராட்சிக் காலத்தில் முக்கியம் பெற்ற இடமாகும். இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட தென்- மேற்கு நோக்கிய பெயர்வின் பின்னர் (13ஆம் நூற்றாண்டின் பின்னர்) இப்பகுதி இலங்கை வரலாற்றில், ஏறத்தாழ ஒல்லாந்தர் வருகைவரை, அதிகம் பேசப்படாத ஒரு பிரதேசமாகவே போய்விட்டது.
மட்டக்களப்பின் தெற்குப் பிரதேசங்களும், திருமலை மாவட்ட வட பிரதேசங்களும் 1940கள் முதலே சிங்களக் குடியேற்றத்துக்கு உட்பட்டன. அங்கு ஏற்கனவே சில “புராண” (பழைய) சிங்களக் கிராமங்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் 1940 களின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியினரில் தமிழ், முஸ்லிம் சீவிய இருப்பு பிரச்சினையாக்கப் பெற்றது. இப்பகுதியின் வாழ்வியல் அமிசங்கள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. -இனி ஒரு.