Saturday 28 April 2012

வேலைவாய்ப்பை வழங்கும் கடல் மீன்பிடி படிப்பு






சிஃப்நெட் வழங்கும் கடல் மீன்பிடி தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளை சென்னையிலும் படிக்கலாம்

கடலில் மீன்பிடி கப்பல்களை இயக்குவதற்கும் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1963ம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது தற்போது, சிஃப்நெட் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபிஷரிஸ், நாட்டிக்கல் அண்ட் என்ஜினீயரிங் டிரெயினிங் என்ற பெயரில் செயல்படுகிறது. சென்னை ராயபுரத்தில் 1968ம் ஆண்டிலும் விசாகப்பட்டினத்தில் 1981ம் ஆண்டிலும் சிப்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டில் கடல் மீன்பிடி கப்பல்களில் பணிபுரியும் ஸ்கிப்பர்கள், மேட்ஸ், என்ஜினியர்கள், என்ஜின் டிரைவர்கள் போன்ற பணிகளுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் ஒரே நிறுவனம் சிஃப்நெட்.

இங்கு பேச்சலர் ஆஃப் ஃபிஷரி சயின்ஸ் (நாட்டிக்கல் சயின்ஸ்) என்ற பி.எஃப்எஸ்சி நான்கு ஆண்டு படிப்பு உள்ளது. மீன்பிடி தொழில்நுட்பங்கள், மீன்பிடி கப்பல்களை இயக்குதல், நாட்டில்கல் சயின்ஸ் உள்ளிட்டவற்றை கற்றுத் தரும் படிப்பு. இது. பல்வேறு வகையான மீன்பிடிப்பு முறைகள், மீன்பிடி கப்பலை வடிவமைக்கும் முறை, நேவிகேஷன், என்ஜின்களை இயக்குதல், ஓசனோகிராபி மற்றும் மெரைன் மெட்ரியாலஜி, மீன் பிடித்தல், மீன்களைப் பதப்படுத்துதல்...இப்படி மீன்பிடி தொழில் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். அத்துடன் நேர்முகப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதாவது, கடல் மீன்பிடி கப்பலிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு கொச்சியில் உள்ள கொச்சின் யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பட்டங்களை வழங்கும். டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் அனுமதி பெற்ற படிப்பு இது.

இந்தப் படிப்பில் சேர என்ன படித்திருக்க வேண்டும்?
பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் மற்ற அறிவியல் பாடங்களில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று 17 வயது ஆகி இருக்க வேண்டும். அதேசமயம் 20 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. மெர்ச்செண்ட் ஷிப்பிங் விதிமுறைகளின்படி, விண்ணப்பிக்கும் மாணவர்கள் மருத்துவரீதியாக உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். நல்ல கண்பார்வையும் அவசியம்.

எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்?
நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். நுழைவுத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் இருக்கும். இந்த நுழைவுத் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. நுழைவுத் தேர்வுக்கு 50 சதவீத மதிப்பெண்களும் பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீத மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வுக்கு 10 சதவீத மதிப்பெண்களும் என்ற  அடிப்படையில் கணக்கிடப்பட்டு அதிலிருந்து சிறந்த மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத் தேர்வு ஜூன் 10ம் தேதியும் நேர்முகத் தேர்வு ஜூலை 16ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பைப் படிக்கக் கட்டணம் எவ்வளவு?
பி.எப்.எஸ்சி. படிப்பில் முதல் ஆண்டில் முதல் செமஸ்டருக்குக் கட்டணம் ரூ.23,515. இரண்டாவது செமஸ்டர் கட்டணம் ரூ.7,500. இரண்டு, மூன்று, நான்காம் ஆண்டுகளில் முதலாவது செமஸ்டர் கட்டணமாக ரூ.19,315ம், இரண்டாவது செமஸ்டர் கட்டணமாக ரூ.7,500 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டது என்பதால், இந்தப் படிப்பில் சேரும் போது கட்டணம் எவ்வளவு என்பதை சிஃப்நெட் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சிஃப்நெட் இணைய தளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. `Senior Administrative Officer, CIFNET' என்ற பெயரில் இந்தத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ஜாதிச் சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். வயதுக்கான சான்றிதழ்களும் தேவை. சுயவிலாசமிட்ட இரண்டு கவர்களையும் (25செமீ x 11 செமீ) இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொச்சியில் உள்ள சிஃப்நெட் இயக்குநர் முகவரிக்கு மே 18ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த விரிவான விவரங்களை இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு என்ன வேலைவாய்ப்பு என்று கேட்கிறீர்களா? இங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மத்திய மீன்வள நிறுவனங்களிலும் மாநில மீன்வளத் துறைகளிலும் வேலையில் சேரலாம். தனியார் நிறுவனங்களிலும் மீன்பிடி கப்பல்களிலும் வேலை கிடைக்கும். பல்கலைக்கழகங்களிலும் வேலை கிடைப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. கடல் மீன்பிடி கப்பல்களில் பணி செய்ய ஆர்வம் உள்ள மாணவர்களா நீங்கள்? விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்கு: www.cifnet.gov.in

தொழில் பயிற்சி படிப்புகள்
சிஃப்நெட் கல்வி நிறுவனத்தின் கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் வெஸல் நேவிக்கேட்டர் (விஎன்சி), மெரைன் பிட்டர் (எம்எஃப்சி) ஆகிய படிப்புகளைப் படிக்கலாம். மத்திய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககத்தினால் கிராப்ட்ஸ்மேன் டிரெயினிங் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட படிப்புகள் இவை. இந்த இரண்டு படிப்புகளின் காலம் இரண்டு ஆண்டுகள். இந்தப் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.700 வீதம் உதவித் தொகை அளிக்கப்படும். தியரி மற்றும் பிராக்டிக்கல் வகுப்புகளுக்கு யூனிபார்ம் கட்டாயம் அணிய வேண்டும். வகுப்புகள் ஆங்கிலத்தில் நடைபெறும். மாணவர்கள் வளாகத்தில் தங்கிப் படிக்க வேண்டும்.

இந்தப் படிப்புகளில் சேர பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் கணிதத்திலும் அறிவியல் பாடத்திலும் தலா 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 வயது ஆனவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். 20 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். மாணவர்களுக்கு நல்ல பார்வை இருக்க வேண்டியது அவசியம். அத்துடன் உடற் தகுதியும் கருத்தில் கொள்ளப்படும்.

இந்தப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, தில்லி, புவனேஸ்வரம், மும்பை ஆகிய இடங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். நுழைவுத் தேர்வு ஜூன் 24ம் தேதி காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை நடைபெறுகிறது. கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.300. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150. கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள சிஃப்நெட் அலுவலகங்களில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு, `Senior Administrative Officer, CIFNET' என்ற பெயரில் இந்தத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து ரூ.15 மதிப்புள்ள தபால் தலையுடன் கூடிய சுய விலாசமிட்ட கவரையும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை இணைய தளத்தில் டவுன்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து டிமாண்ட் டிராப்ட்டுடன் இணைத்து அனுப்பலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 21ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment