Saturday, 17 March 2012

மிடாலம் - விநாயகர் கலவரம்



       
         பார்வதி, தான் குளிப்பதனை யாரும் உற்றுப்பார்த்து விடாமல் இருக்க தனது உடலிலிருந்த அழுக்கினை உருட்டி பிள்ளையார் சிலையொன்றினைச் செய்து, அதற்கு உயிர் கொடுத்து, தான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை யாரையும் உள்ளே வர அனுமதிக்காதே என விநாயகருக்கு கட்டளையிட்டு வாசலில் காவல் இருக்கும்படி கேட்டு கொண்டார். பார்வதி குளித்துக் கொண்டிருக்கும்போது அவளுடைய கணவர் சிவன் நுழைய முற்பட்டார். அவரை விநாயகர் தடுத்தார். இதில் ஆத்திரம் கொண்ட சிவன், தனது இடையில் செருகியிருந்த வாளால் விநாயகரின் கழுத்தைத் துண்டித்தார். விநாயகர், ”அம்மா” எனக் கதறி உயிரை விட்டார். சத்தம் கேட்டு வெளியே வந்த பார்வதி தலையில்லா விநாயகரைக் கண்டு துக்கம் தாளாமல் அழுதார். தனது மனைவியைத் தேற்றுவதற்காக வெட்டுண்ட தலையைத் தேடியபோது தலையைக் காணவில்லை. இதனால் வாசலின் வெளியே நின்ற யானையின் தலையை வெட்டி அதனை விநாயகரின் கழுத்தில் ஒட்டவைத்து உயிர் கொடுத்ததாக சிவபுராணம் கூறுகிறது.

        பார்வதி கருவுற்றிருக்கையில் ஒரு  அரசன், கருப்பையில் காற்று வடிவமாகச் சென்று அக்கருவின் தலையை வெட்டிவிட்டு சென்றதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தை பெற்றுக் கொண்டதாக விநாயகர் புராணம் கூறுகிறது.

        தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்கு சிவன்  தனது மூத்த மகன் விநாயகரை அனுப்பி யுத்தம் செய்ததாகவும், அதில் விநாயகர் வெட்டுண்டு இறந்ததாகவும், போய் பார்த்ததில் தலையைக் காணாமல் வெறும் முண்டம் மட்டும் கிடந்ததால், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி உயிர்பித்ததாகவும் தக்கயாப்பரணி கூறுகிறது.

       பார்வதி தனது உடல் அழுக்கைக் கழுவி  அதைக் கங்கா நதியின் முகத்தூவாரத்திலுள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாள் என்றும், இதன் விளைவாக மாலினி குழந்தை ஒன்றினைப் பெற்றதாகவும் அக்குழந்தையை பார்வதி எடுத்துச் சென்றதாக பிரம்மவை வர்த்தப் புராணம் கூறுகிறது.

        விநாயகர்  தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையை கடித்துத் தின்றுவிட்டதாகவும், பிறந்த குழந்தை தலையில்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைக்கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக்கொண்டது என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

         இந்த  கதைகளில் எது உண்மையானக் கதை என்பதனை யாரும் இதுவரை வரையறுத்துக் கூறவில்லை. இதனால் கதை சம்பந்தமான விமர்சனங்களும் கருத்துக்களும் தொடர்ந்து நீடித்த வண்ணமாக உள்ளது. அதைப்போன்று விநாயகருக்கு சித்தி, புத்தி, வல்லபை மற்றும் விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளான மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை என 15 மனைவியர் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. அதே வேளையில் விநாயகர் தனது தாய் பார்வதி போன்று மனைவி வேண்டுமென்று கூறியதாகவும், அப்படியொரு அழகான மனைவி கிடைக்கவில்லையென்றும் இதனால் அவர் குளங்களிலும் ஆறுகளிலும் குளிக்க வருகின்ற எந்தப் பெண்ணாவது தனது தாயைப்போன்று இருக்கிறரா என்று பார்க்கச் சென்றதாகவும், அதன் அடிப்படையில்தான் விநாயகர் கோவில்கள் குளக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் அமைக்கப்படுவதுமான கருத்துக்களும் மக்கள் மத்தியில் வியாபித்துள்ளன.
       சமீப  காலங்களாக விநாயகருக்கு மவுசு கூடியுள்ளது. இதற்கு காரணம் இந்து கோவில்களிலும், வீட்டுக் கன்னி மூலைகளிலும் விநாயகர் சிலைகள் வைத்திருந்தால் எந்த வினையும் அண்டாது என்கிற கருத்து மக்கள் மத்தியில் புதிதாக விதைக்கப்பட்டதாகும். இருப்பினும் தமிழ் உணர்வுள்ள இந்துக்கள் இதனை முழுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில் நமது கோவிலுக்குள் விநாயகர் நுழைந்து விட்டால், அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் வரும், ஐயர் நுழைவு வரும், சமஸ்கிருத மந்திரம் வரும், சர்க்கரைப் பொங்கல் வரும், பிள்ளையார் ஊர்வலம் வரும், அதனைத் தொடர்ந்து கலவரங்கள் வரும் என்பதாகும். தமிழ் கடவுளான முத்தாரம்மனும் மாடசாமியும் சொள்ளமாடனும் இசக்கியும் காணாமல் போவார்கள் என்பது அவர்களின் நியாயமான வருத்தமாக இருக்கிறது. இதற்கு விநாயகர் காரணமில்லை என்பது மட்டும் உண்மை.

       செப்டம்பர்  18, 2010 அன்று சென்னையை அடுத்த நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் 5 அடி உயர விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்டத் தகராறில் 30 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் காண்டீபன் தனது நண்பர்கள் சதீஷ், செந்தில், ஈஸ்வரன் ஆகியோர் துணையுடன் 25 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் பிரபாகரனை பீர்பாட்டிலால் கழுத்து, வயிறு, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தற்பொழுது இரு குடும்பங்களும் அநாதையாக தெருவில் நிற்கிறது.

       சென்னை  புதுவண்ணாரப்பேட்டை காவல்  நிலையத்தில் ஆய்வாளராக இருந்தவர் பகீர் அஹம்மத். இவர் தண்டையார்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அவரை தலை, உடல் மற்றும் முகத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது.
வருடம்தோறும்  விநாயகர் ஊர்வலம் வந்து  விட்டாலே ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதி குலைந்து கலவரங்கள் வெடித்துவிடுமோ என்கிற பயஎண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாகி விடுகிறது. அன்றைய நாள் மத விரோதங்களை தீர்த்துக் கட்டுகின்ற நாளாகவும் கருதப்படுகிறது. இதனால் எங்கு எப்பொழுது கலவரம் வெடிக்குமோ என்று தெரியாமல் ஒருவித பதட்டத்துடனே அந்த நாளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

       தொடக்க  கால கட்டத்தில் விநாயகரைக் கும்பிட்ட மக்கள் ஒரு கைப்பிடி பசுவின் சாணியில் அல்லது களிமண்ணில் விநாயகர் உருவம் செய்து, அதனை குளங்களிலும் ஆறுகளிலும் சில்லறைக் காசுகளை வைத்து கரைத்தனர். சிறுவர்கள் கரைக்கின்ற இடங்களில் குதித்து போட்டி போட்டுக்கொண்டு அந்த காசுகளை தேடி எடுப்பார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. இதற்கும் விநாயகர் காரணமில்லை.

       தமிழகத்தில் சங்கபரிவார் அமைப்பான இந்து  முன்னணி, பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்காக பெரியபெரிய விநாயகர் சிலைகளைச் செய்து அதை வீதிகளில் வைத்து, அந்த பகுதியில் லௌடு ஸ்பீக்கர்களை அமைத்து பாடல்களை ஒலிபரப்புகின்றனர். இதனால் அந்தந்த பகுதியில் வசிக்கின்ற குழந்தைகளுக்கு படிப்பதற்கும் முடியவில்லை. நோயாளிகள் வீட்டில் நிம்மதியாக தூங்கவும் முடியவில்லை. தெருக்கள் தோறும் விநாயகர் சிலைகள்; ஒவ்வொரு சிலையையும் பாதுகாக்க இரு காவலர்கள்.

       விநாயகர்  ஊர்வலத்தில் வருபவர்கள் பெரும்பாலும் குடித்துவிட்டு போதையில் ஆடி வருகிறார்கள். சிறுபான்மையினரின் ஆலயங்கள் மற்றும் பள்ளி வாசல்கள் இருக்கும் இடங்களில் வரும்போது அவர்களுக்குள் சைத்தான் நுழைந்து விடுகிறான். இதனால் சிறுபான்மையினருக்கு எதிராக ஆக்கிரோஷமாக கோஷங்கள் எழுப்புவதுடன் சிலர் இடுப்பில் கட்டியிருக்கின்ற வேட்டியை தூக்கிக் காட்டி வெறுப்பேற்றுகின்றனர். இந்நிகழ்வுகள், ”இன்னும் எதற்கு அமைதியாக நிற்கிறாய், வா சண்டைக்கு வா என அறைகூவல் விடுவது போன்று அமைந்துவிடுகிறது”. இதன்விளைவாக திண்டுக்கல், திருவல்லிக்கேணி, நாகூர், முத்துப்பேட்டை, திருப்பூர், கல்பாக்கம், வந்தாவாசி, சங்கரன்பந்தல், மதுக்கூர் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாகக் கல்லெறி சம்பவங்களும், கடை உடைப்புகளும், வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அரங்கேற்றப்படுகின்றன.

      பொதுமக்களுக்கு  எந்தவிதப் பிரச்சனைகளும் பாதிப்புகளும் வந்துவிடக்கூடாதென ஊர்வலத்திற்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் சிலைகளை கரைப்பதற்கு கிரேன் போன்ற இயந்திரங்கள் அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டு மெரினா கடற்கரையிலிருந்து சற்று உள்ளே தள்ளி கடலுக்குள் கரைக்கின்றனர். மதசார்பற்ற சனநாயக நாட்டில் பொதுமக்களின் பணமும் காவல்துறையினரின் நேரமும் வீணடிக்கப்படுகின்றன.  குமரி மாவட்டத்தில் வருடம்தோறும் ஏதாவது ஒரு ஊர்வலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் மிடாலத்தில் கலவரம் அரங்கேற்றப்பட்டது..

       அமைதிக்கான  பேச்சு வார்த்தையின் அடிப்படையில், ஊர்வலத்தைச் சீர்படுத்தும் நோக்கத்திலும், ஊர்வலக்காரர்கள் குறிப்பிட்ட பகுதியைத் தாண்டிச் சென்று கலவரத்தை ஏற்படுத்திவிடக்கூடாதென்றும் காவல் நிலைய அதிகாரிகள் 19 செப்டம்பர் 2010 அன்று காலையிலே ஊர்வலம் வரும் இருபுறங்களிலும் கயிறுகளைக் கட்டினர். மிடாலம் பாதிரியாரும் காலைத் திருப்பலியில், ஊர்வலம் வரும்போது  அந்த பக்கம் எவரும் போக வேண்டாமென்றும், கடற்கரைப் பகுதியில் இருக்கின்ற யாத்தினங்கள், கட்டுமரங்கள், வள்ளங்களை கயிறு கட்டியிருக்கின்ற பகுதிக்கு வெளியே கொண்டு வைத்துவிடுமாறும் அறிவிப்பு செய்தார். மீனவர்களும் அவ்வாறே அப்பகுதியில் வைத்திருந்த தங்களது தொழில் கருவிகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.

      கிள்ளியூர்  ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் கருங்கல் அருகேயுள்ள கூனாலுமூடு ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, 200 வாகனங்களில் ஆனந்த கூத்தாடியும், கோஷங்கள் எழுப்பியும் மிடாலம் கடற்கரையை நோக்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
      2010 ஆகஸ்ட் 17ஆம் தேதி பத்மநாபுரம் வருவாய்த்துறை அதிகாரித். தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படியும், அரசு வழிகாட்டுதலின்படியும் சரியாக மாலை 4 மணிக்கு மிடாலம் கடற்கரையை ஊர்வலம் அடைய வேண்டும். இருப்பினும் மாலை 3 மணியளவில் இருசக்கர வாகனங்களில் காவிக்கொடியுடன் வந்த ஒரு இளைஞர் பட்டாளம் கடற்கரையில் உட்கார்ந்து தாங்கள் கொண்டுவந்த மதுபாட்டில்களை திறந்து உண்டு குடித்து கூத்தாடியது. போதைத் தலைக்கேறிய அவர்கள் இடையிடையே அலைபேசியிலும் பேசிக்கொண்டிருந்தனர்.

      விநாயகர்  ஊர்வலம் உதயமார்த்தாண்டத்தை அடைந்தது. அங்கிருந்து 100 அடி தூரமுள்ள கடலுக்கு சிலைகளை எடுத்துக் கொண்டும், காவிக்கொடிகளைப் பிடித்துக் கொண்டும் கோஷத்தொடு கடற்கரையை நெருங்கி வருவதனைக்கண்ட அக்கூட்டம் கயிறு கட்டியிருந்த எல்லையைத் தாண்டி தங்கள் காலணிகளைக் கழற்றி வள்ளத்திலிருந்த வலைகளின் மேல் வைத்தனர். படகில் உட்கார்ந்து கொண்டிருந்த பெரியவர் மெர்லின், செருப்புகளைக் கீழ வையுங்க, வலைகளின் மேல் வைக்காதிங்க என்றார். ஆத்திரம் கொண்ட ஒருவன் அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தான். மற்றவர்களும் அவரை அசிங்கியமான வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தனர்.

      இதனை  தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு மீனவர், ”லே நம்ம  ஆளுகள   போட்டு அடிக்கிறானுவ. ஓடுவாலேய்” என்றார். அதற்குள்  டெம்போக்களில் கும்மாளமிட்டுக்கொண்டு கோஷத்தோடு வந்தக் கூட்டம் காவிக்கொடிக் கம்புகளை எடுத்துக் கொண்டு அடிப்பதற்காக ஓடி வந்தது. சிலர் கற்களை எடுத்து ஓடிவருகின்ற மீனவர்களைப் பார்த்து வீசினர். இதனால் மீனவர்களும் ஆங்காங்கே கிடந்த கற்களை எடுத்து பதில் தாக்குதல் நடத்தினர்.

      இவர்களின் இரச்சல் சத்தத்தை கேட்டு சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்களும், அவரவர் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மீனவர்களும் வெளியே வந்தனர். நடக்கின்ற கலவரத்தைப்பார்த்த மீனவர்கள் கும்பல் கும்பலாக, ”விடாதலேய் விடாதலேய்” என்று கத்திக்கொண்டு ஆவேசத்துடனும் முன்னோக்கிப் பாய்ந்து  வந்தனர். ஊர்முழுவதும் இரச்சல்  த்தம் வலுவடைந்தது. மீனவர்கள்  ஆவேசமாக   ஓடிவருவதனைக் கண்ட காவிப்படைகள், தாக்குப்பிடிக்க  முடியாது என உணர்ந்து   உயிருக்குப் பயந்து வந்த பாதையில் ஓட்டம் பிடித்தனர். கலவரக் காரர்களில் இரண்டுபேர் மீனவர்களிடம் மாட்டிக்கொண்டனர். ஆண்ட்ரோஸ் என்ற மீனவர் அவர்களை அடிக்கவிடாமல் தடுத்து, போய்விடுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என இருகரங்காளால் வணங்கி விட்டு பைக்கை எடுத்துக்கொண்டு பறந்து சென்றனர்.
      வந்த  பாதையில் ஓட்டம் பிடித்த  காவிக்கும்பல் உதயமார்த்தாண்டத்திலுள்ள கடைகளையும், வீடுகளையும் அடித்து நொறுக்கியது. இதில் அந்திரியாஸ், டேவிட் குமார், லாசர் ஆகியோரின் வீடுகள் முற்றிலும் தரைமட்டமானது. இன்னொரு கொள்ளைக் கும்பல், கடையிலுள்ள பொருள்களை டிம்போவில் ஏற்றிவிட்டு, கொண்டுவந்த விநாயகரை ரோட்டில போட்டுவிட்டு, கிடைத்தது லாபமென தப்பி ஓடியது. இன்னொரு கொலைவெறிக் கும்பல் நீரோடி பேருந்தினை அடித்து நொறுக்கியது. பேருந்தில் பயணம் செய்த ராமன்துறை மீனவ கிராமத்தைச் சார்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் நிஷாந்தின் கையை ஒடித்தது. அதே ஊரில் வசிக்கும் சிவரஞ்சினையை காயப்படுத்தியதுஇஸ்லாமிய சகோதரி ஒருவரை மானபங்கப் படுத்த முயன்ற காவி படையினரிடமிருந்து அவரை புனிதா என்ற மீனவ பெண் கௌன்சிலர் காப்பாற்றிய சம்பவமும் நடந்தது. இன்னொரு குடிகாரக் கும்பல், பொதுவிநியோகக் கடையை அடித்து நொறுக்கியதோடு அங்கிருந்த மண்ணணையில் காவிக்கொடியை நனைத்து கடைகளுக்கும், வீடுகளுக்கும், ஆட்டோவுக்கும் அரசுப் பேருந்துக்கும் தீ வைத்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வண்டியைவிட்டு இறங்கி கடற்கரையை நோக்கி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தக்கலை, குளச்சல் பகுதியிலிருந்து தீயணைப்புப் படையினர் விரைந்தனர். தீயணைப்பு வாகனத்தை கலவரக் கும்பல் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆம்! இதுதான் பக்தியின் உச்சகட்ட லட்சணம்.

      இக்கலவரத்தைக் கேள்விப்பட்டு,மண்டைக்காடு பகுதியிலுள்ள வெட்டுமடையில் விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்துக் கொண்டிருந்த கூட்டம் 90 சிலைகள் கரைத்த நிலையில், கரைக்காத 51 சிலைகளை மண்டைக்காடு கோவிலின் முன்பகுதியில் கொண்டுவந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் டி.ஐ.ஜி. சண்முக ராஜேந்திரன், நெல்லை மாவட்ட எஸ்.பி. ஆஸ்ராகர்க், மாவட்ட வருவாய் அதிகாரி கலைச்செல்வன், கல்குளம் தாசில்தார் பால்சுந்தர் ஆகியோர் சிலைகளைக் கரைக்கும்படி கெஞ்சிக் கொண்டிருந்ததுதான் வேடிக்கை. கைபேசியில் இரகசிய அழைப்பு வந்தபிறகுதான் இக்கும்பல் இரவு 8 மணிக்கு மீதமிருந்த விநாயக சிலைகளைக் கடலில் கொண்டு கரைக்க சம்மதம் தெரிவித்தது.
      இதைப்போன்று மேல்புறம் ஒன்றியம் சார்பில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்வன் மற்றும் பா.ஜ. மாவட்ட செயலாளர் விஜயபிரசாத் தலைமையில் கொண்டுவரப்பட்ட 150 சிலைகளையும், குழித்துறை நகர இந்து முன்னணித் தலைவர் ராஜேஷ் மற்றும் பா.ஜ. மாவட்டப் பொதுச்செயலாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் கொண்டுவரப்பட்ட 17 சிலைகளையும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்காமல், மிடாலத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட பின்புதான் கரைப்போம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      உதயமார்த்தாண்டத்தில்  நடந்த கலவரச் சம்பவங்கள் ஓய்ந்த நிலையில் கத்தோலிக்க பாதிரியார்களான கென்னடி, கீளீட்டஸ், சேவியர் ராஜ், கில்டஸ், கிளாரட், ஆண்ட்ரோஸ் ஆகியோர் ஒருபுறம் மிடாலத்தில் கூடி விவாதிக்கின்றனர். இன்னொருபுறம் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி, மாவட்டத் தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் சந்திரகுமார், இந்து முன்னணி மாவட்டத்தலைவர் செல்வன், கீழ்குளம் டவுண் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கூடி விவாதிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் அரசு வாகனத்தின் மூலம் சம்பவ இடத்திற்கு பயணம் செய்துகொண்டு வரும்போதே கைபேசி மூலமாக இவர்களைத் தொடர்பு கொண்டு சமாதானம் பேசி வந்தனர். .
      மாவட்ட  ஆட்சித்தலைவரும், மாவட்ட கண்காணிப்பாளரும் உதயமார்த்தாண்டத்தில் வந்து முதலில் பொன்.ராதாகிருஷ்ணனையும் அவரோடு இருந்தவர்களையும் சந்திக்கிறார்கள். பின்பு, மிடாலம் வந்து கத்தோலிக்கப் பாதிரியார்களைச் சந்திக்கிறார்கள். அப்பொழுது, மீனவ மக்கள் அனைவரும் இவர்களைச் சுற்றி சூழ்ந்து நிற்கிறார்கள். இவர்கள் மக்களுக்குப் புரியாத   ஆங்கில மொழியில் உரையாடுகிறார்கள். இவர்கள் என்னப் பேசினார்கள் என்று மக்களுக்குப் புரியவில்லை.
      30 நிமிடங்களுக்குப்பின்பு மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு மக்களைப்பார்த்து, ”மீனவ மக்கள் என்னை அடித்து விடுவார்கள் என்ற பயத்துடனே  இங்கு வந்தேன். ஆனால் நீங்கள் நல்ல மக்கள்” எனப் புகழ்ந்து விநாயகரை கடலில் கரைக்க அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் நின்ற ஒரு மீனவர், ‘எங்கள கலச்சு புள்ளிபிடிக்க போலிஸ் வருதாமே’ என்றார். இதுதான் சரியான வாய்ப்பென கருதிய மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ”அரசு பஸ்ஸை நீங்களா எரித்தீர்கள்? வீடுகளை நீங்களா அடித்து நொறுக்கினீர்கள்? கடைகளை நீங்களா எரித்தீர்கள்? கடையிலுள்ள பொருட்களை நீங்களா வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சென்றீர்கள்? நாங்க ஏன் உங்கள கலச்சு பிடிக்கணும்? அதனால விநாயகர் சிலைகளை அவங்க கரச்சிட்டு  போகட்டும். நாங்க அவங்கள அரஸ்ட் பண்றோம்” என்றார்.
       இரவு  11 மணிக்கு காவல்துறைப் பாதுகாப்புடன் கலவரக் கும்பல் கும்மாளமிட்டபடி விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்தன. கடலின் அலைகளுக்கு பயந்து சிலர் விநாயகர்ச் சிலைகளைக் கடலிலில் தூக்கி வீசிச் சென்றனர். இவ்வளவு கலவரம் நடத்திய கலகக்காரர்களை ஏன் சிலைகளைக் கடலில் கரைக்க அனுமதித்தீர்கள் என்று கேட்டதற்கு, ”சாமியார்மாருவதான்(பாதிரியார்கள்) சரிசரி போட்டுபோட்டு என்று சொல்லி கரைக்கச் சொன்னாங்க. இப்ப அவங்களுக்கென்னா அதிகாரிகளோடு ஒண்ணுக்கொண்ணா நெருக்கமாயிட்டாங்க. இன்னும் அவங்களுக்குத் தேவையானத சாதிச்சிடலாமில்லயா” என்றார் ஒரு வயதான அம்மா.
1982 மண்டைக்காடு கலவரத்தை மதக்கலவரமாக சித்தரித்து திசை திருப்பியது போன்று மிடாலம் கலவரத்தை கலகக்காரர்கள் திசைதிருப்பி விடாமல் இருக்க, ”விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த மோதல்இரு மதங்களுக்கு இடையேயான பிரச்சனையல்ல” என மாவட்ட ஆட்சியர் பத்திரிகை வாயிலாக மறுநாளே அறிக்கையிட்டார். ஏனெனில் இதனை மதக்கலவரமாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்பது சிலரின் எண்ணமாக இருந்தது.
      
      21.09.2010 தினத்தந்தி பத்திரிகை இவ்வாறு கூறுகிறது,”நேற்று காலையில் வீடுகள் மற்றும் பொருட்களை இழந்த பொதுமக்கள் வீதிகளில் வந்து அழுது புலம்பினர். இதனால் அந்த பகுதியில் வீதியெங்கும் அழுகுரல் கேட்டவண்ணம் இருந்தது”. இக்கலவரத்தில் 4 வீடுகள் முழுமையாகவும் 6 வீடுகள் பகுதி அளவாகவும் சேதமடைந்தது. இதேப்போல் 1 ரேஷன் கடை, 16 கடைகள் மற்றும் இரு சக்கர வாகனங்களும், ஒரு ஆட்டோவும், ஒரு அரசு பஸ்ஸும் தீக்கிரையாக்கப்பட்டன.
      20.09.2010 அன்று தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, குஷ்பு, ஹெலன் டேவிட்சன், சுரேஷ் ராஜன் ஆகியோர் கலந்து  கொண்ட  முப்பெரும் விழா கோலாகோலமாக  நடைபெற்றது. கலவர  நேரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் மறுநாள் நாகர்கோவிலில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரியில் தங்கியிருந்தனர். இருப்பினும் மாநாட்டிலோ அதற்கு பின்போ கலவரம் குறித்து முதல்வர் ஒருவார்த்தை கூட பேசவில்லை.
      
பஸ் டிரைவர்  சிவகுமார் கொடுத்த புகாரில், பஸ் எரிக்கப்பட்டதில் ருபாய் 15 லட்சம் சேதம் எனவும், கூட்டுறவு தனி அலுவலர் ஜெயக்குமார் கொடுத்த புகாரில் ரேசன்கடை பொருட்கள் சேதமதிப்பு 24 ஆயிரத்து 755 ருபாய் எனவும், டேவிட் குமார் கொடுத்த புகாரில் தனது வீடும் கடையும் சேதமடைந்த மதிப்பு 7 இலட்சத்தி 17 ஆயிரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மிடாலம் கிராமத்தைச் சார்ந்த ஐம்பது பேர் மூன்று வேன் ஒரு காரில் கருங்கல் காவல்நிலையம் வந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இந்த புகார்களின்பேரில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவதாஸ் வழக்குப் பதிவு செய்தார். கொடுக்கப்பட்ட  அத்தனைப் புகார்களிலும், ”கண்டால் அடையாளம் தெரியும் நபர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
      
இச்சம்பவம்  குறித்து மிடாலம் பங்குச்  செயலாளர் ஜார்ஜ் ஆன்றனி கூறும்போது, ”கடந்த 18ஆம் தேதி மாலை உதயமார்த்தாண்டத்திலிருந்து மிடாலம் வரை திடீரென காவிக் கொடிகள் கட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம். போலீசார் வந்து கொடிகளை அப்புறப்படுத்தினர்” என்றார். வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் காவிக்கொடிகள் கட்டப்பட்ட சம்பவம் நடந்த பின்பும் காவல்துறை உஷார் ஆகவில்லை என்பது ஆச்சிரியத்திற்குரிய விசயம். தக்கலைப் பகுதியில் முதல்வர் கருணாநிதியை வரவேற்று தி.மு.க.வினர் வைத்திருந்த ஃப்ளக்ஸ் போர்டுகளை பட்ட பகலிலேயே ஒரு கும்பல் அடித்து சேதப்படுத்தியது. அதுபோல கொட்டாரம் பகுதியில் தி.மு.க. சார்பில் சாலையோரம் வைத்திருந்த டியூப் லைட்டுகள், விநாயக ஊர்வலக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்குப் பிறகும் காவல்துறையினர் உஷாராகவில்லை.
     
    மிடாலம் ஊர்வலத்திற்கு முன்னிலை வகித்த கீழ்குளம் டவுண் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன், ”அங்கு கட்டப்பட்டிருந்த கயிறைத் தாண்டிச் சென்றவுடன், ‘நீங்கள் எப்படி கயிறைத் தாண்டி வரலாம்’ எனக்கேட்டு அப்பகுதியினர் கற்களை வீசினர்” என்கிறார். இதன்மூலம் நாங்கள்தான் ஊர்வலக் கட்டுப்பாட்டினை முதலில் மீறினோம் என்பதனை அவர் ஒப்புக் கொள்கிறார். அங்கு எரிக்கப்பட்ட கடைகளில் இரண்டு தவிர மீதியெல்லாம் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் கடைகள் என காவல்துறை அறிக்கைகளும் நேரடி ஆய்வுகளும் புலப்படுத்துகிறது. ”பாதிக்கப்பட்ட மக்கள் எதிர் நடவடிக்கையில் இறங்காமல் அரசையே நம்பியுள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி” என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர்.
      இச்சம்பவம்  குறித்து மாவட்டச் செயலர் முருகேசன், ”மிடாலத்தில் நடந்த மோதல் திடீரென்று ஏற்பட்டதல்ல; திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. அரசியல் லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டு மக்களை மோதவிடும் இச்செயலை மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.

      கலவரம்  குறித்து பாதிக்கப்பட்ட  உதயமார்த்தாண்டம் பகுதியைச் சார்ந்தவர்களை சந்தித்தப்போது, இக்கலவரம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்றும் கலவரத்திற்கு முன்பாக ஒவ்வொரு இந்து வீடுகளுக்கும் முன்பு விநாயகர் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தனர் என்றும் கூறுகின்றனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதனையும், தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளையும் பார்க்கும்போது இந்துக்களின் வீடுகளுக்கு இடையிடையே இருந்த கிறிஸ்தவ வீடுகளை மட்டும் கலகக்காரர்கள் இனம் கண்டு அடித்து நொறுக்கியுள்ளது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இதன்மூலம் இக்கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியென்பது உறுதியாகிறது. விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பாக, உதயமார்த்தாண்டம் பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன், பழநி, அரசு வாகன நடத்துநர் வீரமோகன் மற்றும் சிலர் உதயமார்த்தாண்டத்தில் இரகசிய கூட்டம் நடத்தியதாகவும்  பாலவிளை கிராமத்தில் விநாயகர் சிலையை  டெம்போவில் ஏற்றும்போதே ஆயுதங்களையும் கற்களையும் வாகனங்களில் ஏற்றிச் சென்றதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
      இதற்கு  முக்கிய காரணம்:(1) அயோத்தி வழக்குத் தீர்ப்பின் முன்னோட்டமாக கலவரத்தை உருவாக்க வேண்டுமென்றும் (2) பாரதிய ஜனதாவின்  ஜூலை போராட்டத்தின் தொடர்ச்சியாக  கடந்த சட்டசபைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு இந்து மக்களின் ஓட்டுக்களை வாங்கவும் இக்கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக உளவுத்துறைச் செய்திகள் கூறுகிறது.
      சம்பவ இடத்தில் 5 நாட்களாக  அநாதையாகக் கிடந்த î TN 74 Z 0817, TN 74 V 1724, TN 72 L 246, TN 74 V 4145, TN 75 A 6625, TN 75 4066, TN 75 B 4509, TN 75 A 2375, TN 74 T 3042, TN 74 T 3042, TN 74 U 8419  கலகக்காரர்களின் பத்து மோட்டார் சைக்கிள்களையும் பி.ஜே.பி. கொடி கட்டிய TN 01 AH 3160 என்ற போலிரோ வாகனத்தையும் மீனவர்கள் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். அதனை அவர்கள்   டெம்போவில் ஏற்றிச் சென்றனர்.    நன்றி: ஜோ.தமிழ்செல்வன்   

Monday, 12 March 2012

பரதவர், பரவர், அல்லது பரதர்

பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான சாதியினர். பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள். இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலை நாட்டியவர்கள். பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. இவர்கள் சந்திர வம்சத்தினர். பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே.

இலக்கியத்தில் பரதவர்
பண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.

பரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாக பிரிந்தார்கள். அவ்வுட் பிரிவுகளின்படி தொன்மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

பழம் குலப் பெயர்கள்
பரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், ஆரிய நாட்டார் (ஆரியன்), கங்கை நாட்டார், சிந்து நாட்டார் சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு. இதில் ஒரு பெயரான ஆரியன் என்ற பெயர் சோழநாட்டு பட்டினவரைக் குறிக்கும் பெயராகும். இது இன்றும் வழக்கில் உண்டு. துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். அதில் சோழநாட்டுத் துறைமுகங்களில் வாழ்ந்த பட்டினவர் ஆரியன் என்று அழைக்கப்பட்டார்கள். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும். பட்டினவர் தொழில்களாக கடல் ஓடுதல், கடல் வாணிபம் செய்தல், கடற்படை வீரர்களாக அரசபடைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.

சிறப்புக்கள்
பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முன்நாட்களில் பாண்டியர் என்றும், படையாட்சியர், வில்லவராயர், பூபாலராயர், பாண்டியதேவர், சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ, மச்சாடோ, மச்காறேன்ஹாஸ், ரோட்ரிகோ என்ற போர்த்துக்கீசிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பரத குலத்தினர் பேரரசர் குலத்தவர் என்பதற்கான பல அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன.

மட்டக்களப்பில் முக்குவச் சட்டம்

இப்பொழுதுள்ள கிழக்கு மாகாணப் பிரதேசமானது, பொதுவாக “மட்டக்களப்புச் சமூகம்” என்று குறிப்பிடப்படுவதாகும்.

மட்டக்களப்புச் சமூக அமைப்பு, குறிப்பாக அதன் சமூக ஒழுங்கமைப்பிலும் (Social Organizations), சாதியமைப்பிலும், யாழ்ப்பாணத்தில் நிலவும் முறைமையிலிருந்து நிதர்சனமான வேறுபாடுகளைக் கொண்டது.
வரலாற்று ரீதியாக இது நீண்டகாலம் கண்டியர் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் சுய ஆதிக்கமுள்ள பிரதானிகள் இருந்துவந்தனர் என்ற அபிப்பிராயம் உண்டு.
இங்குள்ள “குடி” முறைமை முக்கியமானதாகும். ஒவ்வொரு சாதிக்கும் பல்வேறு குடிகள் உண்டு. அக்குடிகள் புற மண குழுமங்களாகும் (Exogamons). [குடிமுறைமை யாழ்ப்பாணச் சமூக அமைப்பிலும் ஒரு காலத்தில் நிலவி இருத்தல் வேண்டும். அங்கு "குடி", "பகுதி" என்பன வம்சவழியினைக் (Lineage) குறிப்பவை.] மட்டக்களப்பில் குடிமுறைமை, கோயில் ஆதிக்கம் போன்றவற்றால் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள இந்து சமய முறைமை, யாழ்ப்பாணத்தில் நாவலருக்குப் பின் ஏற்பட்டதுபோன்று “அடுக்கமைவுபூர்வமாக வரன்முறைப்படுத்தப்பட்ட ஒன்று” அன்று. இதனால் மட்டக்களப்பில், “முக்குவர்” நில ஆதிக்க முதன்மை நிலையுடையோராய் விளங்கினாலும், அவர்களுக்கு (யாழ்ப்பாணத்தில் வெள்ளாளருக்கு உள்ளது போன்று) சடங்காச்சார முதன்மை” (Ritual Supremacy) இல்லை. வெள்ளாளர், சீர்பாதக்காரர் ஆகியோரும் தத்தம் முக்கியத்துவத்தினை வற்புறுத்துவர்.
மட்டக்களப்பின் புவியியற் கூறுகள் காரணமாக அதன் உணவுமுறைகள் தனித்துவமானவை.
மத ஒழுகு முறையில், சமஸ்கிருதமையப்பாடு கிடையாது. இதனால், “ஆகம” முறை முதன்மை அங்கு இல்லை. கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றி ஈசுவரர் கோயில் வீரசைவ மரபின்படியே கோயிலொழுகு முறையைக் கொண்டது.
மட்டக்களப்பின் கவனிக்கப்பட்ட ஒரு முக்கிய அம்சம் அது சோழ ஆட்சியின் ஒரு கூறாக அமைந்திருந்தது என்பதாகும். இதனால் பொலநறுவை – மட்டக்களப்பு – மூதூர் – திருகோணமலை ஆகிய பிரதேசங்களினனூடே ஓர் ஒருமைப்பாடு நிலவியிருத்தல் வேண்டும். இந்த ஒரு நிலைப்பாட்டின் எச்ச சொச்சங்களாக இப்பகுதிகளில் இப்பொழுது காணப்படும் சிவன் கோயில்கள் உள்ளன. இவ்வமிசம் இன்னும் நன்றாக ஆராயப்படவில்லை. (த.சிவராம் தமது சில கட்டுரைகளில் இவ்வமிசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளார். இது பற்றி முதன் முதலில் புலமைச்சிரத்தையினை ஏற்படுத்தியவர் அவரே).
மட்டக்களப்பில் முக்குவச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக முக்கியமானதெனினும் இப்பொழுது அது வழக்கில் இல்லை.
மட்டக்களப்புப் பிரதேசத்தின் மிகப் பிரதானமான சனவேற்ற (demographic) அமிசம், அது பாரம்பரிய முஸ்லிம் வாழிடங்களைக் கொண்டது என்பதாகும். இந்த முஸ்லிம்கள் மொழியாலும் (தமிழ்), சமூக ஒழுங்கமைப்பு முறையாலும் (குடிமுறைமை), தமிழரோடு இணைந்தவர்கள். சில நில ஆட்சியிலும் நிறையப் பொதுமை உண்டு.
இங்குள்ள முஸ்லிம்கள் விவசாயத்தை தளமாகக்கொண்டவர்களாதலால், இவர்கள் தமிழர்களிலிருந்து பிரிக்கப்படமுடியாதவர்கள்.
இங்கு தமிழ் – முஸ்லிம் சகசீவனம் என்பது இருபகுதியினரது தனித்துவங்களையும் உரிமைகளையும் கணக்கெடுப்பதிலும், ஒற்றுமையான வாழ்வு ஒழுங்குமுறையை வகுத்துக் கொள்வதிலும் தங்கியுள்ளது.
இப்பிரதேசத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை.
திருகோணமலை
மட்டக்களப்புப் பிரதேசம் போன்று இப்பிரதேசமும், அதற்குரிய தமிழ்நிலை வரலாற்றாய்வுகளை இன்னும் முழுமையாகப் பெறவில்லை.
திருகோணமலை மாவட்டம் (கந்தளாய், தம்பலகாமம், மூதூர் ஆகியன உட்பட) சோழராட்சிக் காலத்தில் முக்கியம் பெற்ற இடமாகும். இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட தென்- மேற்கு நோக்கிய பெயர்வின் பின்னர் (13ஆம் நூற்றாண்டின் பின்னர்) இப்பகுதி இலங்கை வரலாற்றில், ஏறத்தாழ ஒல்லாந்தர் வருகைவரை, அதிகம் பேசப்படாத ஒரு பிரதேசமாகவே போய்விட்டது.
மட்டக்களப்பின் தெற்குப் பிரதேசங்களும், திருமலை மாவட்ட வட பிரதேசங்களும் 1940கள் முதலே சிங்களக் குடியேற்றத்துக்கு உட்பட்டன. அங்கு ஏற்கனவே சில “புராண” (பழைய) சிங்களக் கிராமங்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் 1940 களின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியினரில் தமிழ், முஸ்லிம் சீவிய இருப்பு பிரச்சினையாக்கப் பெற்றது. இப்பகுதியின் வாழ்வியல் அமிசங்கள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. -இனி ஒரு.

Sunday, 18 December 2011

மீன்பிடிச் சட்டம் - மீனவர்களை மிரட்டும் புதிய பூதம் 

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். காலம் இந்திய மீனவர்களின் வயிற்றில் அடித்துக்கொண்டேயிருக்கிறது. 2009 நவம்பர் 9 பியான் புயல் ஆழ்கடல் விசைப்படகு மீனவர்களின் மீது நிகழ்த்திச் சென்ற சேதம் எண்ணக் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. விபத்துகள் எதிர்பாராதவை. விபத்தின் விளைவை மட்டுப்படுத்த முடியும். விபத்து அபாயத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும். விபத்துகளின் அரசியலும் பொருளியலும் கூர்ந்து படிக்கத் தகுந்தவை. சில விபத்துகள் இயற்கையானவை. சில விபத்துகள் உருவாக்கப்படுபவை. புறக்கணிப்பு அரசியல் விபத்துகளை மேலும் குரூரமாக்கிவிடுகிறது. கடல் சார்ந்த வாழ்வு இடர்களால் ஆனது. நெய்தல் வாழ்க்கையின் சாரத்தை இரண்டே வார்த்தைகளில் குறித்துவிடலாம். இழப்பு, மரணம். சங்க காலம் முதல் தொழில்நுட்பமும் தொலைத்தொடர்பும் மலிந்து கிடக்கும் இந்நாள்வரை நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகவே நீடிக்கிறது.சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிகபட்சக் கடல்மீன் அறுவடை செய்கிறது. இது வெறும் புள்ளியியல் தரவு மட்டுமே. இன்று இந்தியாவின் கடற்பரப்பு அதிநுட்ப மீன்பிடி முறைகளாலும் அந்நியக் கப்பல்களாலும் ஊடுருவப்பட்டுக் காயமுற்றுக்கிடக்கிறது. 7600 கிலோமீட்டர் கடற்கரையில் வாழும் ஒரு கோடி மீனவ மக்களில் பத்து இலட்சம் பேர் நேரடியாகக் கடல் மீன்பிடித்தலில் ஈடுபடுபவர்கள். சற்றொப்ப மூன்று இலட்சம் இந்தியப் படகுகள் இங்கு இயங்குகின்றன. 1960கள்வரை இந்த மீனவர்கள் கட்டுமரங்களிலும் சிறு படகுகளிலும் கடலில் சிறு தொலைவு சென்று எளிமையான வலைகளைப் பயன்படுத்தித் தங்கள் வயிற்றை நிரப்புமளவுக்கு மீன்பிடித்து வந்தனர். கெட்டுப்போகுமுன் கொண்டுசேர்ப்பதற்கு வாய்ப்புள்ள சிறுநிலப்புரப்புக்குள் சிறிதளவு மீன் கொண்டுசெல்லப்பட்டது. மீன் ‘தீட்டு’ என்பதான சமூகப் புறக்கணிப்புத் திரை காலப்போக்கில் விலகியது. 1960களில் நாட்டின் புலால் உணவுத் தேவையை முன்னிறுத்தி விசைப் படகுகளும் உயர்தொழில்நுட்பங்களும் இந்தப் பாரம்பரிய மீனவர்கள் மீது திணிக்கப்பட்டன. தொலைவுக் கடலுக்குச் சென்று நிறைய மீன்களைப் பிடித்துவந்து நிறையப் பொருள் ஈட்டி வசதிமிக்க வாழ்க்கையைச் சொந்தமாக்கிக்கொள்ளும் ஆசை அந்த எளிய சமூகத்தின் மூளைக்குள் செலுத்தப்பட்டது. மீனுக்கான சந்தை விரிந்தது - நாட்டுக்குள்ளும் வெளியேயும். பெரும் முதலீடுகளும் பன்னாட்டு வணிகமும் மீன்வளத் துறைக்குள் நுழைந்தன. விசைப்படகு, நைலான் வலை, இழுவைமடி, மோட்டார்ப் படகுகள் என்பதாக ஒவ்வொன்றாய்த் தொழில்நுட்ப ஒட்டகம் தன்னை நெய்தல் கூடாரத்துக்குள் நுழைத்துக்கொண்டது.
மீன்பிடி நடவடிக்கைகளின் பெருக்கத்தால் கரைக்கடலில் வளப் பற்றாக்குறை, இடநெருக்கடி, தொழில் மோதல், சகோதர யுத்தம், சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்பதாகக் கடற்கரை நிலம் அமைதியிழந்து போயிருக்கிறது. ஏற்றுமதி சார்ந்த மீன்வணிகம் கடற்கரைக்குள் கால் பதித்தது. மேலைநாட்டுச் சமூகங்களின் உணவுத் தேவை சார்ந்த ஏற்றுமதியை முன்னிட்டு இரால், சிங்கிரால், கணவாய், சூரை, வத்தை, கலவாய், நண்டு ஈறாக வெவ்வேறு வகையான மீன்கள் உள்ளூர்ச் சந்தை களுக்குப் பிரியாவிடை சொல்லி வெளி நாடு போயின. உணவு வேளாண் கழகத்தின் (FAO) மீன் இருப்புகள் உடன்படிக்கை (1995) கீழைநாட்டு மீனவர்கள் ஆழ்கடலில் பிடிப்பாரின்றிக் கிடக்கும் அபரிமிதமான சூரை மீன்களைப் பிடித்துவர அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தியது. இடம் கணிப்பான் (GPS), மீன்கூட்டம் கணிப்பான் (Fish Finders) திசைகாட்டி முதலிய கருவிகளுடன் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கப் போயினர். இவர்களை ஊக்குவித்து வந்த நடுவண் அரசு 2001இல் சுறாமீன்பிடி தடைச்சட்டம் கொண்டுவந்தது. தூத்தூர் மீனவர்கள் நூறுபேர் நாடாளுமன்றத்தின் முன்னால் ஒருவாரமாக நடத்திய கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்து இந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. அதுபோலவே நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் 2007இல் அமல்படுத்த முயன்ற சாமிநாதனின் கடற்கரை மேலாண்மை அறிவிக்கை வரைவும் திரும்பப் பெறப்பட்டது. பூதம் அதோடு அடங்கவில்லை. மீன்பிடி ஒழுங் காற்று மற்றும் மேலாண்மைச் சட்ட முன்வடிவம் (2009) மீனவர்களை மிரட்டும் புதிய பூதமாகக் கிளம்பியுள்ளது.
கடற்கரைச் சமூகங்களைக் கண்டுகொள்ளாத அரசுகள் ஒருபுறம்; கடற்கரை மற்றும் கடல்வளங்களைக் குறிவைத்து நெய்தல் மக்களை அங்கிருந்து விரட்டியடிக்கச் சட்டங்களைத் தங்கள் ஆயுதமாய்ப் பயன்படுத்த முயலும் வர்த்தக, பெருந்தொழில் முதலைகள் மறுபுறம்; இதற்கு இசைவாகச் சட்டங்களை உருவாக்கிக் கொடுத்துத் தங்களை வளர்த்துக்கொள்ள அலையும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் இன்னொருபுறம். தணியாது வேகும் காட்டுக்குள் திணறிக்கொண்டிருக்கும் சுண்டெலிகள் போல் இந்தியாவின் கடலோரங்களில் ஒரு கோடி மீனவமக்கள் தத்தளிப்பதை உலகம் கவனம் கொள்ளவில்லை. அவர்கள் எதிர்பாராத இழப்புகளால் கலங்கி நிற்கையில் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளால் ஆட்சிக்கட்டிலில் (சாய்வுப்படுக்கையில்) கிடக்கும் ஆட்சியாளர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டுவிடுகிறது. ‘மீனவர்களைப் பற்றிய செய்திகளை மிகைப்படுத்தக் கூடாது’ என்று பழுத்த தமிழினத் தலைவர் ஊடகங்களுக்கு அறிவுரை சொல்கிறார்.
கர்நாடகா, கோவா, குஜராத் கடல்பகுதிகளில் 2009 நவம்பர் 11 அதிகாலையில் ஏற்பட்ட புயல் 35 வருடங்களில் குறிப்பிடத்தக்க கடற்பேரிடர். ‘இதுபோன்றவொரு புயலைத் தங்கள் கடல் வாழ்க்கையில் இதுவரை சந்தித்ததே இல்லை’ என்று அவர்கள் குறிப்பிடுவதிலிருந்து இதன் கோரத்தைப் புரிந்துகொள்ளலாம். இந்த நாட்டில் தொலையுணரித் தொழில்நுட்பம், காலநிலை கணிக்கும் நுட்பம், தொலைத்தொடர்பு நுட்பங்கள் எல்லாம் கத்தரிக்காய்ப் போல மலிந்துகிடப்பதாய்ச் சொல்கிறார்கள். புயல் குறித்து முன்னறிவிப்பு செய்திருக்கலாம்; பேரிடர் நிகழ்ந்த பிறகேனும் கடலில் சிக்கிய மீனவர்களைக் காலவிரயமின்றிச் சென்று மீட்டிருக்கலாம்; இவை பற்றிய தகவல்களைச் சார்ந்த மாநில அரசுகள் பொறுப்பாகப் பரிமாறியிருக்கலாம். மீட்பு நடவடிக்கையில் கடற்படை, கடலோரக் காவற்படை, மீன் துறை, மருத்துவத் துறை என்று எல்லாவற்றையும் ஈடுபடுத்தியிருக்க முடியும் . . . ஆனால் எதுவும் சரியாக நடக்கவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சார்ந்த சுமார் 300 படகுகள் நவம்பர் புயலில் சிக்கிக் கொண்டன. விசைப்படகிலிருந்து அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இராட்சத அலைகள் மோதி மூன்று படகுகளைக் கவிழ்த்துவிட்டன. எட்டுப் பேர் மாயமாயினர். தப்பி வந்த மீனவர்களில் பலர் பேரிடர் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. உடுக்கை இழந்தவன் கைபோல் ஓடிச்சென்றிருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் அமைச்சர்களும் அந்நெருக்கடியைச் சாவதானமாய்க் கையாண்டனர். மக்கள் கொடுத்த தகவல்கள் ஊடகங்களில் மறைக்கப்பட்டன. ‘குடும்ப’ ஊடகங்கள் ஒருபடி மேலே போய் எட்டு மீனவர்களைப் பத்திரமாய் மீட்டுவிட்டதாகவும் 25 மீனவர்களை இலட்சத்தீவில் பத்திரமாய் வைத்திருப்பதாகவும் படகுகள் அங்கு கரை சேர்ந்திருப்பதாகவும் நிறையச் செய்திகள் வெளியிட்டன. நாங்கள் சொன்ன செய்தி ஏன் மறைக்கப்பட்டது என்று மீனவர்கள் கொதித்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் கொடுத்த உண்மையான பேட்டி மறுநாள் வெளிவந்தது நாடகத்தின் உச்சம். படகுகள் மூழ்கி, மீனவர்கள் மாயமான செய்தி கேட்டுப் பெண்கள் புலம்பியழுதுகொண்டிருந்தனர். செய்தி சேகரிக்க வந்த புகைப்படக்காரர் ஒருவர் ‘எல்லாரும் சிரிச்சுக்கிட்டே போஸ் குடுங்கம்மா’ என்றார். ‘படகை இழந்து, சொந்தங்கள் கரைசேராத துக்கத்தில் அழுது கொண்டிருக்கிறவங்களை சிரிக்கச் சொல்றீங்களே, இது உங்களுக்கு நல்லாயிருக்கா?’ என்று பக்கத்தில் நின்ற இளைஞர் ஒருவர் கோபித்திருக்கிறார். ‘இல்லை, எல்லாப் பிரச்சினைகளுக்கும் அரசு நடவடிக்கை எடுத்து சால்வ் பண்ணியாச்சு, மீனவர்கள் மகிழ்ச்சியா இருக்காங்கன்னு பேப்பர்ல செய்தி போடுன்னு அங்கே நிக்கிறவங்க சொன்னாங்க . . .’ என்று அந்தப் புகைப்படக்காரர் பக்கத்தில் நின்ற கரைவேட்டிக் கூட்டத்தைக் கைகாட்டியிருக்கிறார்.
அரசின் புறக்கணிப்புக்கு எதிரான குரலை ஆண்டுதோறும் நவம்பர் 21 இல் மீனவர்கள் வழக்கமாகப் பதிவுசெய்து வந்தனர். இவ்வாண்டில் கொண்டாட்டமாக இல்லையென்றாலும் கருப்புத் தினமாகவாவது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீனவர் தினத்தைக் கடைபிடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதற்குக் காரணம் யார்? மீனவனின் குரல்வளையை நெறிக்கும் அரசா, அதற்குத் துணை போகும் மீனவப் பிரதிநிதிகளா? மீனவர் தினம் தவிர்க்கப்பட்டதன் மர்ம முடிச்சு இன்னும் அவிழவில்லை.
பிணவறைக்கு வந்த உடலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு போகிற அனாயசமான அடவுகளைக் கரைவேட்டிக் கூட்டமும் மாவட்ட அதிகாரிகளும் தூத்தூரில் பிரயோகித்தனர். கல்லூரி வளாகத்தில் தேசியக் கொடி, கட்சிக்கொடிகள் தரித்த கார்களின் கூட்டத்தைப் பார்த்து மக்கள் வியந்து நின்றனர். தங்கள் சிக்கல்களெல்லாம் தீர்ந்துபோனதாய் ஆசுவாசப்பட்டுக்கொண்டனர். இரண்டு மூன்று தினங்கள் அங்கே ஒருங்கிணைப்பு மையம் ஒன்று செயல்பட்டதாகச் செய்திகள் வந்தன. நவம்பர் 16, 17 தியதிகளில் பளபளக்கும் சிவப்பு நிறத்தில் மீனவர்களுக்கு உயிர் காப்புக் கவசவுடையை வினியோகிக்கும் நாடகம் அரங்கேறியது. புகைப் படத்தில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, வட்டம் அரைவட்டங்களுடன் ஆபீஸ் கிளார்க் போல் ஆட்சியரும் நின்றிருந்தார். கட்டுக்கட்டாக ஈருருளிகளில் கவசவுடைகள் போய்க்கொண்டிருந்தன. ‘ஆனை வாங்குவான், அங்குசம் வாங்கமாட்டான்’ என்கிற பழமொழி மீனவர்களுக்கு நிரம்பவே பொருந்தும்போலும். முப்பது முதல் அறுபது இலட்சம்வரை முதல் போட்டு, கடன் புரட்டி, ஒரு விசைப்படகைக் கட்டுகிறார்கள். பாதுகாப்பு தொடர்பான எந்த முன்னேற்பாடுகளைக் குறித்தும் அவர்கள் கவலைகொள்வதில்லை. பத்துப் பன்னிரண்டு பேர் தொழில் பார்க்கும் படகில் இரண்டு உயிர்ப் பாதுகாப்பு வளையங்களைக் கூடப் பார்க்க முடியாது. அரசோவென்றால் மூக்கை அறுத்துவிட்டு முகத்தைத் தடவுகிறது. இலவசங்களை வாரிவீசி வாக்குகளை அள்ளும் திராவிட ‘பகுத்தறிவு’ அரசியல்வாதிகள் இனி மீனவர்கள் படகில் அணிந்துகொள்ள உள்ளாடைகளை இலவசமாய் வழங்கினாலும் வியப்பில்லை. முகத்தைத் தடவிக்கொடுத்தால் மூக்கு அறுபட்டதை மீனவர்கள் மறந்துவிடுவார்கள். கரைக்கு வராத முன்னூறு படகுகளுக்கு என்னவாயிற்று, எத்தனைபேர் உயிர் பிழைத்தனர், எத்தனை பேர் பத்திரமாய்க் கரைசேர்ந்தனர், மீட்பு, சிகிச்சை நடவடிக்கைகள் சரியாக நடக்கின்றனவா, கண்காணிக்கப்படுகின்றனவா, ஒருங்கிணைக்கப்படுகின்றனவா? மீனவர்களின் தரப்பில் யார் இதைச் செய்கிறார்கள்? என்று நாம் கேள்விகளை அடுக்கலாம். இவையெல்லாம் எங்கள் சக்தியை மீறிய விஷயங்கள் என்பது போன்ற அடிமட்ட பார்வைதான் மீனவர்களின் பதிலாக வருகிறது.
பேரிடர் நிகழ்ந்து ஒரு வாரத்துக்குப் பிறகு, ‘தூத்தூர் மீனவர் மீட்பு நடவடிக்கைகள் என்ன அளவில் போய்க்கொண்டிருக்கிறது’ என்று மாவட்ட ஆட்சியரிடம் ஒரு பாதிரி ஆர்வலர் தொலைபேசியில் கேட்டிருக்கிறார். ‘மீனவர்கள் தரப்பில் எந்தப் பிரதிநிதியும் எங்களிடம் வரவில்லை. சில பாதிரியார்கள் வந்தார்கள். பாதிரியார்கள் வழியாக மீனவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரியப்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறேன்’ என்று மாவட்ட ஆட்சியர் பதில் சொல்லியிருக்கிறார். அரசின் அரபிக் கடல் புயல் மீட்பு - நிவாரண நடவடிக்கைகள் சுனாமி மீட்பு / நிவாரண நடவடிக்கையின் நகல். பெருந்துக்கத்தில் மூழ்கியிருந்த தூத்தூர் இளைஞர் ஒருவரைச் சந்தித்துப் பேசினேன். உடைந்து மூழ்கும் படகிலிருந்து குதித்து வெளியேறி இன்னொரு படகால் மீட்கப்பட்டுக் கரைசேர்ந்தவர். ஒரு வருட காலத்திற்குள் இது அவருக்கு நேரும் இரண்டாவது இழப்பு. அவரது முந்தைய படகு தீ விபத்தில் மூழ்கிப்போனது. இழப்பின் வலியும் உயிர் மீந்துவந்த அதிர்ச்சியும் அவர் முகத்திலிருந்து அகலவில்லை. மாயமான எட்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு மீனவர் நலவாரிய நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்சம் நிதி வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாடு மீன் துறையின் பியான் புயல் கோப்பு அநேகமாக இத்துடன் மூடிப் பரண்மேல் எறியப்படும்.
கண்முன்னே மூழ்கிப்போன எதிர்காலம்
“மங்களூரிலிருந்து 80 கடல்மைல் (ஒரு கடல்மைல்-1.8 கிலோமீட்டர்) தொலைவில் வலைவிரித்திருந்தோம். (இடங்கணிப்பானின் குறியீட்டில் கிடைக்கோடு 13 டிகிரி, நெடுங்கோடு 70 டிகிரி) நாங்கள் மூன்றுபேர் வீலஸில் இருந்தோம், பின்னிரவுக் குளிர் கடுமையாக இருந்ததால் மற்றவர்கள் உள்ளே இருந்தார்கள். வேகமாக ஓடிவரும் சரக்கு உந்து எதன்மீதோ மோதுவதுபோல் வீலஸுக்குப் பின்னால் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தால் வயர்லெஸ் ஆன்டெனா ஒடிந்து கிடந்தது. புயலின் உக்கிரத்தில் எங்கள் படகைவிட இருமடங்கு உயரத்தில் அலைகள் எழுந்து படகின் மீது தொடர்ந்து மோதின. சற்றுநேரத்தில் படகு பாடியில் ஃபைபர்கிளாஸ் தகடு கழன்று வரத் தொடங்கியது. படகு பலகைக்கட்டு. தகடு கழன்றுவிட்டதால் படகு இனி எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும் என்று சொல்ல முடியாது. வயர் லெஸ் ஆன்டெனா உடைந்து போனதால் ரேஞ்ச் இரண்டு மூன்று நாட்டிக்கல் மைலுக்கு மேல் போகவில்லை. சற்று தொலைவில் கிடந்த ஒரு படகுடன் தொடர்பு கிடைத்தது. எப்படியாவது வலையை இழுத்துப் படகில் போட்டுவிட்டுக் கரையை நோக்கி ஓடிவாருங்கள், அதற்குள் நாங்கள் பக்கத்தில் வந்து விடுவோம்! என்றார்கள். படகு ஒரு முழம்கூட முன்னேற முடியவில்லை. காற்றும் கோளும் என்னைத் தளர்த்தியது. நாம் உயிர்தப்பிக் கரைசேருவோமா என்கிற பயம் என்னைப் பிடித்துக்கொண்டது. வலையை இழுத்துப் படகில் சேர்ப்பதற்குள் படகின் பலகைக் கட்டு இளகத் தொடங்கியது. மீண்டும் வயர்லசில் பேசினோம். ‘ஓடுகிறவரை ஓட்டி வாருங்கள், நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம்’ என்று பதில் வந்தது. படகுக்குள்ளே கசிந்து பீறிட்டு ஏறும் தண்ணீரை வெளியேற்றும் பம்புகள் ஸ்தம்பித்துவிட்டன. எல்லோரும் கையில் கிடைத்த சிறுசிறு பாத்திரங்களில் தண்ணீரை இறைத்து வெளியேற்றிக்கொண்டே படகைக் கரை நோக்கி ஓட்டிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் இயந்திரம் தண்ணீரில் மூழ்கி, அதன் இயக்கம் நின்றுவிட்டது. படகு சிறிது சிறிதாய்த் தாழ்ந்து போகத் தொடங்கியது. கையில் கிடைத்த கேன்களுடன் கடலில் குதித்தோம். எங்களை மீட்க வந்த படகு நெருங்கி வந்துவிட்டது. என் கனவு, என் மூலதனம், இரண்டாவது படகுக்கும் வாங்கிய கடன்களை அடைப்பதற்குமான மூலாதாரம், என் எதிர்காலம் எல்லாம் என் கண்ணெதிரே மொத்தமாய்க் கடலுக்குள் மூழ்கிப்போனது . . .”
மயிரிழையில் தப்பிய படகு
எங்கள் படகு 70 அடி ஸ்டீல் பாடி படகு. புயலடித்த வேளையில் நாங்கள் மகாராஷ்டிரா கடற்கரையிலிருந்து சுமார் 300 கடல்மைல் தொலைவில் இருந்தோம். திடீரென்று வீசிய புயல் வலையை முழுவதுமாக இழுத்துப் படகில் போடுவதற்கு அவகாசம் தரவில்லை. பாதி வலையை அறுத்துக் கடலில் விட்டுவிட்டோம். 15 நாட்டிக்கல் மைல் வேகத்தில் கரையைப் பார்த்து ஓடினோம். படகு முன்னே நகராது ஆற்றில் வெள்ளப்பெருக்கை எதிர்த்து ஒரு காகிதப் படகு போனால் எப்படியிருக்குமோ அதுபோலத் திணறியது. பலகைக் கட்டாக இருந்திருந்தால் எங்கள் படகு ஒரு மணிநேரம்கூடத் தாக்குப்பிடித்திருக்காது. கோடை வீசுவதுபோல் எங்கள் படகைப் புயல் வாரியெடுத்துப்போனது. அந்தக் காற்று கொஞ்சம் வேகம் குறைந்தபோது 42 நாட்டிக்கல் தொலைவுக்குத் தள்ளப்பட்டிருந்தோம். புயல் மீண்டும் வேகமெடுத்தபோது எங்கள் படகை மறுதிசையில் கொண்டு போனது. கொஞ்சம் நேரத்தில் 40 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு இழுத்துவந்தது. ஏறத்தாழப் புறப்பட்ட இடம் காற்றின் வேகம் கொஞ்சம் அடங்கிப்போகவே, அதிகபட்ச வேகத்தில் ஒரு நாள் முழுவதும் ஓடினோம். ஜிபிஎஸ் நாங்கள் வெறும் 11 நாட்டிக்கல் மைல்தான் கடந்திருப்பதாகக் காட்டியது. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு அரைகடல் மைல்கூட இல்லை. இவ்வளவு நகர்ந்ததே ஆச்சரியம் என்று மற்ற படகில் உள்ளவர்கள் சொன்னார்கள். நமது கரைக்குப் போக முயன்றால் தப்பிக்க முடியாது என்று தோன்றியது. குஜராத் கடற்கரையை எட்டுவது சுலபம். அடையும் சூரியனின் திசையைப் பார்த்துக் காற்று வீசிய திசையிலேயே ஓடிக் குஜராத் கரையை அடைந்தோம். புயல் ஓய்ந்து அமைதியான பிறகு அங்கிருந்து புறப்பட்டுக் கொச்சி வந்துசேர்ந்தோம்.
சிறுதொழில் மீனவர்களின் வாழ்க்கைப் பொருளாதாரமும் அடித்தட்டு மக்களின் உணவு சார்ந்த பொருளாதாரமும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. கட்டுமரத்திலும் சிறுபடகிலும் சென்று மீன் பிடித்தவர்கள் சிறுதொலைவுக்குப் போய்வந்தார்கள். மீன் கிடைக்கவில்லையென்றால் அன்று பிழைப்பு இல்லை என்பதுடன் பிரச்சினை முடிந்துவிடும். இன்று மீன்பிடித் தொழில் முதலீடு சார்ந்த தொழில். சில லட்சங்களை முதலீடு செய்து மோட்டார் படகை வாங்கும் மீனவனுக்கு அதை இயக்க எரிபொருள் வேண்டும். விசைப்படகுகளுக்கு சராசரியாக ஒரு நாள் பயணத்துக்கு 240 லிட்டர் டீசல் வேண்டும். நூறு நாட்டிக்கல் மைல் தொலைவுக்குச் சென்று மீன்பிடிக்கும் விசைப் படகுக்கு போக- வரப் பயணச் செலவு சுமார் 2000 லிட்டர் டீசல். படகில் வரும் தொழிலாளிகளுக்கு உணவு, பேட்டா, மீனைப் பத்திரப்படுத்த ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், இத்யாதி என்று ஒரு மீன்பிடி பயணத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகலாம். பாரம்பரிய மீனவன் தொழில்நுட்பத்தைச் சார்ந்து நிற்கத் தொடங்கிய பிறகுதான் ‘நஷ்டம்’ என்கிற புதிய சிக்கல் எழுந்தது. இடங்கணிப்பான், மீன்கூட்டப் பதிவுக்கருவி, காம்பஸ், வயர்லெஸ் தொடர்புக்கருவி உட்பட குறைந்தபட்ச வசதிகளுடன் விஞ்ச் பொருத்திய 50, 60 அடி விசைப் படகைக் கட்டி முடிக்க 50 இலட்சம் வேண்டும். தமிழ்நாட்டுக் கடற்கரையில் சுமார் 6000 மீன்பிடி விசைப் படகுகள் இருக்கலாம். இவர்கள் எரிபொருள் பெறுவதற்குத் தடையோட்டம் ஓடுகிறார்கள். இந்தியக் கடலில் மீன்பிடிக்கும் 713 மீன்பிடிக் கப்பல்களுக்கும் உற்பத்தி விலையில் (லிட்டர் டீசல் ரூபாய் 16) எரி பொருள் வழங்கும் நடுவண் அரசு, சிறு அளவில் தொழில்புரியும் பாரம்பரிய விசைப்படகு மீனவர்களுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய்தான் டீசல் மானியம் வழங்குகிறது.
மண்ணெண்ணெய்யை எரிபொருளாய்ப் பயன்படுத்தும் மோட்டார்ப் படகு மீனவர்கள் (Out board Mortor Boars) காவல் துறையால் தீவிரவாதிகளைப்போல் நடத்தப்படுகிறார்கள். திருச்செந்தூர் மணப்பாடு பகுதி மீனவர்கள் லிட்டருக்கு 50 ரூபாய்வரை கொடுத்து இந்த எரிபொருளைப் பெற்றுப் படகுக்குக் கொண்டு சேர்ப்பதற்குள் கடலில் நாள் முழுதும் மிதப்பதுபோல் தளர்ந்துபோகிறார்கள். செக்போஸ்ட்களில் நிற்கும் காவலர்கள் லிட்டருக்கு மூன்று ரூபாய் பேரம் பேசி இலஞ்சம் பெறுகிறார்கள்.
இந்தியக் கடலில் மீன்பிடித்து இந்தியக் கரைக்குக் கொண்டு சேர்த்து இந்தியர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கும் பாரம்பரிய மீனவனுக்கு எரிபொருள் சலுகையில்லை, வினியோகமில்லை; நடுக்கடலில் மீனைப் பாடம் செய்து அங்கிருந்தே மேலை நாடுகளுக்கு அனுப்பிவிடும் பெரிய கப்பல்களுக்கு உற்பத்தி விலையில் எரிபொருள் தாராள வினியோகம். இந்திய மீனவன் கொண்டுவரும் மீன் எல்லாத் தட்டுகளிலுள்ள மக்களுக்கும் எளிதாய்க் கிடைக்கும். கப்பல்கள் பிடிக்கும் மீன்கள் இந்தியக் கரைகளுக்கே வராது. குறிப்பிட்ட மீன்களைப் பொறுக்கியெடுத்துவிட்டு மற்றவற்றைக் கடலில் கொட்டிவிடுகின்றன. சராசரியாக ஒரு ஐரோப்பியன் ஆண்டுக்கு 15 கிலோ மீன் உண்கிறான். இந்தியர்களில் சரிபாதிப்பேர் மீன் உண்பவர்கள். சாதாரண உடல்நலத்துக்கு வருடத்துக்கு 15 கிலோ மீனாவது குறைந்தபட்சம் சாப்பிட வேண்டும். இப்போது இந்தியன் ஏழு, எட்டு கிலோ தான் சாப்பிடுகிறான். இந்திய மீன் உணவுத் தேவையில் 75 விழுக்காடுதான் பூர்த்தியாகியிருக்கிறது. அந்நியச் செலா வணியைச் சொல்லி மீதிமீன்கள் ஏற்றுமதியாகிவிடுகின்றன. வெளிநாடு மார்க்கட்டில் நமது மீனுக்குக் கிடைப்பதோ கிலோவுக்கு 186 ரூபாய். அதே மீனுக்கு இந்தியச் சந்தையில் கிலோவுக்கு 250 ரூபாய் கிடைக்கிறது. கப்பல்கள் பெறும் இந்த எரிபொருள் சலுகையின் பலன்கள்யாருக்குப் போய்ச் சேர்கின்றன? இந்தியாவில் நடுத்தர, கீழ்நடுத்தர மக்களின் நம்பகமான சத்துணவு மீன் மட்டுமே. நம் கடலிலுள்ள மீன்கள் கப்பல்களில் அறுவடையாகி நடுக் கடலிலிருந்து பார்சலாகி வெளி நாட்டுச் சந்தைகளுக்குப் போய்விடுகின்றன. நமது அரசு கண்களைக் கட்டிக்கொண்டு பாரம்பரிய மீனவர்கள்மீது கத்தி எறிகிறது. ஒருகாலத்தில் உயர்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் ஆழ்கடலுக்குப் போகவும் இந்த மீனவர்களைத் தூண்டியதும் ஆசை காட்டியதும் அரசுதான்.
கடலுக்குள் போவதும் யுத்தத்துக்குப் போவதும் ஏறத்தாழ ஒன்று தான். கடல் யுத்தத்துக்குத் தகவல் தொடர்புதான் உயிர்நாடி. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக முக்கியமானவை. இலங்கை என்னும் சின்னஞ்சிறு தீவுநாட்டிலிருந்தும் மீனவர்கள் தொலைவுக் கடலுக்குப் போய் மீன்பிடிக்கிறார்கள் - 800, 900 கடல் மைல் தொலைவுவரை. ஆழ்கடலில் இந்திய மீனவர்களுடன் ஊடாடுவதுண்டு. ஆழக்கடலில் சாதாரணமாக நங்கூரங்களைப் பயன்படுத்த முடியாது. ஆழக்கடலில் படகுகள் நீரோட்டத்தின் போக்கில் நகர்ந்துவிடாதிருக்க இலங்கை மீனவர்கள் கடல் பாரச்சூட் போன்ற கருவியை நங்கூரமாய்ப் பயன்படுத்துகிறார்கள். ‘ஆர்டிஎம்’ என்கிற தொலைத் தொடர்புக் கருவியில் வெகுதொலைவிலிருந்து அவர்களது நாட்டுடன் பேசிக்கொள்கிறார்கள். இந்திய மீனவர்களிடம் இது போன்ற எந்தத் தொலைதொடர்பு வசதியும் இல்லை. வயர்லெஸ் கருவியைப் பயன்படுத்தி சுமார்20 கடல்மைல் தொலைவுக்குள் இருக்கும் படகுகளுடன் மட்டுமே தொடர்புகொள்ள முடியும்.
நவம்பர் 9 புயல் குறித்து அரபிக் கடலில் வெவ்வேறு பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த படகுகளுக்கு முன்னெச்சரிக்கைத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்பது கவனம்கொள்ள வேண்டிய செய்தி. ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாவதைக் கணிக்க முடியும், தகவல்களைப் பரிமாறவும் வசதியுண்டு. ஐநூறுக்கு மேற்பட்ட ஆழ்கடல் விசைப்படகுகள் புயல் ஏற்பட்டபோது மஹாராஷ்ட்ரா கடற்கரையிலிருந்து சில நூறு கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தன. பேரிடர் குறித்த செய்தியை முன்கூட்டியே தெரியப்படுத்துவதும் அதை நிகழ்வின் போதும் பேரிடரைத் தொடர்ந்தும் படகுகள் கரையிலிருந்து உதவிபெறுவதற்கும் செய்தித் தொடர்பு மிக முக்கியமானது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் திருவனந்தபுரம் தொண்டு நிறுவனம் ஒன்று தூத்தூர் விசைப்படகு மீனவர்களிடம் மூன்று துரித உஷார் கருவி (Express Alert System) வழங்கியது. கடல் விபத்துச் சூழலில் இந்தப் பொத்தானை அழுத்தினால் செயற்கைக்கோள் மூலமாக சிக்னல் கொடுத்த இடத்தின் கிடைக்கோடு - நெடுங்கோடு புள்ளி கடற்படைத் தகவல் மையத்துக்குத் தெரிவிக்கப்பட்டுவிடும். கடலோரக் காவற்படை விரைவாக விபத்து நேர்ந்த இடத்துக்குப்போய் மீட்பு, உதவி நடவடிக்கையில் இறங்க முடியும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் உதவியுடன் இந்தச் சோதனை முயற்சி நிறைவேறியுள்ளது. ‘கோல்காம்’ நிறுவனத்தின் இந்தத் தயாரிப் பின் விலை ஐம்பதினாயிரத்துக்கு மேல். இயல்பு உற்பத்திக்கு வருகையில் விலை வெகுவாய்க் குறைந்துவிட வாய்ப்புண்டு. ஐம்பது இலட்சம் முதலீடு செய்து மீன் பிடிக்கப்போகும் விசைப்படகில் பத்து மீனவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு ஐம்பதினாயிரம் அதிக முதலீடு செய்வதன் நியாயம் எளிதில் விளங்கும். ஆழ்கடல் மீனவர்களுக்கு அரசு இதைச் சலுகைவிலையில் வினியோகிப்பது இலவசத் தொலைக்காட்சிப் பெட்டித் திட்டத்தைவிட முக்கியமானது. ‘உலக செயற்கைக்கோள் கண்காணிப்பு முறையில் (Global Satellite Monitoring System - GSM) மீன்பிடிப் படகுகளைக் கண்காணக்கவும் தொடர்புகொள்ளவும் மேலை நாடுகளில் ஏற்பாடுகள் உள்ளன. கடலில் இருக்கும் ஒவ்வொரு மீன வரையும் அடையாளம் காட்டும் வகையில் அடையாள சங்கேதக் குறியீடு கொண்ட (RFID) ஒரு வில்லையைப் பொருத்திக்கொள்வதும் எளிது. ஆந்திர முதல்வர் இராஜ சேகரரெட்டியை அடர்ந்த காடுகளுக்குள் தேடிக் கண்டுபிடிக்க உதவிய அதே செயற்கைக்கோள் தொலையுணரித் தொழில்நுட்பத்தைக் கடலில் பயன்படுத்துவது முடியாத காரியமல்ல. சதுரமீட்டர் சுத்தமாக நமது கடலைப் பதிவு செய்யும் அளவுக்கு நமது செயற்கைக்கோள் தொலையுணரித் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. சந்திரனில் தண்ணீரைக் கண்டுபிடித்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்திய வானியல் ஆய்வுத் துறைக்கு இது பெரிய விஷயமே அல்ல. மனம் வேண்டும். இந்தியாவின் பொருளாதார முற்றுரிமை மண்டலத்துக்கு உட்பட்ட கடற்பரப்பில் சக்திவாய்ந்த மிதக்கும் அலைபேசி சிக்னல் கோபுரங்களை நிறுவியும் ஆழ்கடல் படகுகளுடனான தொடர்பை உறுதிசெய்துகொள்ள முடியும். கரையில் ஒருங்கிணைப்பு மையங்களை நிறுவி நடுவண் அரசு மாநில அரசுத் தலைமைச் செயலகங்களுக்கு உடனடித் தகவல்கள் தெரிவிப்பதற்கு 24 மணிநேரத் தொடர்பு வசதியை நிறுவ முடியும் இவை எல்லாவற்றுக்கும் மேலாகப் பாரம்பரிய மீனவர்கள்மீதான ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் பார்வையில் மாற்றம் தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டின் மீன்வளச் சூழலை உற்றுநோக்கினால் மீனவர்களின் மீதான திட்டமிட்ட புறக்கணிப்பையும் ஒதுக்குதலையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. கேரளாவின் கடற்கரை 595 கிலோமீட்டர் நீளம் தான். அங்குத் தொண்ணூறு தூண்டில் வளைவுகள் உண்டு. இவை தவிர தேவைக்கேற்ப அரசு சிறுசிறு மீன்பிடித் துறைமுகங்களை ஆங்காங்கே அமைத்துக்கொடுத்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் வெகுசுதந்திரமாக அங்குள்ள துறைமுகங்களைப் பயன்படுத்த அந்த அரசு அனுமதிக்கிறது. அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழகத்தைச் சார்ந்த அறுநூறுக்கு மேற்பட்ட விசைப் படகுகளும் பலநூறு மோட்டார் படகுகளும் (பயணத்துக்கு மட்டுமே இயந்திரத்தைப் பயன்படுத்துபவை, தங்கள் அறுவடையை மொத்தமாய்க் கேரளாவில் கரையிறக்குகின்றனர். கேரளாவுக்குத் தொழில்கள் உருவாகின்றன. தமிழக மீனவர்களால் விளையும் மீன்வணிகமும் ஏற்றுமதியும் கேரளாவை வளப்படுத்துகின்றன. போதிய மீன்வள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைத் தமிழகக் கடற்கரையில் நிறுவியிருந்தால் இவ்வளவு வணிகத்தையும் தொழிலையும் வருவாயையும் தமிழ்நாடு இழந்திருக்க வேண்டியதில்லை. 1983இல் நிறுவப்பட்ட சின்னமுட்டம் துறைமுகம் உட்பட 12 துறைமுகங்களே உள்ளன. 1076 கிலோமீட்டர் கடற்கரையும் எட்டு இலட்சம் மீனவர்களும் இருக்கும் தமிழ்நாட்டில் இதுதான் நிலைமை. இருக்கும் வெகுசில துறைமுகங்களின் கெடுபிடிகளை மீனவர்களால் தாங்க முடியவில்லை. காலையில் போய் முன்னிரவில் வந்துவிட வேண்டும். மெரினாவில் நிறுவியிருக்கும் அண்ணா சமாதிபோலக் கடலில் மீன்கள் வைத்த இடத்தில் இருப்பவையல்ல. குறித்த நேரம் குறித்த இடம் போய்க் குறித்த அளவு கொண்டுவர கடல் ஒன்றும் ரெட்டி சகோதரர்களின் சுரங்கமல்ல. மீன்கள் தூங்குவதில்லை. ஓடிக்கொண்டிருக்கும் மீனைத் தேடிச் சென்று அறுவடை செய்யும் சவால் மிகுந்த தொழிலில் நேரக்கணக்கு என்பது அர்த்தமற்றது. ஆழ்கடல் மீன்பிடித்தலுக்குத் ‘தங்கல்’ தேவை. 200 - 300 கடல்மைல் பயணித்து அறுவடைக் களங்களைக் கண்டடைய வேண்டும். ஓரிடத்தில் மீன் இல்லை என்றால் மற்றோரிடம் போக வேண்டும். தமிழ்நாடு மீன்வளத் துறை இதைப் புரிந்துகொள்ளாமல் வாய்க்குள்ளே போன ஈயை வடம் போட்டு இழுப்பதுபோல் நடந்துகொள்கிறது.
விசைப்படகுகள் விடியற்காலை ஐந்து மணிக்குப் புறப்பட்டுப்போய் இரவு ஒன்பது மணிக்குள் கரை திரும்பிவிட வேண்டும் என்னும் விதி தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங் காற்றுச் சட்டத்தில் 1983இல்தான் சேர்க்கப்பட்டது. அப்போது திருச்செந்தூர் இடைத்தேர்தல் சூழலில் நாட்டுப்படகு - விசைப்படகு மீனவர்களுக்கிடையே ஏற்பட்டு வந்த மோதலைத் தொடர்ந்து இந்த விதியை எம்ஜியார் சேர்த்தார். ஆனால் தூத்துக்குடி, சின்னமுட்டம் துறைமுகங்களில் மட்டுமே இது கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படுகிறது. நாகப்பட்டினம், இராமேஸ்வரம் துறைமுகங்களில் நாட்டுப்படகுகளும் விசைப்படகுகளும் முறைவைத்துக் கடலுக்குள் போகின்றன. சென்னைப் பகுதியில் பல நாள் தங்கல் தொழில் அனுமதிக்கப்படுகிறது.
விசைப்படகுகளின் நீளத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கொள்கை வகுப்பவர்கள் சட்டத்தை இரும்புத் தூண்போல் முன்னிறுத்துகிறார்கள். மீன்பிடிப் படகின் நீளம் 49 அடியைத் தாண்டிவிட்டால் அனுமதி, காப்பீடு, சட்டதிட்டங்கள் எல்லாமே மாறிவிடும். கப்பலுக்கான சட்டதிட்டங்கள் திணிக்கப்படும். நீளமான வலைகள், இழுவைமடிகள், நெடுந்தூண்டில், நீண்டகாலத் தங்கலுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் தேவை, ஐஸ் கட்டிகள், தண்ணீர், எரிபொருள், மீன் சேமிப்பு அறைகள் - எல்லாம் சேர்ந்துகொள்ளும் போது படகின் பரப்பையும் நீளத்தையும் அதிகரித்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் உயர்தொழில் நுட்பமும் பெருமுதலீடும் இணைந்தே வருபவவை, அதிக உற்பத்தியைக் குறிவைப்பவை. அதிக மீன் உற்பத்திக்கு ஆழ்கடல் பயணமும் நீண்ட தங்கலும் அவசியம் என்னும் நிலையில் விசைப்படகின் பரிமாணத்தையும் பாதுகாப்பையும் அதிகரிப்பது தவிர்க்க இயலாதது. சவலைப் பிள்ளையின் அழுகுரல் எல்லோருக்கும் கேட்கிறது - தாயைத் தவிர. (வறீதையா)

Wednesday, 30 November 2011

புராணங்களின் மறுவாசிப்பு, பரதவர் வாழ்க்கை

      

பரதவர் வாழ்க்கை

சரித்திரக்கதைகளில் கொற்கையை முத்துக்கொழிக்கும் எழில்நகராகப் படித்து இருந்த சித்திரங்கள் நொறுங்கி, ரத்தமும் சதையுமாக மீன் வீச்சமும் கவிச்சியும் வீசும் சாதாரண மாந்தர்களின் கதையாக 19 &ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கி  சில தலைமுறைகளை விவரித்துச் செல்கிறார் ஜோ டி குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’ என்ற தன் முதல் நாவல் மூலமாக தமிழ் வாசக உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த இவர் கொற்கை மூலம் பரதவர்களின் சமூக வரலாற்றை கிறிஸ்துவத் தின் வருகை உட்பட்ட பலவற்றால் ஏற்பட்ட மாற்றங்களைப் பதிவு செய்துள்ளார்.  தோணி யும் கடலும் மாறாத திரைச்சீலைகளாக எழுந்து நிற்க, எண்ணற்ற மாந்தர்கள் உருவாகி காணாமல் போய்க்கொண்டே இருக்கும் மாபெரும் காட்சியை சுமார் 1174 பக்கங்களில் எழுதியிருக்கிறார். அம்மண்ணின் மைந்தர்களின் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அவ்வுலகுடன் தொடர்பில்லா தவர்களுக்கு புதிய அனுபவத்தையும் தருகிறது.       

' கொற்கை - ஜோ டி குரூஸ், விலை  ` 800. 
 நூல் வெளியிட்டோர்: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் & 629001.

முக்குவர் - தமிழ்நாடு - கேரளா - ஈழம்


பேரா. சிவத்தம்பி, இலங்கைத் தமிழர்களின் உணவுமுறை தமிழக உணவுப் பழக்கங்களிலிருந்து வேறுப்பட்டிருப்பதை (எடுத்துக்காட்டாக தேங்காய், மிளகு அதிகமாகவும், தயிர், மோர் ஆகியவை குறைவாகவும் பயன்படுத்துதல்) சுட்டுகிறார். இது கேரள உணவுமுறையை ஒத்திருக்கிறது. மேலும் இந்தியாவிலேயே தலித் மக்கள் நீங்கலாக மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்து எவ்விதத் தயக்கமும் மனத்தடையும் இல்லாத ஒரே இந்து சமூகமென்றால் அது மலையாளிகள் தான் என்று நினைக்கிறேன். ஈழத்தமிழரிடையே - குறைந்தபட்சம் மட்டக்களப்புத் தமிழர்களிடையே - மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்தத் தயக்கங்கள் அறவே இல்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்னார்.

கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் முக்குவர்கள் ஈழத்தமிழருக்கும் கேரளத்துக்கும் இடையே இருந்த வரலாற்றுத் தொடர்புகளுக்கு ஒரு முக்கிய சான்றாக இருக்கிறார்கள். முக்குளித்தல், முங்குதல் போன்றத் தமிழ் சொற்களிலிருந்து தான் முக்குவர் என்ற பெயர் தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. கேரளத்திலும் குமரிமாவட்டத்திலும் மீன்பிடித்தலையே தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவந்த/வரும் இவர்கள் பழங்காலத்தில் முக்குளிப்பவர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. (ஆனால் முக்குவர்களை மட்டக்களப்புப் பகுதியைத் தோற்றுவித்த மூத்தக்குடிகளாகச் சித்தரிக்கும் "மட்டக்களப்பு மான்மியம்" எனும் பழைய நூல் அவர்களை 'முற்குகர்' என்று விளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் அயோத்தியிலிருந்து படையெடுத்து வந்ததாகச் சொல்லி இராமாயணத்தோடு முடிச்சு போடப் படாதபாடு படுகிறது. சாதிப்பெயரை விருப்பப்படித் திரித்துப் பெருமை பேசுவது - எ.கா. சாணார் -> சான்றோர் - எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.)

இலங்கையின் வரலாற்றில் முக்குவர்களைப் பற்றிய ஏராளமானக் குறிப்புகள் காணப்படுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில் புத்தளம், மட்டக்களப்புப் பகுதிகளில் முக்குவத் தலைவர்கள் குறுநில மன்னர்களைப் போல செயல்பட்டார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கேரளக் கரையோரத்திலிருந்துப் படையெடுத்து வந்த முக்குவர்கள் இலங்கையின் மேற்குக் கரையிலுள்ள புத்தளம் பகுதியைக் கைப்பற்றிக் குடியேறினர் என்று 'முக்கர ஹட்டண' என்னும் சிங்கள ஓலைச்சுவடி சொல்கிறது. இதன் காரணமாக அப்போதைய சிங்கள அரசன் தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்துக் கரையர்களைத் திரட்டி அவர்கள் உதவியுடன் முக்குவர்களுடன் போரிட்டு வெற்றிபெற்று, பின் கரையர்களைப் புத்தளம் பகுதியில் குடியமர்த்தியதாக அந்த ஓலைச்சுவடி தெரிவிக்கிறது. இப்படிக் புத்தளத்தில் குடியமர்ந்த தமிழ் கரையர்கள் காலப்போக்கில் 'கரவே' என்ற பெயரில் சிங்களம் பேசும் சாதியாக மாறிப்போனது மொழி அடையாளத்தை இழப்பது எத்தனை எளிது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அப்பகுதியில் நீர்கொழும்பு போன்ற இடங்களில் வாழும் கரையர்களில் பலர் தங்கள் தமிழ் அடையாளத்தை இன்னும் இழக்காமல் இருக்கின்றனர். சரளமாக சிங்களம் பேசும் இவர்களில் பெரும்பாலானோர் இன்றும் தங்களுக்குள் இலக்கணம் சிதைந்த ஒருவிதத் தமிழில் (எ.கா. நான் போகிறேன் என்பதற்கு நான் போறா) தான் பேசிக்கொள்கிறார்கள்.

முக்குவர்கள் முதன்முதலில் மட்டக்களப்புப் பகுதியில் நுழைந்தபோது அங்கு ஏற்கனவே வாழ்ந்துவந்த திமிலர் என்னும் மீனவ சாதியினரோடு அவர்களுக்கு மோதல் ஏற்பட்டு, பின் இஸ்லாமியர்களின் துணையுடன் திமிலர்களை வென்று அப்பகுதியைக் கைப்பற்றினார்கள் என்று கருதப்படுகிறது. முக்குவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த நெருக்கமான உறவு சுவாரசியமானது மட்டுமல்ல கேரளத்துடன் ஈழத்துக்கு உள்ள தொடர்பைக் காட்டுவதாகவும் இருக்கிறது. கேரளக் கரையோரத்தில் மிகப் பழங்காலத்திலிருந்தே வணிகம் செய்து வந்த அரபு வணிகர்களுக்கும் உள்ளூர் மீனவ (முக்குவ) பெண்களுக்கும் இடையேயான திருமண/சம்பந்த உறவுகளை உள்ளூர் அரசர்கள் ஊக்குவித்ததால் நாளடைவில் முக்குவப் பெண்களுக்கும் அரபு ஆண்களுக்கும் பிறந்த ஒரு இனம் உருவானது. தங்கள் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களை உள்ளூர்காரர்கள் மாப்பிள்ளைகள் என்று அழைத்ததால் இந்த கலப்பு இனத்துக்கு மாப்பிளாக்கள் (Mappila/Moplah) என்ற பெயர் வந்தது என்று பல வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். (ஆனால் இன்றைய மாப்பிளாக்கள் இந்த வரலாற்றை மறைத்து மாப்பிளா என்பது 'அம்மா பிள்ளை' என்பதிலிருந்து வந்தது என்ற மொக்கையான விளக்கத்தை விக்கிப்பீடியா வரைக் கொண்டு போயிருக்கிறார்கள்.) மாப்பிளா என்பது ஒரு தனி சமூகமாக உருவான பின்னும் கூட அந்த சமூக ஆண்கள் முக்குவப் பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டு அப்படி பிறக்கும் ஆண் குழந்தைகளில் சிலர் மாப்பிளா சமூகத்திடம் கையளிக்கப்படும் முறை நிலவியது என்று தர்ஸ்ட்டன் தன்னுடைய புகழ்பெற்ற Castes and Tribes of South India நூலில் குறிப்பிடுகிறார். அரபுகளிடம் இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக முக்குவர்களில் பலர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி மாப்பிளா சமூகத்தில் இணைந்தனர். இதை வைத்து நோக்கும் போது இலங்கையின் கிழக்குப் பகுதியில் தாங்கள் தமிழர்கள் அல்ல என்றும் அரபு வம்சாவழியினர் என்றும் சொல்லிக் கொள்ளும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் வரலாறும் இதுபோன்றதாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது. கேரளத்திலிருந்து முக்குவர்களுடன் இஸ்லாமைப் பின்பற்றும் மாப்பிளாக்கள் வந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கேரளத்திலிருந்து இலங்கையில் அதிக அளவில் குடியேறிய மக்கள் சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களது மொழி மற்றும் பண்பாடு குறித்து சிலவற்றை விளங்கிக்கொள்ள உதவுகிறது. முன்னர் குறிப்பிட்ட பேரா. கார்த்திகேசு சிவத்தம்பியின் கட்டுரையில் முக்குவர்கள் வாழும் கிழக்குப்பகுதிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் உள்ள வேற்றுமைகளாக சிலவற்றை சொல்கிறார். மட்டக்களப்பு இந்துக்களின் மதச்சடங்குகள் ஆகம விதிகளைப் பின்பற்றாததாகவும் பார்ப்பனர்களின் தாக்கம் இல்லாததாகவும் இருப்பதாகவும் அங்கு முருகன் கோயில்களே அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். மேலும் யாழ்ப்பாணத்தில் சிறுதெய்வ வழிபாடு என்ற நிலையில் அதிக முக்கியத்துவம் இல்லாமல் உள்ள கண்ணகி அம்மன், திரௌபதி அம்மன் வழிபாடுகளுக்கு மட்டக்களப்பில் முக்கியமான இடம் அளிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார். இவற்றின் மூலமும் மாட்டிறைச்சி உண்ணுதல் போன்ற பழக்கங்களின் மூலமும் இப்பகுதியில் குடியேறியவர்கள் சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் பார்ப்பனிய சடங்குகளின் தாக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள் என்பது தெளிவாகிறது.

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நுழைந்த போர்த்துக்கீசியர்களும் அவர்களுக்குப் பின் வந்த மற்ற ஐரோப்பியர்களும் அங்கு வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களை ஒரு தவறானப் புரிதலின் காரணமாக மலபார்கள் என்றே அழைத்தனர். (மலபார் என்பது கேரளத்தைக் குறிக்கும் சொல்.) போர்த்துகீசியர் வருகைக்கு முன்பே கேரளத்திலிருந்து மக்கள் இலங்கையில் குடியேறியதற்கு வலுவான சான்றுகள் இருந்தாலும் பதினாறாம் நூற்றாண்டில் கேரளக் கரையோரமும் இலங்கை கடற்கரைப்பகுதிகளும் போர்த்துக்கீசியர் கட்டுப்பாட்டில் இருந்தக் காலத்தில் அவற்றிடையே கடல் வணிகமும், குடியேற்றங்களும், பண்பாட்டுப் பரிமாற்றங்களும் அதிகமாக இருந்திருக்கவேண்டும். மலையாள மொழியில் ஐரோப்பியர் வருகைக்குப் பின் புகுந்ததாகக் கருதப்படும் பல சொற்கள் ஈழத்தமிழிலும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எடுத்துக்காட்டாக மலையாளத்தில் உள்ள கசேர(நாற்காலி), தோக்கு(துப்பாக்கி), குசினி(சமையலறை) ஆகிய சொற்கள் ஈழத்தமிழில் முறையே கதிரை, துவக்கு, குசினி என்று வழங்குகின்றன.

*****

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். கேரளத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர் என்றால் இலங்கையில் ஏன் மலையாளம் பேசப்படவில்லை? மலையாள மொழியில் சமஸ்கிருத சொற்கள் மிக அதிக அளவில் கலந்திருக்கும் போது ஈழத்தமிழில் ஏன் சமஸ்கிருதக் கலப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது? இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் முக்கியமானவை.

சமூகங்களில் பிறமொழி கலப்பும் தாய்மொழி அழிப்பும் மேலிருந்துக் கீழாகவே நடைபெறும் என்பதற்கு உலக வரலாற்றில் எத்தனையோ சான்றுகளைப் பார்க்கலாம். தால்ஸ்தாயின் 'போரும் அமைதியும்' படிக்கும்போது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் அடித்தட்டு மக்கள் யாவரும் ரஷ்ய மொழி பேசிக்கொண்டிருக்க ரஷ்ய மேட்டுக்குடியினர் தங்களுக்குள் பெரும்பாலும் பிரெஞ்சு மொழியிலேயே பேசிக்கொண்டார்கள் என்பது தெரிகிறது. இன்று தமிழ்நாட்டில் பேசப்படும் தமிங்கிலத்தின் வேர்களை ஆராய்ந்தாலும் இந்தக் கருத்து உண்மைதான் என்பது புலப்படும். கேரளத்திலும் இதுதான் நடந்தது.

கேரளத்தில் (சேர நாட்டில்) சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வரைத் தமிழே பேச்சுமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இருந்த நிலையில் அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் வடநாட்டிலிருந்து வந்துக் குடியேறிய நம்பூதிரி பார்ப்பனர்கள் சமூகத்தில் முதன்மைப் பெற்றதால் தமிழுடன் சமஸ்கிருதச் சொற்களை அதிகமாகக் கலக்கும் மணிப்பிரவாள நடை தோன்றி நாளடைவில் அது மலையாளமாக உருமாறியது. ஆனால் மணிப்பிரவாளமும் மலையாளமும் 'உயர்'சாதியினரின் மொழியாகவும், அவர்கள் ஆதிக்கம் செலுத்திய அரசுகளில் ஆட்சிமொழியாகவும் இருந்தாலும் அடித்தட்டு மக்கள் தமிழ் மொழியின் வட்டார வழக்குகளையே தொடர்ந்துப் பேசி வந்தனர். தீண்டாமை என்பது 'காணாமை'யாக பரிமாண வளர்ச்சி அடையும் அளவுக்கு இங்கே சாதி அமைப்பு இறுக்கமடைந்துவிட்ட நிலையில் அடித்தட்டு மக்களுக்கு மலையாளம் பேசிய 'உயர்'சாதியினருடன் நேரடி தொடர்புகள் இல்லாததாலும், கல்வி மறுக்கப்பட்டதாலும் அவர்கள் மலையாளிகளாக மாறுவது அண்மைக்காலம் வரை நிகழவில்லை. இன்றும் கூட தனி சமூகமாக வாழும் கேரளப் பழங்குடியினரின் மொழி மலையாளத்தை விட்டு விலகியதாகவும் சமஸ்கிருதக் கலப்பற்றதாகவும் இருக்கிறது.

கேரளத்தில் கடந்த எண்பது ஆண்டுகளில் அனைவருக்கும் (மலையாள வழி) கல்வி என்ற நிலை ஏற்பட்டு சாதிகளிடையே ஊடாடல் அதிகரித்த பிறகே தமிழை மிகவும் ஒத்திருக்கும் பேச்சுவழக்குகளைக் கொண்டிருந்த பின்தங்கிய சமூகங்கள் செம்மையான மலையாளம் பேசத் தொடங்கினர். பல நூற்றாண்டுகளாக திருவிதாங்கூர் அரசில் இடம்பெற்றிருந்தக் குமரி மாவட்டத்தில் ஆதிக்க சாதியாக இருந்த நாயர்கள் மலையாளம் பேசுபவர்களாக இருக்க பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த நாடார்கள், மீனவர்கள், தலித்துக்கள் ஆகியோர் தமிழையே பேசிவந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைக்கப்படாமல் கேரளத்துடன் தொடர்ந்து இருந்திருந்தால் இம்மக்கள் அனைவருமே தற்போது முழு மலையாளிகளாக மாறி இருப்பர் என்பது உறுதி. நானும் இதைத் தமிழில் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.
கேரளத்திலும் இலங்கையிலும் தற்போது வாழும் ஒரே சாதியான முக்குவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழ் பேசுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டின் இவர்களிடையே மதமாற்றத்தை மேற்கொண்ட போர்த்துக்கீசிய/இஸ்பானிய பாதிரிகள் அதற்கு தமிழ் மொழியையேப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். கேரளத்தின் தென்பகுதியில் வாழ்ந்த முக்குவர்கள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்வரை குமரிமாவட்டத்தில் பேசப்படுவது போன்ற தமிழையே பேசிவந்தனர். அவர்களிடையே சில குடும்பங்களை நான் நேரடியாக அறிவேன். வீடுகளுக்குப் போனால் வயதானவர்கள் சரளமானத் தமிழில் பேசுவார்கள். இளையவர்களுக்கு தமிழ் புரியும் என்றாலும் பேசவராது. தகழியின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு பல விருதுகளை வென்ற செம்மீன் திரைப்படம் கேரள முக்குவர்களின் வாழ்க்கையைப் பற்றியது. முக்கியப் பாத்திரங்களின் பெயர்களிலிருந்தே (கருத்தம்மா, பழனி) அவர்களது தமிழ் மரபு விளங்கும். இப்படத்தில் வரும் பாடல்கள் - குறிப்பாக பெண்ணாளே, பெண்ணாளே என்னும் பாடல் - மிகவும் புகழ்பெற்ற ஒன்று. திருமணத்தின் போது மணப்பெண்ணை நோக்கி மற்றப் பெண்கள் பாடும் இந்த பாடல் கடலுக்குப் போகும் மீனவனின் மனைவி நெறி தவறினால் கடலம்மா அவனைக் கொண்டு போய்விடுவாள் என்ற மீனவர்களது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. (பாடலில் வரும் அரயன்/அரயத்தி ஆகிய சொற்கள் முக்குவரில் ஒரு பிரிவினைக் குறிப்பவை. படிஞ்ஞாறு என்பது மேற்குத் திசையைக் குறிக்கும் 'படு ஞாயிறு' என்னும் பழந்தமிழ் சொல்லின் திரிபு -jegath